முதலில் அவர் அவனுடைய சுதந்திர உணர்ச்சியையும் வேட்கையையும் பாராட்டினர். அவன் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டுமென்பது தன் குறிக்கோளல்ல என்பதை விளக்கிக் கூறினர். நாட்டு நிலைமையைப் படம் பிடித்துக் காட்டினர், சுதந்திரமாக அவன் தனியரசு ஏற்படுத்திய பின் பிற அரசர்களும் பேரரசை எதிர்த்துக் கிளர்ந்தெழக் கூடும் என்ற உண்மையை ஒளிவு மறைவின்றி அவனுக்கு எடுத்துரைத்தார். தனியரசுகள் பலப்பல ஏற்பட்டபின், அவற்றுள்ளே வலிமை மிக்க ஒன்று மற்றவற்றை அடக்கியாள முற்படும் என்ற பின் விளைவை விளக்கினர். அப்போது மீண்டும் அந்தச் சிற்றரசன் வேறு வழியின்றி ஒரு பேரரசுக்கு ஆட்பட நேரிடும் என்பதையும் எடுத்துரைத்தார். எதிர்த்துப் போரிடாத அசோகரிடமிருந்து விடுதலை பெற்று, மீண்டும் கொடுமையான போருக்கு உயிர்ப்பலி கொடுத்து அடிமைத் தனத்தை விலைக்கு வாங்க நேரிடும் என்பதை அவர் அந்தச் சிற்றரசனுடைய மனத்தில் பதியும்படி எடுத்துக் கூறினர். இத்தனை மாறுபாடுகளுக்கும் இடையிலேயே நாடெங்கிலும் ஏற்படக் கூடிய குழப்பம், கொள்ளை, கலகம், உயிர்க்கொலை, கட்டம், அழிவு எத்தனை, எவ்வளவு என்பதெல்லாம் எடுத்துரைத்தார்.
கடைசியாக, அவன் தன் அழைப்பை மதித்து வர மறுத்ததைக் கண்டித்து விட்டு, தன் ஆட்சியில் அவன் சுதந்திரத்திற்கோ, சுதந்திர உணர்ச்சிக்கோ பாதகமாக தான் கடந்து கொண்டிருக்கிறாரா என்று கேட்டார்.
முன்னோர்கள் போரிட்டுச் சேர்த்த பேரரசைக் கட்டிக் காத்துவருவதைத் தவிர அசோகர் எந்த அரசரையும இழிவாக நடத்தியதில்லை. எல்லோரையும் சிறப்பாகவே நடத்தி வந்தார். குடிமக்கள் எவ்வாறு அசோகரைப் போற்றி மதித்து வந்தார்களோ அவ்வாறே சிற்றரசர் அனைவரும் அவரைப் போற்றி மதித்து வந்தார்கள். அவர்கள் அசோகரின் பேரரசுக்கு ஆட்பட்டிருந்தார்கள் என்பதைத் தவிர வேறு எவ்விதமான குறைபாடுகளும் அடையவில்லை.
அசோகருடைய பேச்சு அந்தச் சிற்றரசனுடைய மனத்தைத் தொட்டது. தான் சுதந்திர அரசு நிறுவிய பின் தன் சிற்றரசுக்கு நேரிடக்கூடிய கதியைத் தன்னைக் காட்டிலும் அசோகர் தெளிவாக அறிந்திருக்கிறார் என்பதை அவன் உணர்ந்தான்.
அன்பு வழியில் ஒரு பேரரசை நிலை நாட்ட அசோகர் கொண்டிருக்கும் உண்மையான வேட்கையை அவன் மனம் ஆதரித்தது.