சிறுகதை - ஐயம் தீர்க்கும் ஆசான் (அசோகர் கதைகள்) - பாவலர் நாரா. நாச்சியப்பன்
அது ஒரு சிறு கிராமம். சுற்றிலும் வயல்கள் குழ்ந்து ஆங்காங்கே சிறுமரத் தோட்டங்கள் நிறைந்து அந்தக் கிராமம் அழகான தோற்றத்துடன் விளங்கியது. அழகான கிராமம் என்பதைத் தவிர அதற்கு வேறு ஒரு சிறப்பும் இருந்தது.
பாடலி புத்திரத்திலிருந்து புத்தகயா போவதற்கும், காசியிலிருந்து ராஜகிரி போவதற்கும் இடையே அந்தக் கிராமம் இருந்தது. வழிப் போக்கர்கள் சநிதித்துக் கொள்ளும் மைய ஊராக அது விளங்கியது.
அதனால் உழவுத் தொழிலைத் தவிர அந்தக் கிராம மக்கள் மற்றொரு தொழிலும் செய்து பிழைத்துக் கொள்ள வழியிருந்தது. வழிப்போக்கர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து, அவர்கள் தரும் பணத்தைப் பெற்றுக் கொள்வது தான் அந்தத் தொழில்.
விருந்தினர்களை வரவேற்று உபசரிக்க வேண்டும் என்கிற பண்பாடெல்லாம் எப்போதாவது அத்தி பூத்தாற் போல் வருகிற விருந்தினர்கள் விஷயத்தில்தான் கையாள முடியும். நாள்தோறும் விருந்தினர் வந்துகொண்டேயிருந்தால் அதெல்லாம் நடைபெறக் கூடிய காரியமா, என்ன? அதற்காக அந்த ஊர்க்காரர்கள் வருகிற விருந்தினர்களை விரட்டியடித்து விடவில்லை. அவர்களே உபசரிப்பதையே ஒரு தொழிலாக மாற்றிக் கொண்டு விட்டார்கள்.
இருக்க இடமும் உண்ண உணவும் தேடி வருபவன், அவை அடியோடு கிடைக்காவிட்டால்தான் வருத்தப்படுவான். காசு கொடுத்துக் கிடைக்குமென்றால் நல்லதாகப் போயிற்று என்றுதான் எண்ணிக் கொள்வான். முன்பின் தெரியாதவர்களிடம் பழகுகிற கூச்சம் சிறிதும் இல்லாமல் பழக முடியுமல்லவா? இந்த மாதிரியான நேரங்களில் காசு செய்கிற உதவி பெரியதுதான்.
அந்த ஊரின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் மாமன்னர் அசோகர் அங்கே ஒரு சத்திரம் கட்டும்படி ஏற்பாடு செய்தார்.
சத்திரம் ஏற்பட்ட பிறகு அந்த ஊரின் சிறப்பு மேலும் அதிகமாயிற்று. வழிப்போக்கர்களுக்கும் நல்ல வசதியாயிற்று.
சத்திரத்து அதிகாரிகள் வழிப்போக்கர்களின் தராதரத்தையறிந்து வாடகை வசூலித்தார்கள்.