"அந்த கேசவன் ரொம்ப கெட்டவன் பார்வதி. பொய், திருட்டு எல்லாம் இருக்கு. ஆபாச வீடியோ வியாபாரம் பண்றவங்களோட சேந்து இவனும் வியாபாரம் பண்றானாம். என் மகன்கிட்ட கூட வாங்கிப் பாக்கிறியான்னு கேட்டானாம்!"
பார்வதிக்கு மனசு ஆடிப் போனது. உடம்பும் கூட ஆடியது. செய்யும் வேலை மறந்து விட்டது. அப்படியே நின்றாள்.
"என்ன பார்வதி?" என்று அருகே வந்தாள் கமலா.
கண்ணீர் பொலபொலவென கொட்டியது. துடைத்துக் கொண்டே சொன்னாள்: "அவங்கிட்ட கெஞ்சி பாத்திட்டேன் கமலா. அடிச்சி பாத்திட்டேன். அடிச்ச பிறகு கொஞ்சியும் பாத்திட்டேன். இனிமே அவனோட சேரமாட்டேன்னு இல்லாத சத்தியமெல்லாம் பண்ணிட்டான். அப்படி பண்ணிட்டு இப்படி ஏய்ச்சிட்டானே.... நான் என்னதான் பண்ணுவேன்?"
அவளுக்கு ஆறுதல் கூற முடியாமல் கமலாவும் அயர்ந்து நின்றாள்.
*** *** ***
வீடு திரும்பும் போது முத்தையாவுக்கு குற்ற உணர்ச்சிதான் அதிகமாக இருந்தது. வீடியோ பார்க்கும் போது இருந்த கிளர்ச்சிகள் எல்லாம் குறைந்து விட்டிருந்தன.
வீடியோவைத் தேடி ஓடி காத்திருந்து வாங்கி கேசவனின் வீட்டில் ஜன்னல்களையெல்லாம் அடைத்துவிட்டு போட்டுப் பார்த்து முடித்ததில் நேரம் போய்விட்டது. இனி பள்ளிக்கூடம் போவதில் அர்த்தமில்லை என்று தோன்றியவுடன் கண்ட இடத்தில் அலைந்து விட்டு வீட்டுக்குத் திரும்பும் சரியான நேரத்திற்குத் திரும்பினான்.
வீடு திரும்பும் வேளையில் அம்மா வீட்டில் இருக்க மாட்டாள் என்பது ஆறுதலாக இருந்தது. இருந்தாலும் அக்கம் பக்கத்தார் பார்க்கக்கூடும் என்பதற்காக இந்த நடிப்பு தேவையாக இருந்தது.