மனம் திறந்திடுவாய் - மலர்மதி
This is entry #12 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
"அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே... அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை... ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்... பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள்....
இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே... இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்...
ச்சேச்சே.... அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது...
அவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள்.... அது அவளே தான்....!"
அவளை இன்னொருவனுடன் பார்த்தது அதிர்ச்சியைக் கொடுத்தாலும் அவள் மேல் கொண்ட காதலால் தவறாக நினைக்க முடியவில்லை. முகிலனின் உள்மனம் அவள் உன்னவள் என்று உறுதியாக உரைத்தது. பார்த்த காட்சி உண்மை எனினும் அவன் மனம் அதை ஏற்க மறுத்தது காரணம் புன்னகையை இழந்த அவனது மதியின் முகம்.
அன்று அவளிடமிருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை இவன் அழைப்பையும் ஏற்கவில்லை.
என்ன தான் நினச்சுட்டு இருக்கா இவ.......?
ஃபோனையும் எடுக்க மாட்டேன்றா.........
கோபமும், இயலாமையும் போட்டி போட இரவு முழுவதும் உறக்கமின்றி உலா வரும் வான்மதிக்கு துணையாய் இருந்தவனை மதியின் நினைவுகள் ஆக்கிரமித்தன. அவன் மனம் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
எல்லோர் வாழ்விலும் வரும் பெண் தேடும் படலம் முகிலனின் வாழ்விலும் வந்தது. பெற்றோரிடம் உங்களுக்கு பிடிச்சா சரி என்று பட்டும்படாமல் பேசியவன் ஒரு வகையான அமைதியுடன் புன்னகை அணிந்த முகத்துடன் நின்ற சபர்மதியைக் கண்டதும் சம்மதம் உரைத்தான். அன்றிலிருந்து நேற்று வரை மதியின் குரலை கேட்காத நாள் இல்லை. ஏன் இப்படி....? என்று நினைத்தவன் விழிகளில் இருந்து நீர் வந்தது.
அங்கு மதியின் விழிகளும் நீரை வார்த்தது. சொன்னால் திருமணம் நின்றுவிடுமோ, சொல்லாமல் விட்டால் வாழ்வு நரகமாகிவிடுமோ என்று பலவாறு குழம்பியவள் முகிலனிடம் பேசுவதைத் தவிர்த்தாள். தன் தோழிக்கு நிகழ்ந்ததை கேட்டதிலிருந்து எங்கே தன் வாழ்வும் அப்படி ஆகிடுமோ என்ற குழப்பம் மற்றும் பயம் மனதில் பரவியது. அவ்வப்போது அவனைப் பற்றி சொல்லியிருக்கிறாள் தான் ஆனால் தப்பாக ஏதும் நினைத்துவிடுவானோ என்று மனம் பதறினாள்.
இரண்டு நாட்களாகியும் மதி முகிலனிடம் பேசவில்லை.
இன்று மதியைப் பார்த்தே தீரவேண்டும் என்ற முடிவுடன் அவள் வீடு நோக்கி சென்றான்.
மதியின் வீட்டை அடையும் முன்பே அன்று மதியுடன் சென்றவனைக் கண்டான் முகிலன். பின் தன்னவளைக் காணும் எண்ணத்தை விட்டு வீடு வந்து சேர்ந்தான்.
வெகு நேரம் யோசித்து நேரில் பேசலாம் என்று எண்ணி அவள் வீட்டிற்கு அழைத்து மதியிடம் பேசினான்.
ஹலோ.. முகில்
ம்... நாளைக்கு கோவிலுக்கு வரமுடியுமா மது? கொஞ்சம் பேசணும்....
ம்……
என்ன ஆச்சுடா. ஏதாவது பிரச்சணையா? எதுனாலும் என்ட்ட சொல்லுமா.
அதெல்லாம் இல்லை முகில். என்றவள் மேலும் சற்று நேரம் பேசிவிட்டு வைத்தாள்.
மறுநாள் கோவிலில் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தவளைக் கண்டு அப்படியே நின்றுவிட்டான் முகிலன். கலங்கிய விழிகளுடன் புன்னகைக்க முயன்றவளின் அருகில் அமர்ந்தவன் அவள் முகத்தை பார்த்தபடி பேச ஆரம்பித்தான்.
கல்யாணத்துக்கு முன்னாடி பேச வேண்டிய விசயங்கள பேசி தெளிவாகிக்கோ. சொல்லு ஏன் பேச மாட்டேன்ற...? என்ன ப்ரச்சனை உனக்கு....?
சிறிது நேர அமைதிக்குப் பின்,
முகில்…. என்று இழுத்தவளிடம்
"ம்…. சொல்லுடா" என்றான்.
என்னோட ஃப்ரண்டு ஹரிணி அவ புருஷன விட்டு பிரிஞ்சுட்டா.... அவளோட படிச்ச பையன் கூட சேர்த்து தப்பா பேசினாங்களாம் அந்த ப்ரச்சினைல பிரிஞ்சுட்டாங்க.
எனக்கும்..... நானும்.... எனக்கு.... ப்ரவீன்...
என்று திக்கித் திணறி சொல்லிக் கொண்டிருந்த போது முகிலனுக்கு ப்ரவீனிடமிருந்து அழைப்பு வந்தது.
"ஹலோ. சொல்லு ப்ரவீன்" என்று சொல்ல
மதி திகைத்து விழித்தாள்.
.......