அவன் சென்றதும் அழுத்தமாக தாளிட்டு படுக்கையில் அமர்ந்தவளுக்கு தான் உறக்கம் வரவில்லை, கைகளெல்லாம் நடுங்க பிள்ளையிடம் தன் பதைப்பை காட்டிகொள்ளாமல் இருக்க சிரமபட்டாள். இத்தனை படபடப்பிலும் கண்ணில் இருந்து ஒரு சொட்டு வரவில்லையே. சமாளித்தாள் எல்லா துயரையும் தனக்குள்ளேயே... சிறிது நேரம் தன் மடியில் படுத்திருந்த மகனின் சிகையை வருடியவாறே இருந்தவளுக்கு மனம் கொஞ்சம் இளகியிருந்தது. இது ஒன்றும் புதிதில்லை போகும் இடமெல்லாம் கேட்கும் வார்த்தையும் தன் மேல் படரும் பார்வையும் இதை சமாளிக்க துணிவு தந்திருந்தது.
மெல்ல மனதை தேற்றியவளுக்கு உடல் அலுப்பால் உறக்கம் தழுவ, மகனை அருகில் போட்டு படுத்துக்கொண்டாள். வெகு நேரம் கடந்து முழிப்பு வர விழித்த கனி, தாயையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். சிறு வயது ஆனால் முதிர்ந்தது போல கவலை கோடுகள்... மெல்ல வருடினான் அவளது உள்ளங்கையை, கல் உடைத்தும், வயல்வேலை செய்தும், விறகு ஒடித்தும், கூலிவேலை செய்தும் ஓய்ந்து போயிருந்த கைகள், பார்க்கவே கஷ்டமாக இருந்தது. மயிலரகாய் தன் கையை நினைத்து மெல்ல வருடியவன் மனம் நன்றாக பக்குவப்பட்டது... கண்ணீர் சிந்த துடித்த கண்களை அதட்டி அடக்கினான், அழுதால் அவன் மரகதத்தின் மகன் என்பது பொய்க்குமே... மறந்தும் தன் தாய் அழுது பார்த்திராதவன் ஆண் மகனாய் தன்னை கட்டுபடுத்திக்கொண்டான்.
எல்லாரும் புத்தகத்தை எடுத்து என் குடும்பம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுங்க பார்ப்போம்” என்று தமிழ் ஆசிரியை கூறவும் அனைவரும் புத்தகத்தை எடுத்தனர். மற்ற மாணவர்களெல்லாம் எழுத துவங்க, திருதிருவென முழிக்க துவங்கினான் கனி. என்ன வென்று எழுதுவது குடும்பம்??? அப்படியென்றால்??? மனம் நொந்துப் போனது கனிக்கு. நேரம் கடந்து போக போக மற்ற மாணவர்கள் எல்லாம் ஆசிரியையிடம் காட்டி சரிபார்த்துக்கொண்டிருந்தனர். வகுப்பை சுற்றி பார்த்தவர், “என்ன கனி நீ மட்டும் தான் இன்னும் கொண்டுவரலை ம்ம்ம்ம் சீக்கரம் வா...” ஒன்றும் செய்ய முடியாமல் வெற்று காகிதத்தோடு எழுந்து சென்றான்.
“என்ன கனி? ஒண்ணுமே எழுதலையா?”
“....”
“தலைப்பும் ஈசி தானே? உன் அம்மா அப்பாவை பத்தி எழுதினாலே போதுமே...”
“....” அவன் எதுவும் கூறாமல் அமைதியாக தலை குனிந்து நிற்க, “டீச்சர் அவன் அப்பா பக்கத்து வீட்டு பரிமளா அக்காவை கூட்டிட்டு ஓடி போயிட்டாரு” என்று கூறி சிரிக்கவும் மற்ற குழந்தைகளும் சேர்ந்து சிரித்தனர்.
“ஏய்... ஷு... என்ன பேச்சிது... அமைதியாக இருங்க...”
“நீ இடத்துக்கு போ கனி... நாளைக்கு அம்மாவை கூட்டிட்டுவா” என்று சொல்லி அனுப்பினார்.
எதற்கு என்று புரியாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு போனான். இப்படிப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன் இங்கு படிக்க வேண்டாம் என்று சொல்ல போகிறார் போல என மனம் சோர்ந்தது. “அம்மா நாளைக்கு டீச்சர் உன்ன பள்ளிகூடத்துக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க.”
“எதுக்குடா ராசா? யாரையாவது அடுச்சிட்டியா?”
“அதெல்லாம் இல்லம்மா...”
“அப்பறம்?”
“தெரியலம்மா... நீயே வந்து கேட்டுக்கோ” என்று கூறிவிட்டு சிருமபட்டு கட்டுபடுத்திய கண்ணீரை தாயின் மடியில் சாய்ந்து சிந்தினான்.
“ராசா... ஏய்யா அழுகுர? என்னாச்சுய்யா?” என்று பதறிபோய் விசாரித்தாள் மரகதம்.
“நமக்கு குடும்பமே இல்லையாம்மா? எல்லாரும் அம்மா அப்பான்னு பெரிய கட்டுரையே எழுதுனாங்க எனக்கு என்ன எழுதுரதுனே தெரியலை” என்று விசும்பி அழுத குழந்தைக்கு என்ன சொல்வதென்றுதான் தெரியவில்லை அவளுக்கு.
“யாருய்யா சொன்னது உனக்கு நான் இருக்கே... எனக்கு நீ இருக்க... நமக்கு ஏதாவதுனா கேட்க செல்வி, ராசு, கோகிலா இத்தனைப் பேரு இருக்காங்க... சொந்தம் இருந்தா தான் குடும்பமா? இல்லை அப்பான்னு ஒரு உறவு இருந்தா தான் குடும்பமா? அந்த ஆளுக்கு குடுப்பனை இல்லை போயிட்டான். நான் சோர்ந்து போய் இருந்தப்ப மனசு இனிக்க பிறந்த புள்ளையா நீ... அழுகாத... உன் பேரு போலவே எல்லாருக்கும் இனிக்க இனிக்க சந்தோஷம் தர பொறந்தவன்யா நீ... நீ அழுதா அம்மா தாங்குவேனா? குடும்பம்ன்றது உறவில் இல்லையா... நம்ம காட்டுற அன்புல இருக்கு. ரெண்டே பேர் இருந்தாலும் இது நிரஞ்ச குடும்பம்தாயா...” இப்படி வாய் நிறைய சொன்ன கருத்தில் கனியின் மனம் நிறைந்தது.
மறுநாளே பள்ளிக்கு அன்னையை அழைத்து சென்றான். “வணக்கம்ங்க...”
“வாங்க... நீங்க தான் கனியோட அம்மாவா???” இந்த வார்த்தைகளே இனியதாக வரவேற்க முகமெல்லாம் பளிச்சிட “ஆமாங்க...” என்றாள்.
“உங்க பையன் ரொம்ப நல்லா படிக்குறான்... பிற்காலத்துல பெரிய அளவுல முன்னேறுவான் கவலையே படாதிங்க... உங்க பெயரை கண்டிப்பா காப்பாத்துவான்” என்று அவனை பற்றி புகழ்ந்து சொல்ல சொல்ல முகமெல்லாம் பல்லாய் போனது அவளுக்கு. இத்தனை சிரமப்பட்டு படிக்க வைப்பது எதற்கு இப்படி நல்ல மொழிகளை கேட்கத்தானே. மனம் நிறைந்து போனது அவளுக்கு, கனிக்கு தான் ஆச்சர்யம் திடிரென்று வர சொல்லி புகழ்பாடுவது ஏனோ என்று, ஆனால் ஆசிரியைக்கோ தன்னால் முடிந்த செயலை செய்த திருப்தி. பிள்ளைகள் மூலமே கனியின் தாய் நிலைமை அறிந்து அவரை மகிழ்சிக்க எண்ணினார்.
வருடங்கள் உருண்டோட, கூரையெல்லாம் ஓட்டு ஆக, 2 ஆடுகள் 6 ஆக மாற, 2 மாடும் வந்திருந்தது புழைப்பு கொஞ்சம் சிரமம் இல்லாமல் போக, மரகதம் தான் வேலை செய்தே ஒடுங்கிப் போனாள். என்னதான் கனி வேலைக்கு செல்வதாக கூறியும் மறுத்துப் படிக்க கட்டாயப்படுத்த மேற்படிப்புக்கு பக்கத்து ஊரில் நல்ல கல்லூரியில் சேர்ந்தான் நல்ல மதிப்பெண்ணோடு. கடைசி வருடம் நெருங்க நெருங்க மரகதத்தின் நிலை மோசமானது, ஆனால் அந்த பொலிவு மட்டும் குறையவில்லை அதே வாக்கியம் மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தாள் “வளரனும் ராசா பெருசா வளரனும். நம்மள எகத்தாலமா பார்த்த பயலுக எல்லா மூக்குல வெரல் வைக்குற அளவுக்கு வளரனு...” மனதில் பதிந்துப் போன வார்த்தைகள் உண்மை ஆக கைகூடும் நேரமும் வந்தது.
“டேய் கனி எங்கடா இவ்வளவு வேகமா போற...”
“நான் குரூப் 1 தேர்வுல பாஸ் ஆகிட்டே தாதா அம்மாக்கிட்ட சொல்ல போறேன்” என்று ஓடிக்கொண்டே செய்தியை பரப்பினான் கனி...
“போடா போடா வெரசா போ, அவள் கஷ்ட்டப்பட்டது எல்லாம் வீண் போகலை, சந்தோஷ படுவாள் போ...” என்று உற்சாகம் தந்தார் தெருமுனை பெட்டிக்கடை தாதா.
“அம்மா... அம்மா...” வீட்டினுள்ளும் இல்லை, வெளியே தோட்டபக்கமும் இல்லை. சுற்றி இருக்கும் இடத்தில் எங்கும் இல்லாமல் போக, செல்வியின் வீட்டிற்கு சென்றான். “அத்தை... அம்மாவை பார்த்தியா?”
“வெறகு வெட்ட போகணும்னு சொல்லுசுடா போய் பாரு” என்று சொல்லி அனுப்பிவைத்தாள்.
சென்ற இடத்தில் மயங்கி கிடந்த தாயை கண்டதும் பதறிப்போனவன் அவள் அருகே ஓட, உச்சி வெயிலில் கொஞ்சமும் சுரணை இல்லாமல் மரத்து மண்ணோடு மறித்து போயிருந்தாள். அவள் மூச்சு நின்றது இவன் மூச்சை நிறுத்தும் அளவிற்கு நெஞ்சை கிளித்துபோட இடமே நடுங்க கத்தி அழுதான்... சிதறிப் போனவவனை ஒன்றாய் சேர்த்து மீண்டும் அவனாய் மாற்ற பல நாட்கள் தேவைப்பட்டது செல்வி, ராசு, கோகிலாவுக்கு... சோர்ந்துப் போனவனை தாயின் ஆசையை கூறி தேர்த்தி அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கு அனுப்பிவைத்தனர்.
பட்ட புண்ணிலேயே படுமாம், தேர்வு ஆனாலும் சொலையாக காசு கேட்க, தாயை துளைத்து அயர்ந்து போனவனுக்கு, வேலையையும் துளைக்கப் போகிறோம் அதுவும் தன் தாயின் ஆசையை துளைக்கப் போகிறோம் என்ற எண்ணமே வாழ்க்கையை நொந்துப் போக செய்தது. வீடு வந்து சேர்ந்தவன் தாயின் நினைப்பில் அவளின் புகைப்படத்திற்கு கீழே அமர்ந்து அழதுவங்கிவிட்டான்.
“என்ன செய்ய போறேன்ம்மா? உன் ஆசையும் பொய்த்து போயிடும் போலயே... உதவி செய்ய குடும்பம் இல்லையே அம்மா...” என்று அழுதழுது அதில் உறங்கியும் போனான். சிறிது நேரத்தில் எழுந்தவனுக்கு அன்னையின் நினைப்பு வர, அவளின் புடவையை எடுத்து அணைக்க நினைத்து கசங்கிய நான்கு புடவைகள் கொண்ட இரும்பு பெட்டியை திறந்தான், கட்ட கடேசியாக கசங்கிய நிலையில் சில பத்திரங்கள் இருந்தன. படிப்பறிவில்லாத மரகதத்துக்கும் தெரியவில்லை, தன் கட்டவிரல் முத்திரை இட்டு எழுதி தந்த நிலத்திற்கு தான் வெறும் பாதுகாவல் மட்டும் தான் என்று, சொத்தெல்லாம் கனியின் பெயரில் இருக்க, எழுதி தந்தது செல்லாது என்று உணர்ந்தான் கனி.
தன் கண்களையே நம்ப முடியாமல் மீண்டும் பார்த்தவன் அன்னையின் புகைப்படம் பார்க்க, “ரெண்டே பேர் இருந்தாலும் இது நிரஞ்ச குடும்பம்தாயா...” என்று அன்று அவள் சொன்னது அவன் காதில் கேட்டது.
நிலத்தின் மூலம் வந்த பணத்தில் சேர்ந்து தன் உழைப்பில் உயர்ந்து நின்றான் ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக... பெற்றெடுத்து தனி பெண்ணாய் வேலை செய்து, வீரமுள்ள மங்கையாய் பல துன்பங்களை கடந்து, நிறைந்த குடும்பமாக தன் அன்பால் மாற்றி, இப்போது இறந்த பின்னும் கடவுளாய் வழிகாட்டி பாதுகாத்துக்கொண்டிருக்கும் தன் அன்னையின் புகைப்படத்தின் முன்னால்.
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே.....
This is entry #51 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest