சத்தம் கேட்க திரும்பி பார்த்தால் அந்த அவன், இவளுக்கு அண்ணன் முறை வரும் ப்ரகாஷுடன்..
அந்த அண்ணன் சித்தப்பாவை பார்க்க, புதியவன் இவளை.
அவன் முகத்தில் இவளைக் கண்டதும் வந்த உணர்வு. அவன் இவளை பார்க்க தவித்திருப்பான் போலும். திட்டமிட்டு இங்கு வந்திருக்கிறான்.
மனதளவில் வானத்தில் பறந்தாள் மஹிமா. ஆனாலும் அவன் காண முறைத்தாள். இது வேண்டாம் மஹி என்று எச்சரித்த அறிவு காரணம்.
“மஹிக்கு இங்க வரது பிடிக்கும்....நம்ம தோப்புக்குள்ள வேற யாரு வர போறா....? அதான் வந்தோம்...ஹலோ...நான் அமுதன் ...நீங்க....” சித்தப்பா புதியவனுடன் கை குலுக்கினார்.
காதை தீட்டினாள் மஹிமா.
“நான் நவீன்...சுதீஷ் ஃப்ரெண்ட்.....” அவ்வளவுதான் அவள் காதில் கேட்டது. சுதீஷ் ப்ரகாஷின் தம்பி என்று இவளுக்கு ஞாபகம். அடுத்து ஆண்கள் மூவருமாய் சற்று விலகி சென்று பேச ...இவளுக்கு சுள்ளென்றது.
“ஹலோ...இது என் சித்தப்பா...என் கூடதான் இருப்பாங்க...சும்மா ஆளாளுக்கு வந்து கூப்டா...”
அதிர்ந்து போய் பார்த்தான் நவீன். சித்தப்பாவோ முகம் கொள்ளா சந்தோஷத்துடன் “அவ அப்டிதான்....அவ இங்க இருக்க வரைக்கும் அவள தனியா விட்டுட்டு நான் வர முடியாதே....” என்றவர் இவளிடமாக திரும்பி நம்ம க்ரவுண்ட்ல நைட் மேட்ச் போடலாம், நீயும் வான்னு கூப்டுறாங்க மஹி.”
“நோ....அதெல்லாம் முடியாது...” இவள் முடிவு அறிவித்தாள்.
“அ...து நீங்களும் அங்க வந்து மேட்ச் பாருங்களேன்.....மேம்....போரடிக்காது.....” அவன்
“எங்க வீட்டு பொண்ணுங்க....ஆறு மணிக்கு மேல எங்க வீட்டு வாசல்படிகட்டுக்கே வர மாட்டோம்...ஊர்ல கேட்டு பாருங்க பெரிய வீட்டை பத்தி சொல்வாங்க...” இருந்த இல்லாத திமிரை சேர்த்து வைத்து சொன்னாள் மஹிமா.
இவனை இதற்குமேல் தன் மன எல்லைக்குள் அனுமதிக்க கூடாது....
உணர்ச்சியின்றி பார்த்தான் அவன்.
அவள் அடுத்தபுறம் அகன்று சென்றாள்.
“ப்ரகாஷண்ணா ...பை....”
தன் உடல் நடுங்குவதை உணர்ந்தாள் மஹிமா. முதன் முறை ஒருவரை இத்தனை தூரம் மனம் புண்பட பேசியிருக்கிறாள் என்பதாலா? அல்லது அவனை இழக்கிறாள் என்பதாலா..? புரியவில்லை.
அடுத்து விடுமுறை முடிந்து தூத்துகுடி செல்லும்வரை அவன் ஞாபகம் அவ்வப்போது வந்தாலும், அதன் பின்பு இயல்புக்கு வந்திருந்தாள் மஹிமா.
கல்லூரியின் இரண்டாம் ஆண்டு தொடங்கியது. வழக்கமான உற்சாகத்துடன் நாட்கள் நகர்ந்தன. திடீரென அன்று தான் கவனித்தாள் மாலை அவள் கல்லூரி பேருந்தினை பைக்கில் தொடர்ந்தான் அவன்...நவீன்.
தினமும் இது தொடர....மீண்டும் மனம் சலனம்.
அப்பாவிடம் சொல்லி தனது காரில் கல்லூரி செல்ல தொடங்கினாள் மஹிமா. டேவிட் தாத்தா தான் டிரைவர். இவள் விரும்பிய நேரத்திற்கு கிளம்பலாமே......
சில நாள் சீக்கிரமாக...சில நாள் தாமதமக என கல்லூரியிலிருந்து கிளம்பினாள். நவீனும் தொடரவில்லை.
ஆனால் அன்று இவள் வகுப்பறையைவிட்டு வெளியே வரும் நேரம் பார்வையாளர்கள் பகுதியில் அவன்.
லூசாடா...நீ....யாராவது பார்த்தால்....கொன்னு புதச்சிடுவாங்க....வீட்ல..
நிமிராமல் நடந்து அவனை கடந்தாள். “மஹி...” மென்மையாய், தவிப்பாய் அவன் அழைத்த அழைப்பை தாண்டிச்செல்வது அவள் எதிர்பார்த்ததைவிட கஷ்டமாக இருந்தது. யேசப்பா பலம் தாங்க....ஹெல்ப் மீ.
அடுத்த வந்த நாட்களில் இவள் காரை பின் தொடர்ந்தான் அவன்.
அன்று காலை வகுப்பறையில் தன் இடத்தில் சென்று அமர்ந்தவள், மேஜைக்கு அடியிலிருக்கும் செல்ஃபில் தன் உடைமைகளை வைக்க முனைந்தாள் கையில் தட்டியது எதோ.
எடுத்துப் பார்த்தால் கடிதம். அவன் தான்.
கண்ட நாள் முதல் காதல் மழை
உன் நினைவு ஜுரம்
அடிமை சாசனம் அகம் புறம்.
உன் கண் மறுப்பால், சொல் வெறுப்பால்
கசையடி நிதம்;
என் மனம் ரணம்;
வேண்டாம் விலகு என்றது அறிவு
அது அடிபணியாத ஆண்மன நிகழ்வு
பெண்ணவளை காணாமல்,
பிறை அவள்
பேசும் மொழி கேளாமல்
இனி ஓர் நாள் இங்கு உன்னுடன்
நானில்லை என்கிறது உயிர் உட்புறம்.
தவம்.
கவிதைக்கு கீழாக
ஒரே ஒரு 2நிமிஷம் பேசுறதுக்காக இங்க தினம் வாரேன்...தயவு செய்து டைம் கொடு மஹி
என்ற கெஞ்சல்.
கவிதை எழுதுவியாடா...? கள்ளா!!!
அன்று மாலை, சிடு சிடு முக பாவத்துடன் அவன் நோக்கி சென்றாள் மஹிமா. கல்லூரி வாயிலில் நின்றிருந்தான் அவன்.
“என்ன இப்படி தொந்தரவு செய்றீங்க....? என் அப்பாட்ட சொன்னா....ஆள் இருந்த தடமில்லாம செய்திடுவாங்க....உடனே ஊர் போய் சேருங்க...”
“அத செய் முதல்ல....உங்கப்பாட்ட சொல்லு....செத்தா இந்த தொல்லை முடிஞ்சிடும் தானே...”
“..................”
“சென்னைல இன்ஃபோஸிஸில் வேலை பார்த்துட்டு இருந்தேன்...உன்ன பார்க்காம முடியல....அங்க ஜாப ரிசைன் செய்துட்டு இங்க ஒரு சின்ன கம்பனில வந்து ஜாய்ன் செய்துருக்கேன்...புரிஞ்சிகோ மஹி....”
“.......................”
“எனக்கும் மானம் ரோஷம் எல்லாம் இருக்குது...ஆனா உன் முன்ன...தோத்துடுறேன்டா...”
“............”
“சரி...எதுவும் எப்படியும் போகட்டும்...எனக்கு முடிவா பதில் சொல்லிடு மஹி...இதுக்கு மேலயும் இழுபட தெம்பு இல்ல...”
இவ்ளவு நாள் நான் சொன்ன பதில் புரியலையாமோ...பதில் கேட்கிற....நோன்னு சொன்னா ஒத்துப்பியா.....???
“நவீன் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல....உங்க அழகுக்கு நான் சரி வர மாட்டேன்.....எனக்கு விட்டலிகோ....சீக்கிரம் உடம்பெல்லாம் பரவி....பார்க்க சகிக்காம....”
அவள் பேச்சை முடிக்கவில்லை.... “நீ எப்படி இருந்தாலும் எனக்கு தேவதை தான்...” விடுவிடென்று சென்றுவிட்டான்.
அடுத்து இருநாட்கள் அவன் கண்ணில் படவில்லை.