"வேணுமின்னா இருந்து பாத்துட்டுப் போ. இல்லன்னா ஒன் இஷ்டம்!"
"பள்ளிக்கூடம்?"
"--ர் பள்ளிக்கூடம்"
கேசவனின் அந்தத் துணிவும் அலட்சியமும் கருத்தில் கொண்ட காரியத்தில் உறுதியாக நிற்பதும் தனக்கு ஏன் வரமாட்டேனென்கிறது? ஏன் பயமும் கோழைத் தன்மையுமே முன்னால் நிற்கின்றன? இந்த விஷயத்தில் பின்வாங்கிக் கேசவனின் முன்னால் தலைகுனிந்து வாலைச் சுருட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு ஓட மனம் ஒப்பவில்லை. போனாலும் மனசு தவறிப் போன வீடியோவின் ஏக்கத்திலேயே இருக்கும்.
இருந்து பார்த்துவிட்டுப் போய்விடுவது என முடிவு செய்தான் முத்தையா. "சரிடா!" என்றான்.
"அப்ப நீயும் வா! மோட்டார் சைக்கிள்ளியே போயி கையோட வாங்கிட்டு வந்திரலாம்!" என்றான் கேசவன்.
"ரெண்டு பேருமா? ஒனக்கே லைசன்ஸ் இல்லையே...!" என்று தயங்கினான் முத்தையா.
"நீ இப்படித்தாண்டா, பொட்டப் பயந்தாங்கொள்ளி!"
"சரி, வா போலாம்" என்றான் முத்தையா.
*** *** ***
"நிச்சயமா தெரியுமா கமலா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் பார்வதி.
"நிச்சயமா ஒம் மகன்தான். அப்படியா எனக்குத் தெரியாமப் போகும்?" என்றாள் கமலா.
பார்வதி கமலாவின் முகத்தைப் பார்த்தவாறு அதிர்ந்து நின்றாள்.