(Reading time: 9 - 18 minutes)

 

ரேவதி மெல்ல எழுந்தாள். வாட்ச்மேன் அறைக்கு நடந்து சென்றாள். கண்ணாடியைத் தட்டினாள், திவாகர் லேசாக நிமிர்ந்து பார்த்தான். வெளியில் வருமாறு சைகை செய்ததாள்,  “ஐந்து  நிமிடம் பொறு!” என்று சைகை காட்டினான். ஒவ்வொரு நிமிடமும் படபடப்புடன் சென்றது. ஐந்து நிமிடம் கழித்தும் அவன் எழுந்து வரவில்லை. திரும்பவும் கண்ணாடியைத் தட்டித் தான் செல்வதாக சைகை காட்டினாள். மறுபடியும் நிமிர்ந்து பார்த்து “பொறு!” என்று சைகை காட்டினான். எல்லாரும் மேலே செல்லும் சத்தம் கேட்டது.  ப்ரியாவைப் பார்த்து ரேவதியின் மாமியார், திவாகரும், ரேவதியும் எங்கே ? என்றார். பக்கத்தில் தான் இருப்பாங்க, கொஞ்ச நேரத்தில் வந்திருவாங்க, நாம போய் வீட்டில் இருப்போம் என்று அழைத்துச் சென்றாள். சந்தடி எல்லாம் குறைந்து அமைதியான பின், திவாகர் வெளியே வந்தான்.

“ஏன் ரேவதி, என்ன என் மேல கோபமா உன்னைச் சாப்பிடாம காக்க வச்சிட்டேன்னு!”

“கோபம்லாம் இல்ல! வாங்க வீட்டுக்குப் போவோம்.”

“ஒரு நிமிஷம் நில்லு!”

“என்னங்க?”

“உண்மையில் உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா? ஏன்னா நான் ரொம்ப கருப்பு, ரொம்ப உயரமா வேற இருக்கேன். அவ்வளவா பொண்ணுங்களுக்கு என்ன மாதிரி கருப்பா இருக்கவங்களப் பிடிக்காதுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.”

“பிடிக்காமலா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! நீங்க கேள்விப்பட்டதெல்லாம் உண்மை இல்லை!”

“நீங்க சொல்லுங்க. என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா இல்லையா. பெரியவங்க சொன்னாங்கன்னு சரின்னு சொல்லிட்டீங்களா?”

“நீ தான் அப்படி சம்மதிச்சு இருப்பியோன்னு பயம் இருந்தது. ஆனா இப்போ இல்ல.”

“ஏன் இப்போ இல்ல? அதுக்குள்ளே  பயம் போயிடுச்சா?”

“ம்..ஆமா”

“எப்படி?”

“செயற்கைத்தனமா இல்லாம இயல்பாக இருக்கிற மாதிரி புகைப்படம் எடுக்கலாம்னு கேண்டிட் போட்டோகிராபி பண்ண ஒரு நண்பன் யோசனை சொன்னான். அதுக்காக மணவறையில் நம்ம கவனிக்க முடியாத இடங்கள்ல இரண்டு காமிராவை மறைச்சு வச்சு இருந்தான். அதில் எடுத்த புகைப்படங்களையும், ஒளிப்பதிவுகளையும் தான் பார்த்துட்டே இருந்தேன். அதுல உன் கண்ணுலேயே கண்டுபிடிச்சிட்டேன் உனக்கு என்னை ரொம்ப புடிச்சிருக்குன்னு.”

“இதைப் போன மாசமே என்கிட்ட  நேர்ல இல்லாட்டி  போன்ல கேட்டு இருக்கலாமே?”

“உன்கிட்ட பேசி நீ என்னைப் பிடிக்கலன்னு சொல்லிருவியோன்னு சின்ன பயம் தான்!”

“நீங்க இன்னும் நான் கேட்டதுக்குப் பதில் சொல்லலையே?”

“என்ன?”

“என்னை உங்களுக்குப் புடிச்சிருக்கான்னு?”

“பிடிச்சிருக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு”, சொல்லிக்கொண்டே திவாகர் ரேவதியை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“என்னங்க நீங்க! இங்கே போய்?” என்று அவள் சொல்ல, அவன் அதைக் கண்டு கொள்ளவில்லை.

ரேவதியின் உள்ளத்தீ அணைந்த நேரம், வீட்டில் எரிந்த தீயையும் முற்றிலுமாக அணைத்து விட்ட தீயணைப்பு வீரர்கள் கீழே இறங்கி வந்தனர். அவர்களிடம் பேசிக்கொண்டே  வாட்ச்மேனும் வந்தார்.

"கட்டிடமே குலுங்கின மாதிரி இருந்தது சார்" என்றார் நிகழ்வின் அதிர்வில் இருந்து மீளாமல். “இவங்க இரண்டு பேரால் தானே?” என்று சிரித்தவாறே அவர்களைக் கடந்து சென்றனர் தீயணைப்பு வீரர்கள்.

இப்போது ரேவதியின் காதிலும் எதுவும் விழப் போவதில்லை. 

This is entry #27 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.