(Reading time: 26 - 51 minutes)

ன்னவாயிற்று....?? தவியாய் தவித்துப்போனாள் மஹிமா.

மூன்றாம் நாள் கல்லூரி வாசலில் முகம் மற்றும்  கையில் கட்டுடன் அவன்.

“ஹேய்.....என்னாச்சு...நவீன்...?” பதற்றமும் தவிப்புமாக அவனிடம் ஓடினாள். அதற்குள் கண்கலங்கி நீர் கொட்ட தொடங்கியது இவளுக்கு...

“என் அழக பத்தி சொன்னல்ல....அதான்....அத அழிச்சுகிட்டேன்....சீக்கிரம் ஆறிடும்னு டாக்டர் சொல்லிட்டாங்க...பட் தழும்பு இருக்கும்  நாம வாழ்ற காலம் முழுவதும்....எல்லாத்திலும் நாம் ஒன்னு....”

சகலமும் ஸ்தம்பித்தது அவளுள். மொத்தமாக அதிர்ந்துபோய் நின்றிருந்தாள் மஹிமா. அவன் முகம் பார்க்க முடியாமல் கண்மறைத்தது கண்ணீர்.

“பாப்பா....டிரைவர் தாத்தா கூப்பிடும் சத்தம் கேட்க “நாளைக்கு....” சொல்லிவிட்டு ஓடினாள்.

வீட்டில் அவளறையில் முதலில் வெகு நேரம் அழுதாள் மஹிமா. அவளுக்கு விட்டலிகோ எதுவும் கிடையாது....விளையாட்டாய் இவள் சொல்லப்போய்......என்ன செய்துவிட்டு வந்துவிட்டான் அவன்? நினைக்கவே நெஞ்சம் பதறியது. குற்ற மனப்பானமை குமுறியது.

நாளை தன் காதலை அவனிடம் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று ஒருவாறு முடிவு செய்துகொண்டாள். வாழ்நாளுக்குமவன் மகிழ்ச்சிக்காகவே இவள் இனி. அதன்பின் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் அப்பா இந்த காதலை பின்னாளில் எப்படி ஏற்பார் என்ற அடுத்த தவிப்பு குழப்பி கும்மி அடித்தது.

“என் மகளும் என் அம்மாவும் எனக்கு இவதான்....” அப்பா அடிக்கடி இவளைப்பற்றி சொல்லுவது நினைவு வந்தது.

தூத்துக்குடியில் சில உப்பளங்களும், இரு கப்பல்களும் இவர்களுக்கு சொந்தம். அதற்கு நிகராக இருக்குமே அப்பாவின் எதிர்பார்ப்பு...?

நவீனை எதாவது பிஸினஸ் தொடங்க சொல்லவேண்டுமோ...?

வீட்டின் பின்வாசலில் சென்று அமர்ந்து தோட்டத்தைப் பார்த்தவாறே யோசித்துக்கொண்டிருந்தாள். யேசப்பா....எனக்கு ஹெல்ப் பண்ணுங்க...சின்ன வயசில இருந்து எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்டு நீங்கதான்....நான் இப்பவும் பெரிய முடிவெல்லாம் எடுக்குற அளவு பெரிய ஆளா ஆகிட்டனான்னு தெரியல.....ஆனா நிச்சயம் இது என் வாழ்க்கையில ரொம்ப பெரிய முடிவுதான்...என்ன செய்யனும்...எப்படி செய்யனும்....சொல்லுங்களேன்....

“ம்...இப்ப சொல்லு தயாளா....உங்களுக்குள்ள அப்படி என்னதான் ப்ரச்சனை.... அங்க இருந்து பேசினா வேற யார் காதுலயும் விழுந்திடும்...இப்ப சொல்லு....”

இவள் பின் வாசலில் இருக்கிறாள் என தெரியாமல் அதற்கு அருகில் இருந்த அறையில் இருந்து அப்பா தன் முதல் தம்பி தயாளனிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

தயாளன் சித்தப்பா வந்துருக்காங்களா....? அவங்கள வாங்கன்னு கூட சொல்லாம இவள்....பேசி முடிச்சிட்டு வரட்டும்...

அவர்கள் பேசுவது தன் காதில் விழக்கூடாது என எழுந்தாள் மஹிமா.

“ரொம்ப விரும்பிதான கிறிஸ்டிய கல்யாணம் செய்துகிட்ட....அதுவும் அப்பா வேண்டாம்னு சொன்னதுக்கு தூக்க மாத்திரல்லாம் போட்ட.....இப்ப என்னடா ஆச்சு.....?”

இது நிச்சயம் மஹிமா எதிர்பார்க்காதது. தயாளன் சித்தப்பா  கல்யாணம் காதல் கல்யாணமா?

அவளால் அங்கிருந்து அசைய முடியவில்லை. தயாளன் சித்தப்பாவும் கிறிஃஸ்டி சித்தியும் அல்லிகுளத்தில்தான் வசிக்கிறார்கள். சித்தப்பா இவளிடம் பாசமாக இருப்பார்தான் ஆனால் இவளுக்கு சித்திதான் இஷ்டம்.

காரணம் சித்தியின் சில புலம்பல்களை கேட்டிருக்கிறாள். சித்தப்பாவின் நடவடிக்கைகள் சற்று நியாயமற்று தோன்றும்.

ஆனால் இது காதல் திருமணமென்றோ......அதுவும் தூக்க மாத்திரை போடுமளவிற்கு சித்தப்பா பிடிவாதம் செய்து மணந்தார் என்றோ இதுவரை இவளிடம் சித்தி உட்பட யாரும் சொன்னதில்லை. எங்கு போயிற்று அந்த காதல்...?

“ம்...அப்ப முதல்ல நான் கிறிஃஸ்டிய பார்த்தப்ப ....அவ என்னை ரொம்ப அவாய்ட் செய்தா... .என்னமோ எனக்கு அவ இல்லாம முடியவே முடியாதுன்னுதான் இருந்துது.... கண்டிப்பா வேற எந்த தப்பான நோக்கமும் கிடையாது.... அவள சம்மதிக்க வைக்க அவ்ளவு அலஞ்சேன்..... அவ என்னைவிட ரெண்டு வயசு மூத்தவளா....அதனால சம்மதிக்கவே மாட்டேன்னு ஒத்தகால்ல நின்னா... கல்லை கரைக்கிற மாதிரிதான் அவ மனச கரைச்சேன்... கடைசியா நம்ம அப்பா அம்மா வந்து அவங்க வீட்ல பொண்ணு கேட்டா தனக்கு சம்மதம்னு அவ சொன்னதும், அப்பாட்ட வந்து நின்னேன்... அப்பா ஒத்துகலை...அவ வீடு நம்மவிட வசதி கம்மி... அதோட அவ அப்பா சின்ன வயசிலேயே அவ அம்மாவ விட்டுட்டு போய்ட்டாங்கன்னு என்னவெல்லாமோ காரணம் சொன்னாங்க.... எனக்கு கிறிஃஸ்டி இல்லாம வாழ முடியும்னு தோணலை... அதான் தூக்கமாத்திரை... என்னை காப்பாத்திட்டு உடனே கல்யாணமும் செய்து வச்சுட்டாங்க அப்பா.....

அவ்வளவு ஆசையும் சந்தோஷமுமாத்தான் கல்யாணம் செய்தேன்....உலகத்தையே ஜெயிச்சுட்ட மாதிரி இருந்தது. ஆனா அப்புறம் கல்யாணத்துக்கு முன்ன இருந்த அந்த ஈடுபாடு...அந்த வெறித்தனமான காதல் எதுவும் இல்லை.

வாழ்கை நிறமிழந்த மாதிரி ஒரு வெறுமையான உணர்வு. ஆனா அப்புறமும் கல்யாணம் ஆகிட்டு இனி வாழ்க்கைய ஒழுங்கா வாழனுமேன்னுதான் நினைச்சேன்....அப்படித்தான் இப்ப வரைக்கும் ட்ரை பண்றேன்....ஆனா அவ என்னைவிட மூத்தவங்கிறதால அவ சொல்றத கேட்டு... அதுபடி முடிவெடுக்க எனக்கு முடியலை... என்ன டாமினேட் பண்றாளோன்னு தோணுது..... நான் டம்மி பீஃஸ்ங்கிற மாதிரி....மேல் ஈகோ ஹர்ட் ஆகுது... அதனால அவ சொல்ற எதையும் என்னால செய்ய முடியல...ஆனா அவளுக்கும் பிள்ளைங்களுக்கும் எது  நல்லதுன்னு பார்த்து தான் செய்றேன்... அவட்டயே சொல்லிட்டேன்.. .நீ எதையாவது சொன்னன்னா அதை என்னால செய்ய முடியலை..... ஆனால் அதை சொல்லாம இருந்தன்னா நானவே பார்த்து செய்து கொடுத்துடுவேன்னு... அதுக்கு அவ பயங்கரமா கோபபடுறா.... அப்படியே எங்களுக்குள்ள கேப் பெருசாகிட்டே வந்துட்டு... இப்ப அவ அவங்க ஊருக்கு போறேன்... பிள்ளைங்களோட அங்கயே இருக்கேன்.... என்னையத்தான் உங்களுக்கு பிடிக்கலையேன்னு சொல்லிட்டு போய்ட்டா......”

“சரி.....என்னைக்கு கிறிஸ்டிய கூப்பிட போறன்னு சொல்லு...நானும் உன் அண்ணியும் கூட வரோம்....”

“அது....நான் போறதா இல்லண்ணா....”

“ஏன்..?”

“அவ சொன்ன மாதிரி...அவள உண்மையிலேயே எனக்கு பிடிக்கலைதான....”

“அப்ப...இன்னொரு கல்யாணம் செய்ய போறியா....?”

“ஐயோ...இல்லனா....மூத்தவ சியோனாவுக்கு  8 வயசு ஆகுது...இப்ப போய் இப்படி பேசிகிட்டு இருக்கீங்க....”

“இன்னும் நீ அஞ்சு படிக்கிற தயாளனா இருந்திருந்தா செருப்பால அடிச்சிருப்பேன்... வளந்துட்டல்ல... மகளுக்கு வயசு 8 ஆகுதுன்னு வேற சொல்ற... அதான் அடிக்காம விடுறேன்....”

அப்பா அமைதியாக சொல்ல சித்தப்பா பதறுவது கேட்டது.

“என்னண்ணே...?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.