சாப்பிட்டுப் படுங்க!"
" என்ஜாய், மாப்ளே!" குணவதி ஆடை மாற்றியதும் வெளியே வந்தாள். சோமு உடை மாற்றிக் கொள்ளாமல் அவளுடன் கிளம்பினான்.
செக்யூரிடி அவர்கட்கு சல்யூட் அடித்து, " டிரைவரை கூப்பிடணுமா?" என்றான்.
" வேண்டாம், நீ நல்லா இருக்கியா? சுகமா இருக்கியா?"
" ஐயா தயவிலே, சுகமா இருக்கேங்க....."
" சுகமான்னா? உடம்பு சௌக்கியத்தை சொல்றியா, மனசு சந்தோஷத்தையா?"
செக்யூரிடி தலையை சொறிந்தான்.
" தைரியமா சொல்லு!"
" எங்களைப்போலுள்ள ஏழைங்களுக்கு கஷ்டநஷ்டம் எல்லாம் பழகிப்போய்ட்டதால் மனசு எப்பவும் சந்தோஷமாக இருக்குங்க, ஆனா உடம்பு தான் சுகமில்லாம அப்பப்போ படுத்தும், அதுக்கெல்லாம் பயப்பட மாட்டோங்க, மனசு சுகமாவே இருப்போம். ஏன்னா, எங்களுக்கு பெரிய ஆசையெல்லாம் கிடையாது, கிடைச்சதைக் கொண்டு சந்தோஷமா இருப்போம்..."
குணவதியும் சோமுவும் தலை குனிந்து நடந்தனர்.
மனதின் சுகத்தைப் பறிப்பது, ஆசை என்பதை புத்தன் சொன்னதைவிட, இவன் பளிச்சுனு சொன்னான்
சாலையில் ஒரு கடை அருகே சிறு கும்பல்!
எட்டிப் பார்த்தனர், சோமுவும் குணவதியும்!
அந்தக் கடையில் இட்லி, வடை விற்பனை! ஓட்டல்களைவிட விலை மலிவு! ஏழைகள் பசியாற வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
" நல்லா இருக்கா?" " வாங்கி சாப்ட்டு பாருங்க, அப்பத்தான் அந்த சொகம் புரியும்!"
இருவரும், 'சொகம்' என்ற சொல்லைக் கேட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
" ஐயா! எங்க பசிக்கு நெறய துண்ணனும், ஓட்டல் கட்டுப்படி ஆகுங்களா? வெறும் வயத்துல, இட்லியும் வடயும் போய் வுளுந்ததும், மனசு ஜிவ்வுனு குஷியாயிடும்!"
இருவரும் மேலே நடந்தனர்.
டீக்கடை! அங்கு ஒரு பெஞ்சில், சிலர் அரட்டை அடித்தவாறே டீ குடித்தனர். ஒரு ஓரமாக, ஒரு பிச்சைக் காரனும் டீ குடித்துக் கொண்டு இருந்தான். அவன் முகத்திலே, மலர்ச்சி!
இருவரும் அவனை பார்த்ததும், அவன் சிரித்தபடி அருகே வந்து, " இந்த சிங்கிள் டீயை மெதுவா உறிஞ்சி உறிஞ்சி குடிக்கறப்ப உள்ள சொகம், வராதுங்க, வேற எதிலியும்!"
சோமு அவனுக்கு காசு கொடுத்து பன், ரொட்டியும் சாப்பிடச் சொல்லிவிட்டு, நகர்ந்தான்.
" மகராசனா நல்லா இருக்கணும்.......!"