(Reading time: 9 - 18 minutes)

தீ – பூர்ணிமா

This is entry #27 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

"திகாலை காற்றே நில்லு. இதமான பாடல் சொல்லு!" 

ஏதோ ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பாடல் ஓலித்துக் கொண்டு  இருந்தது. சோபாவில் பட்டும்படாமல் உக்கார்ந்து இருந்தாள் ரேவதி. இரண்டு நாட்களாக நின்றுகொண்டே இருந்தது காலெல்லாம் வலி எடுத்தது. புடவையின் கசகசப்பு, மலர்களின் பாரம், கண்ணைச் சிவக்க வைத்த ஒளிவெள்ளம், கண்ணுக்குள் விழுந்த திருநீறு, குங்குமம் என எல்லாம் அயர்ச்சியைத் தந்தாலும், சுகமாகவும் இருந்தது. புன்னகைத்துக் கொண்டே இருந்தது உதட்டின் ஓரம் ஒரு வலியை உண்டு பண்ணிவிட்டது.  சற்றுக் குனிந்து தனது கழுத்தைப் பார்த்தாள், புதிதாக இன்று தனது கழுத்தில் வந்த திருமாங்கல்யம் ஜொலித்தது. அறியாத ஒரு பயம் மனதுக்குள் பூத்தது.

ஓரக்கண்ணால் தனது கணவனைப் பார்த்தாள், உயரமாக, ஆஜானுபாகுவாக, நல்ல கருப்பான நிறத்தில் இருந்தான் அவளின் கணவன். அவன் பெயர் திவாகர், ஒரு வாகன வன்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் பெரிய பதவியில் இருப்பவன் . அம்மா, அப்பா, தங்கை என்று சிறிய குடும்பம். பெரிய அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கிறார்கள். திவாகரின் சித்தப்பா, பெரியப்பா குடும்பமும் அதே குடியிருப்பில் வெவ்வேறு தளங்களில் வசிக்கிறார்கள்.

Thee

இதெல்லாம் தான் அவளுக்கு நான்கு வாரங்களுக்கு முன் தெரியும். நேரம்கூடி வந்ததென்று வீட்டுப்பெரியவர்கள் ஒரே மாதத்தில் நிச்சயம் செய்து அதே வேகத்தில் திருமணம் செய்துவைத்து இன்று இங்கே வந்து இது தான் இனி உன் வீடு என்று விட்டுவிட்டும் சென்று விட்டார்கள். திவாகர் எந்நேரமும் வேலை, வேலை என்று இருப்பவன். அவனும் இந்த ஒரு மாதத்தில் அவளிடம் பேச முயற்சி எடுக்கவில்லை. அவளும் அதைச் செய்யவில்லை. அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறதா என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. அவனை எப்படி அழைப்பது என்று கூட அவளுக்குப் புரியவில்லை. இந்த நவநாகரிக உலகத்தில் இப்படியும் ஒரு கல்யாண தம்பதிகள்.

வளின் மாமியார்,

"ரேவதி! வாம்மா சாப்பிடலாம்!" என்று கூப்பிட,

"அவர் கூடவே சாப்பிடுறேன் அத்தை" என்றாள்.

"போதும்டா திவா! அந்த லேப்டாப்பைக் கொஞ்சம் அணைச்சு வை! உனக்கு இன்னிக்குத்  தான் கல்யாணம் ஆகிருக்கு! உன் பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா! போடா சீக்கிரம் சாப்பிடு! அவளும் சாப்பிடாமல்  உக்கார்ந்துட்டு இருக்கா!

அதைக் காதிலேயே வாங்காதவன் போல, திவாகர் மடிகணினியில் இருந்து கண்ணை எடுக்கவில்லை. அதையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

"ரேவதி! உறவுக்காரங்க எல்லாரும் பக்கத்திலே குடியிருக்கறதால அவுங்கவங்க வீட்டுக்குப் போய்ட்டாங்க. நீ கூட்டுக் குடும்பத்திலே வளர்ந்த பொண்ணு, வெறிச்சோடி இருக்குன்னு நினைச்சிக்காத! எனக்கும் ரொம்ப டயர்டா இருக்கும்மா. நானும் மாமாவுக்கும், பிரியாவுக்கும் சாப்பாடு எடுத்துவச்சிட்டு தூங்கப் போறேன். திவாவைச் சாப்பிட சொல்லி, நீயும் சாப்பிட்டுடும்மா!" சொல்லிவிட்டு அத்தை உள்ளே போய்விட்டார்கள். 

அவளின் பிறந்த வீடு பெரியது, பதினெட்டு மாடிக் குடியிருப்பல்ல. ரெண்டே மாடிதான். எல்லாரும் ஒன்றாக இருக்கிறார்கள். தாத்தா, பாட்டி, இரண்டு சித்தப்பா, ஒரு அத்தை என்று கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். “தாத்தா இந்தாங்க தோசை!” என்று தட்டை நீட்டினால்,  “கல்யாணப் பொண்ணு!” என்று செல்லமாகக் கன்னம் கிள்ளுவார் தாத்தா. காலிப்ளவர் ரோஸ்ட் சித்தப்பா செய்து கொண்டு வந்து, “அடடா நீ போய்விட்டால் யாருக்கு நான் செய்து கொடுப்பது?” என்பார். துவைத்துக் காயப்போட்டு இருக்கும் துணியைக் கொடியில் இருந்து எடுத்து வந்தால் கூட, கல்யாணப் பொண்ணு, மாடிக்குப் போகாத வெயில் படும் என்று சித்தி சொல்வார்கள். இந்த வீட்டில் வந்து இப்படி தனியாக விட்டுவிட்டார்களே என்று ரேவதிக்குத் தோன்றியது. திவாகரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை, தன்னை அவனுக்குப் பிடிக்கவில்லையோ என்று அவளுக்குப் பயமாக இருந்தது.

ரவு மணி ஒன்பதைத் தொட சில நொடிகள் தான். திடீர் என்று எதோ வெடித்தது போல பலமான  சத்தம், அந்த ஒரு நிமிடம் கட்டிடமே குலுங்கியது. ரேவதி அதிர்ந்து லேசாக ஹாலின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். ஒரு நெருப்புத் துண்டம் கீழே விழுந்தது, கீழே நின்றுகொண்டு இருந்தவரின் காலின் அருகே அந்த நெருப்புத் துண்டு விழுந்தது. லேசாக அவர் காலில் தெறித்தவுடன் காலே துண்டாக வெட்டப்பட்டது போல உணர்ந்தார். எல்லாரும் வெடிச்சத்தம்கேட்டு, அதிர்ச்சியில் எழுந்து ஓடி வந்தனர், பதினாறாம் மாடியில் உள்ள வீட்டில் தீப்பிடித்து எரியும் வெளிச்சம் தெரிந்தது. பில்டிங் அசோசியேஷன் தலைவர் பதறி ஓடி தீயணைப்பு நிலையத்துக்குப் போன் செய்தார். எல்லாரையும் கீழே இறங்கி வரச்சொன்னார். குடியிருப்பில் இருந்த அனைவரும் வேகமாகக் கீழே இறங்கி குழந்தைகள் விளையாடும் திறந்தவெளி இடம் நோக்கி ஓடினர். ரேவதியின் மாமியார், மாமனார், நாத்தனார் ப்ரியா மூவரும் எழுந்து ஓடிவந்தனர். அப்போதும் தன்னிலை மறந்து மடிக்கணினியைப் பார்த்துக் கொண்டு இருந்தான் திவாகர்.

"ஏய் திவா! என்னடா வேலை பார்த்துட்டு இருக்க? பதினாறாவது மாடி சூபர்வைசர் வீட்டுல தீப்பிடிச்சு  எரியுது, எல்லாரையும் கீழ போக சொல்லிட்டு இருக்காங்க. வேகமா வா!"

“ரேவதி வாம்மா! கீழே போவோம்!”, ரேவதியின் மாமனார் கூப்பிட, திவாகர் அசையவில்லை. அவனைக் கையைப் பிடித்து ப்ரியா இழுக்க, எழுந்து பின்னாலேயே வந்தான். திவாகர் கணினியைக் கீழே வைக்காமல், கையோடு எடுத்துக் கொண்டே வந்தான். மெய்மறந்த நிலையில் இருப்பது போல இருந்தான். ரேவதிக்கு பயமாகவும் கூச்சமாகவும் இருந்தது.

கீழ் தளத்தை அடைந்ததும் திறந்தவெளியில் எல்லாருடனும் சென்று சேர்ந்து அமர்ந்து கொண்டனர். திவாகர் மட்டும் வாட்ச்மேன் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டான். தீயணைப்பு வண்டி வந்தது, காவல் துறைக்கும் தகவல் சொல்லியதால் காவலர்கள் சிலரும் வந்தனர். விரைந்து பதினாறாவது தளத்துக்குச் சென்றனர். கட்டிட உரிமையாளர் அங்கு இருந்தார். யாருக்காவது ஏதேனும் உதவி வேண்டுமென்றால் சொல்லச் சொன்னார். எல்லாரும் இரவுச் சாப்பாடு முடித்து இருக்க மாட்டார்கள் என்று எண்ணி எல்லாருக்கும் இரவு உணவு தனது செலவில் வரவழைத்து இருந்தார். ரேவதிக்குப் பசி எடுத்தாலும், திவாகரும் இன்னும் சாப்பிடவில்லையே என்று வருந்தினாள். ஏன் இவர் என்னைப் பற்றி யோசிக்கவே இல்லை. எதோ கணிணியைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். ரேவதியின் மாமியார் தனது உறவினர்களுடன் பேசப் போய்விட்டார். நாத்தனார் தனது சித்தி பெண்களுடன் பேசிக் கொண்டு இருந்தாள். ப்ரியா! என்று மெல்லிய குரலில் அழைத்தாள். என்ன அண்ணி ? என்று அருகில் வந்தாள்  ப்ரியா. “அண்ணன் இன்னும் சாப்பிடவே இல்ல.!” அண்ணன் அப்படித்தான் அண்ணி! சோறு தண்ணி இல்லாம வேலை வேலைன்னு இருப்பாங்க.  உங்களுக்கு இது புதுசு. எங்களுக்கு பழகிப் போச்சு.இருங்க நான் போய்  கூப்பிட்டுப் பார்க்கிறேன்.  பாதி வழியில் அவளை யாரோ நிறுத்தி பேச்சுக் கொடுக்க, ப்ரியா ரேவதி சொன்னதை மறந்து விட்டு பேச்சு மும்முரத்தில் இறங்கி விட்டாள்.

யாரும் தன்னை நினைக்கவில்லை என்று ரேவதியின் மனத்தில் சோகத் தீ மூண்டது. சிற்சில பெருமூச்சுகளில் தன் மனத்தீயை அணைக்க முயன்றாள். சிறிது நேரம் சென்றது. அந்த வீட்டில் தீப்பிடித்த காரணத்தைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். பதினாறாவது தளத்தில் மூன்றாம் வீட்டில் இருப்பவர் பட்டாசு தொழிற்சாலையில் சூபர்வைசர். அரசு அனுமதிக்கும் அளவுக்கு மேல் கோடௌனில் வெடிமருந்து ஸ்டாக் பண்ணி இருப்பார்கள். அதிகாரிகள் சோதனை போடும் நேரம் இங்கே வீட்டுக்குக் கொண்டுவந்து மறைத்து விடுவார்கள். அதிகாலையில் வெளியே கிளம்பியவர்கள் மின்சாரம் இல்லையென்று மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இருக்கிறார்கள். அதை அணைக்க மறந்து கதவைப்பூட்டி விட்டு சென்று விட்டார்கள். மெழுகு வடிந்தோ சாய்ந்தோ வெடிபொருள் மீது நெருப்புப் பட்டதில் வெடித்து விட்டது. இன்னும் சற்று நேரத்தில் தீயை அணைத்து விடுவார்கள். எல்லாரும் அவர்கள் வீட்டுக்குச் சென்று விடலாம் என்று பேசிக் கொண்டு இருந்தார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.