"அப்புறம் என்ன?"
கிழவன் சிரித்தான்.
"அப்பறம் பாபுமாருக்குப் புரியும் நான் பாவியில்லேன்னு.."
***
கிழவன் சாகும் விரதம் தொடங்கிவிட்டான். அவன் சாப்பிடாமல் கொள்ளாமல் மௌனமாகப் படுத்துக் கிடந்தான்.
கிழவியின் பேச்செல்லாம் தீர்ந்து போய்விட்டாற் போலிருந்தது. அவள் பேசாமல் உட்கார்ந்து பார்த்துக் கொண் டிருந்தாள். ஐயோ, அவளோட கிழவன் காணாமல் போயிட்டான். அவள் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட அவனுக்கு நேரமில்லை. அழுவது வெட்கக்கேடு; ஆகையால் அழக்கூட முடியவில்லை அவளால்.
அவர்கள் அடைபட்டிருந்த வீட்டுக்கு வெளியிலிருந்த மக்களின் கூப்பாடு கேட்டது, "கடவுளே, எங்க தலைவனைக் காப்பாத்து!
ரத்தன்லாலும் அவனுடைய தோழர்களும் சோர்ந்து போய் விட்டனர். கிழவியால் சும்மா இருக்க முடியவில்லை. கிழவனிடம் ஏதாவது சொல்லவும் துணிவில்லை அவளுக்கு. அவள் மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்டாள், "இவ்வளவு ஜனங்களுக்காக, எனக்காக, கிழவனைக் காப்பாத்து, கடவுளே!"
கிழவனின் மனதைவிடக் கடவுளின் மனது மிருதுவானது என்று கிழவிக்குத் தோன்றியது.
கடவுள் சிரிக்கிறார் என்று நினைத்தாள் கிழவி.
***