இதெல்லாம்...ஒரு...கதைன்னு..... - தங்கமணி சுவாமினாதன்
காலை பத்தரை மணி.அன்று அமாவாசை.தர்ப்பணத்தை செய்து முடித்து விட்டு தாம்பாளத்தில் இருந்த தண்ணீரையும் எள்ளையும் பக்கத்தில் இருந்த வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றிவிட்டு சர்வேஸ்வரா..மகாதேவா..கிஷ்ண கிஷ்ணா என்று சொல்லியபடியே மெள்ளக் கைகளைத் தரையில் ஊன்றியபடி எழுந்தார் சேதுராமன்.வலது கால் முழங்கால் முட்டி வலித்தது.பூஜை அறைக்குச் சென்று வலிக்கும் முழங்கால் முட்டியை மேலும் கஷ்டப் படுத்திக்கொண்டு நமஸ்காரம் செய்து விட்டு வெளியே வந்து ஈஸிசேரில் வந்து அமர்ந்து கொண்டார்.
இந்தாங்கோன்னா...காபியை நீட்டினார் மனைவி கற்பகம்.காபியை வாங்கிக்கொண்ட சேதுராமன் கற்பகம் அந்த பேப்பரையும் மூக்கண்ணாடியையும் சித்த எடுத்துக் கொடேன்....
இந்தாங்கோ..மனைவியிடமிருந்து பேப்பரையும் கண்ணாடியையும் வாங்கிக் கொண்டார் சேதுராமன்.
அன்று அமாவாசை என்பதால் காலை டிபன் கிடையாது.நேரடியாய் பதினொன்னரை மணிக்கு சாப்பாடு என்பதால் கற்பகம் மாமி சமையலில் மும்முரமாக இருந்தார்.
சேதுராமன் மத்திய அரசு வங்கியொன்றில் பணி செய்து ஓய்வு பெற்றவர்.இப்பொழுதிய வயது அறுபத்தெட்டு.சேதுராமன் கற்பகம் தம்பதிக்கு ஒரு பெண் ஒரு பிள்ளை இருவருமே வெளினாட்டில் வெல்செட்டில்டு..திருச்சியில் பணியாற்றியபோது கட்டிய வீட்டில் சேதுராமனும் கற்பகமும்.தெரிந்த ஊர், பழ்கிய மனிதர்கள், பக்கத்திலேயே கடைத்தெரு, மருத்துவமனை, கோயில்கள் என்று தேவையான வசதிகள் இருந்து விட்டதால் இருவரும் நிம்மதியாகவே இருந்தார்கள்.பிள்ளை தன்னோடு வந்து இருக்கும்படி அழைத்தும் அதெல்லாம் சரிப்பட்டு வராது என இங்கேயே இருந்துவிட்டார்கள்.
கண்ணாடியை மாட்டிக்கொண்டு பேப்பரைப் பிரித்தார் சேதுராமன்.முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம்வரை முதலில் ஒரு பார்வைபார்த்துவிட்டு முதல் பக்க தலைப்புச் செய்திக்கு வருவது அவ்ர் வழக்கம்.முதல் பக்க தைலைப்புச் செய்தியை முழுவதும் படிப்பதற்குள் தூக்கம் கண்களைச் சுழற்றியது..ஆ..வென்று நீர்யானைபோல் வாயைப் பிளந்து கொட்டாவி விட்டார் சேதுராமன்.அடுத்த நொடி ஈஸிசேரில் மல்லாந்து சாய்ந்தபடி லேசான குறட்டையோடு தூங்கிப்போனார்.கண்ணில் இருந்த மூக்குக்கண்ணாடி கண்களிலிருந்து நழுவி மூக்கு நுனியில் வந்து நின்றது.பிரித்த பேப்பரின் பக்கங்கள் மடியில் பாதியும் ஒரு சில பக்கங்கள் தரையிலும் விழுந்து கிடந்தன.
பின்புறத் தோட்டத்துக்குச் சென்று வாழை இலை நறுக்குவதற்காக கத்தியோடு கிச்சனிலிருந்து வெளியே வந்த கற்பகம் மாமி மாமா வாயைப் பிளந்தபடி மூக்குக் கண்ணாடி கீழே விழும் நிலையில் மூக்கில் வந்து நிற்க தூங்கும் அழகைப் பார்த்து..தினோ..இதான் வேல..பேப்பர் படிக்கிறேன்னு ஒக்கார வேண்டிது கொர்..கொர்ன்னு தூங்கவேண்டிது..பேப்பர பொறுக்கி எடுத்து.மூக்கண்ணாடிய எடுத்துவைக்க ஒத்தர் வரணும் சத்தம் போட்டபடியே சேதுராமனின் மூக்கிலிருந்து கண்ணாடியை எடுக்கக சட்டென்று விழித்துக் கொண்டார் சேதுராமன்.ஹி..ஹி..இல்லடி கற்பகம் கொஞ்சம் அசந்துட்டேன்.
நன்னா அசந்தேள் போங்கோ..வாசக் கதவு தொறந்திருக்கு..நான் கொல்லேலபோயி மோர் கரைக்க கருவேப்பிலையும் சாப்பட வாழ இலையும் நறுக்கிண்டு வரேன் பாத்துக்கோங்கோ...சொல்லிக் கொண்டே பின்கட்டுக்குப் போக..
ம்ம்ம்..சரி சரி ..நான் பாத்துக்கறேன் சொல்லிக் கொண்டே மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தார் சேதுராமன்.
ஐயோ..அம்மா..காமாக்ஷி..ஈஸ்வரா...இடுப்பு போச்சே..ஏன்னா..சீக்கிரம் வாங்கோ..விழுந்துட்டேன்..
அம்மாடி..அப்பாடி..கொல்லைப்புரத்திலிருந்து மாமி கத்தும் சத்தம் கேட்டு பட்டென விழித்துக்கொண்டார் சேதுராமன்.தூக்கம் சரியாக கலையாத நிலையில் எது வாசல் எது கொல்லையென புரியாமல் வாசலைனோக்கி ஓடி கொஞ்சம் நிதானித்து மீண்டும் திரும்பி கொல்லைப்புரம் நோக்கி ஓடினார்.அங்கே தொடர்ந்து இரெண்டு மூணு னாட்கள் பெய்த மழையில் சிமெண்ட் தரை பாசி பிடித்திருந்தது அதில் கால்வைத்ததில் வழுக்கி விழுந்திருந்தார் கற்பகம் மாமி. அலங்கோலமாய்க் கிடந்த மாமியைப் பார்த்ததும் முதலில் சிரிப்பு வந்ததுவந்தது சேதுராமனுக்கு.
சிரித்துவிட்டால் தீர்ந்தது கதை.முகத்தைச் சீரியசாக வைத்துக்கொண்டு அடடா...பாத்து வரக்கூடாது..?கற்பகம் விழுந்துட்டயா..?
ஆமாம்..ரொம்ப ஆச..கீழ விழணும்ன்னு....அதான் பாக்காம நடந்துவந்து பாசில காலவெச்சு விழுந்துட்டேன்.ரொம்ப சந்தோஷமா இருக்குமே நா கீழ விழுததுல...நேக்கு நேரமே சரியில்ல..
சர்வேஸ்வரா....சொல்லிக்கொண்டே கைகளிரண்டையும் தரையில் ஊன்றி எழ முயற்சிக்க இரண்டு கையும் வழுக்க குப்புர விழப் போன மாமியை வெகு ஜாக்கிரதையாய் கால் வைத்து மாமியின் அருகில் போய் தூக்கிவிட்டார் சேதுராமன்.மெதுவாய் பிடித்து அழைத்துக் கொண்டு வந்து தான் அமர்ந்திருந்த ஈசிசேரில் உட்காரவைத்தார் மாமியை.
குமுதம் வார இதழில் வெளியாகியிருந்த மேற்கண்ட ஒரு பக்கக் கதையைப் படித்துக்கொண்டிருந்த சேதுராமனுக்கு சிரிப்பாய் வந்தது.தன் பெயரும் தன் மனைவியின் பெயரும் இந்தக் கதையில் வரும் தம்பதிகளின் பெயராகவே இருப்பதும் தனக்கும் பேப்பர் படிக்கும் போது தூக்கம் வருவது உண்டு அப்படி தூக்கம் வரும்போது இப்படித்தான் ஈசிசேரில் மல்லாந்து சாய்ந்து தூங்க கண்ணாடி மூக்கில் வந்து ..நிற்க பாதி பேப்பர் தரையில் சிதறிக்கிடக்க மனைவி திட்டிக்கொண்டே எல்லாவற்றையும் எடுத்துவைப்பதும் வழக்கமென்பது ..நினைவுக்குவர வாய்விட்டுச் சிரித்தார் சேதுராமன்.அதோடு கூட யாரோ பக்கத்தில் ..நின்று அவரின் வாழ்க்கையை படம்பிடித்து எழுதியதுபோல் அப்படியே கதையில் அவரின் தற்போதைய வாழ்க்கை எழுதப் பட்டிருப்பது அவருக்கு வியப்பாய் இருந்தது.
ஐயோ..அம்மா..காமாக்ஷி ...ஈஸ்வரா...இடுப்பு போச்சே ...ஏன்னா..சீக்கிரம் வாங்கோ..கீழ விழுந்துட்டேன்...கொல்லைப் புரத்திலிருந்து மனைவி கற்பகம் கத்தும் சத்தம் கேட்டு ஈஸிசேரில் மல்லாந்து சாய்ந்தபடி வாயைப்பிளந்து கொண்டு சன்னமான் குறட்டையோடு போட்டிருந்த மூக்குக் கண்ணாடி மூக்கு நுனியில் வந்து நிற்க தூங்கிக் கொண்டே குமுதத்தில் ஒரு பக்கக் கதை படிப்பது போல் கனவு கண்டு கொண்டிருந்த சேதுராமன் தூக்கிவாரிப்போட்டு எழுந்து கொண்டு ..நெகா புரியாமல் வாசப்புரம் நோக்கி ஓடிவிட்டு நிதானப்பட்டு மீண்டும் கொல்லைப் புறம் நோக்கி ஓடினார்.
அங்கே சிமெண்ட் தரைப் பாசியில் கால் வைத்து வழுக்கி விழுந்து இடுப்பு போச்சே என்று கத்திக் கொண்டிருந்தார் கற்பகம் மாமி.விழுந்து கிடந்த மனைவியைப் பார்த்து முதலில் சிரிப்பு வந்தது சேதுராமனுக்கு.
இந்த கதைய படிச்சவங்களுக்கு ஹி..ஹி..ஹி..நன்றி
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.