கிழவன் சாகவில்லை. சாவுக்கான அறிகுறிகள் எல்லாம் தோன்றின. சாஹுக்கள் மருத்துவர்களை அனுப்பினார்கள். அவர்கள் "எங்களால் முடியாது! மனுசன் சாப்பிடலேன்னா பொழைக்க மாட்டான், பொழைக்க முடியாது," என்று சொன்னார்கள். ஆனால் ஆச்சரியம், கிழவன் பிழைத்து விட்டான்! அதைவிட ஆச்சரியம், கிழவனின் கள்ளங்கபடமற்ற, குழந்தைத் தனமான புன்சிரிப்பு அவனுடைய முகத்திலிருந்து ஒரு கணங்கூட மறையவில்லை. கொஞ்சங் கொஞ்சமாகக் கிழவனின் மரண அறிகுறிகள் மறைந்துவிட்டன. குழம்பியிருந்த கண்கள் தெளிவடைந்த பின், அவற்றில் வெண்தாமரையிதழ்களின் ஒளி மலர்ந்தது. தாயின் மடியில் இருக்கும் குழந்தைநயின் முகம்போல் கிழவனின் முகம் பிரகாசமாயிற்று. கிழவன் சொன்னான், "நான் பொழைச்சிட்டேன். நான் பாவம் செய்யலேன்னு கடவுள் என் மனசுகிட்டே சொல்லிட்டார்."
கிழவியின் முகத்தில் புன்சிரிப்பு,
"நான் இப்போ சாகப் போறேன்!" என்றாள் அவள்.
"ஏன்?"
"எனக்கு ஒடம்பு ஒரு மாதிரியா இருக்கு, தவிர..."
"தவிர என்ன?"
கிழவி பதில் சொல்லவில்லை. சும்மா சிரித்து மழுப்பினாள்.
அவள் உண்மையிலேயே இறந்து போனாள். சாதாரணக் காய்ச்சல்தான். அந்தக் காய்ச்சலில் இறந்து போனாள் அவள். சாகும் தருணத்தில் அவள் கண்ணிமைக்காமல் கிழவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மக்கள் சொல்வது சரிதான், கிழவனின் மனம் கல்.
இல்லை, ஜனங்கள் சொல்வது சரியில்லை, சரியில்லை, காரணம், கிழவனின் கண்களில்