(Reading time: 13 - 26 minutes)

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - ப்ரீத்தி

This is entry #51 of the current on-going short story contest!  Please visit the contest page to know more about the contest

னி... ராசா... எழுந்திரியா...”

“என்னம்மா???”

“மணி 5 ஆச்சு பாரு...”

“இன்னும் கொஞ்ச நேரம்மா...”

என் தங்கமில்ல... ஏதோ பரிட்ச இருக்குனு சொன்னல எழுந்திருச்சு படிய்யா...” தாய் பாசமாக எழுப்பிவிட கண்களில் இருந்த தூக்கம் கலையாமல் படுக்கையில் எழுந்து அமர்ந்தான் கனி. சுற்றும் முற்றும் கண்களை உலவவிட தாய் மரகதம் எதையோ துளாவிக்கொண்டு இருப்பது தெரிந்தது.

“என்னம்மா தேடுற?”

“ஒண்ணுமில்லயா பால் வாங்க சொம்பு தேடிக்கிட்டு இருக்கே... இந்த இருட்டுல கண்ணே தெரியல...” ஒரே ஒரு அரை கொண்ட சின்ன குடிசை, மொத்தமும் குடிசை என்று சொல்ல முடியாது போன வருடம் மரகதம் நாத்து நட்டு, கூலிவேலை செய்து.கல் உடைத்து சிறுக சிறுக சேமித்ததில் ஒரு பாதிக்கு மட்டும் ஓடு போடப்பட்டிருந்தது. வெளுச்சதிற்கு ஒரு குண்டு பல்பு போட்டிருக்க அந்த ஒளியில் தேட கண்களை சுருக்கி சிரமப்படுத்தி தேடிக்கொண்டிருந்த தாயை பார்க்கையில் மனம் வலித்தது அந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு.

“இரும்மா வரேன்... ம்ம்ம்ம் இந்தா... நான் வேணும்னா போய் வாங்கிட்டு வரவா?”

“அச்சோ வேணா ராசா நீ படி பக்கத்துல நம்ம ராசு வீட்டுல தானே வாங்க போறே இதோ வந்திடுறே. நீ முகம் அலம்பிட்டு படுச்சுகிட்டே இரு..” என்று விருட்டென ஓடினாள். அவள் சொல்லும் அளவிற்கு பக்கத்தில் எல்லாம் இல்லை... அது எவ்வளவு தூரம் என்று கனி அறியாததா...

வெளியே வந்து கண்களை கசக்கி சுற்றி இருக்கும் நிலத்தையெல்லாம் ஒரு பெருமூச்சோடு பார்த்தான். கண்ணெதிரே இருந்த நிலம் அவர்களுக்கு சொந்தமாக இருந்தது ஒரு காலத்தில். இப்போது??? மனதில் ஓடிய எண்ணத்தை பின்னுக்கு தள்ளி முகத்தை கழுவினான். வீட்டை சுற்றி ஒரு முள்வேலி, வேலிக்குள் 2 ஆடுகள், 2 கோழிகள் சில குஞ்சுகள் என்று அங்கும் இங்கும் எல்லைக்குள் திரிந்துக்கொண்டு இருந்தது. மனதில் ஓடிய எண்ணங்கள் யாவும் ஓடியே போகட்டும் என்று தள்ளி முழுகவனத்தோடுப் படிக்க துவங்கினான்.

“செல்வி.... செல்வி...”

மரகதத்தின் குரலுக்கு வெளியே வந்த செல்வி, “வா மரகதம்... என்ன உன் புள்ள எழுந்திட்டானா? அவனை பால் வாங்கியார அனுப்பவேண்டியது தானே...” என்று அவளின் கையில் இருந்த சொம்பை வாங்கியவாறு கூறினாள்.

“ஆத்தி... பாவம் புள்ள, காலைல எழுந்து படுச்சிகிட்டு இருக்கு, அவனை எதுக்கு தொந்தரவு செஞ்சுகிட்டு. நமக்கு அவனுக்கு செய்யுறதை விட வேற என்ன வேலை” என்று பிள்ளை பாசத்தில் பேசும் மரகதத்தை பார்த்து சலுகையாய் ஒரு புன்னகையை உதிர்த்து உள்ளே சென்றாள் செல்வி.

பேசிக்கொண்டே சொம்பில் கறந்த பாலை எடுத்து வந்த செல்வியிடம். “எங்க ராசுவ காணோம்?” என்று விசாரித்தாள் மரகதம்.

““உன் நிலத்துக்கு பக்கத்துல இருக்க குடுசைல தான் படுத்துகெடப்பான் நேத்து ராத்திரி வயல பார்த்துக்க போனான். இன்னும் வரல...” அவர்களது நிலம் என்று கூறவும் சூம்பிப் போன முகத்தை ஒரு விரக்தி புன்னகை தந்து ஒதுக்கிவிட்டு மீண்டும் வீட்டிற்கு ஓடிவந்தாள் மரகதம்.

வெட்டி வைத்த விறகையெல்லாம் சேர்த்து எரித்து ஊதி ஊதி அவள் பால் சுடவைக்க பாதி புகை அவள் நெஞ்சுக்குள் போய் இம்சித்தது. இருமிக்கொண்டே சிரமம் முகத்தில் காட்டாமல் பால் கொண்டுவந்து கொடுத்த பாச முகத்தை பார்க்கும் போதெல்லாம் அவள் சொன்ன வாக்கியம் தான் கனியின் காதில் கேட்டுக்கொண்டே இருக்கும். “வளரனும் ராசா பெருசா வளரனும். நம்மள எகத்தாளமா பார்த்த பயலுக எல்லா மூக்குல வெரல் வைக்குற அளவுக்கு வளரனு...”

“வாங்கியபடியே இன்னைக்கு எங்கம்மா வேல?”

“பக்கத்துக்கு கிராமத்தில நாத்து நடுற வேல இருக்காம்... ஒரு நாளைக்கு 100 ரூபா கூலி...” என்று முகம் பிரகாசமாக கூறினாள்.  

100 ரூபாய்க்கு பிரகாசமாகும் தாயின் முகத்தை பார்க்கையில் மனம் வலித்தாலும் எதுவும் காட்டிகொள்ளாமல் “சரிம்மா... யாருலாம் போறீங்க?” என்று தொடர்ந்தான். 

“நானு, செல்வி, கோகிலா எல்லா போயிட்டு வெரசா வந்திடுறோம்...”

“சரிம்மா...” பேசியபடியே பள்ளிக்கு கிளம்பிவிட்டான் கனி.

“ராசா பழைய கஞ்சியும் வெங்காயமும் இருக்கு சாப்பிட்டுட்டு போயா”

“எனக்கு வேணாம்மா நீயே சாப்புடு எனக்கு நட்ராஜ் தோசை கொண்டுவரேன்னு சொன்னான்...” என்று கூறி சாப்பிடாமல் செல்லும் மகனையே வாசல் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள், மகனை பெரிய ஆளாக்கிவிடும் வைராக்கியத்தோடு கொள்ளை ஆசையோடும்...  

சுற்றி இருக்கும் வயல்வெளியில் அழகழகாய் செழித்து வளர்ந்து இருந்த பயிர்களையும், கூட்டில் இருந்து கிளம்பி உணவுத் தேட குடும்பத்தோடு சென்ற சிட்டு குருவிகளையும் பார்த்து ரசிக்கும் மனமில்லாமல் வேறு சிந்தனையில் லயித்துப் போனது கனியின் உள்ளம். இருக்கும் ஒருபிடி சோற்றையும் தனக்கே வைத்துவிட்டு வெறும் நீர் அருந்தி செல்லும் தாய்க்கு வேறு என்ன செய்ய முடியும் நண்பன் உணவு தருகிறான் என்ற பொய்யை தவிர... அறைபரிட்சை தேர்விற்கு படித்ததை எல்லாம் மறக்காமல் எழுதி முழுதிருப்தியோடு வீட்டிற்கு வந்தான் கனி.

எப்போதும் பொலிவோடு வரவேற்கும் முகம் கொஞ்சம் கலை இழந்து இருக்க பார்த்ததும் நெஞ்சம் கொஞ்சம் பதைத்துப்போக அருகே வந்தான். மகனை பார்த்ததும் பட்ட துன்பமெல்லாம் துளைந்துப்போக உற்சாகமாக மாறிவிட்டாள் மரகதம்.

“என்னம்மா என்ன ஆச்சு?”

“ஒன்னுல்லையேய்யா... சுட சுட கேழ்வரகு அட இருக்கு சாப்பிடுறியா? பசியோட வந்திருப்ப கை கால் கழுவிட்டு வாயா...” தனக்குள் இருக்கும் சோகத்தையெல்லாம் சொன்னால் தானே தெரியும்... என்னிடம் மறைத்து என்ன செய்ய போகிறாய் என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு கை அலம்ப சென்றுவிட்டான் கனி ஒரு இயலாமையோடு. மகனிடம் என்னவென்று சொல்லுவாள் கூலிவேலை செய்ய போன இடத்தில் கணவனில்லை என்று உரச நின்று பேச முயற்சிக்கும் ஆண்களை பற்றி... ரணப்பட்ட மனம் இத்தனை வருடங்களில் பக்குவப்பட்டு போனது இவைகளை கண்டு. தன் வாழ்வே இவனுக்காக தான் என்று எண்ணி மகனுக்கு ஆசையாய் சமைத்ததை கொண்டு சென்றாள்.

ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்பது சரிதான்... கேழ்வரகு சாப்பிட்டால் பசி எடுக்காமல் வயிறு மந்தமாக இருந்துவிட இரவு உணவை இப்படி சரி செய்தாள் மரகதம் அதுவும் மகனுக்கே அனைத்தையும் தந்து.

என்றுமில்லாமல் உறங்க போகும் நேரத்தில் கதவு தட்டப்பட படபடத்துப் போனது இருவருக்கும், கொள்ளை அடிக்க இங்கு என்ன இருக்க போகிறது. இது அதுக்கான தட்டல் அன்றி சத்தமெளுப்பாத ரகசிய தட்டலாக இருந்தது. பயத்துடன் அறுவடைக்கு இருக்கும் கத்தியை சேலையில் மறைத்துக்கொண்டு எழுந்தாள் மரகதம். தாயோடு எழுந்து அருகில் நின்ற கனிக்கும் ஒன்றும் புரிபடவில்லை. கதவை திறந்தால், முருகன் நின்றிருந்தான் குடிப்போதையில். வேலைகளுக்கு ஆட்கள் சேகரிப்பவன் நடு இரவில் கதவைத் தட்டுவதை நினைத்து உடல் நடுங்க, “என்ன... என்ன வேணும்?”

“இல்ல மரகதம் இந்த பக்கமா வந்தேன், என்னோட சைக்கிள் காத்து போயிடுச்சு இன்னைக்கு மட்டும் இங்க.... படுத்துகிட்டு...” என்று ஒரு அருவருப்பான சிரிப்போடு தலையை சொறிந்தவாறே நெளியவும் எங்கிருந்துதான் வீரம் வந்ததோ சேலையில் இருக்கும் கத்தியை எடுத்து “என்னய்யா கொழுப்பா? ஒழுங்கா வீடு போய் சேறு இல்ல கத்தி ஊரை கூட்டிருவேன்” என்றாள். அதற்கும் அவன் பின்னடைந்தாலும் நெளிந்துக்கொண்டே இருக்க, ஒளிந்து நின்ற கனி “முன்னே வந்து இப்போ போறிங்களா இல்ல ராசு அண்ணாவை கூப்பிடவா” என்று கூறவும் பயம் தொற்றிக்கொள்ள கொஞ்சம் நடுங்கி போனான் முருகன்.

“கூப்பிடேன் என்னை.... என்ன.... பண்ணிடுவான்?” என்று கொஞ்சம் திக்கி திணறியே உளறினான்.

வேறு பெண்ணிடம் வம்பு செய்ததற்கு நடு ரோட்டில் ராசுவிடம் அடிவாங்கியவன் தானே முருகன் அது அறிந்தமையால் “ராசண்ணா....” என்று கத்தினான். அவ்வளவு தான் எங்கே அருகில் உள்ள குடுசையில் இருந்து ராசு எழுந்து கொள்வானோ என்று, “டேய் சும்மா இருடா...” என்று பதைத்துக்கொண்டு ஓடிவிட்டான் அவன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.