பால் நதி கனவுகள்… - அன்னா ஸ்வீட்டி
அந்த கல்யாணப் பத்திரிக்கையை பார்க்கவும் தேவநதிக்கு கண்ணை மறைத்து கட்டிக் கொண்டு வந்தது கண்ணீர். முட்டிக் கொண்டு வந்தது நெஞ்சம். தேவநதி வெட்ஸ் ப்ரபல்யன்…..இவள் கனவுகளை காலி செய்ய வந்த கல்யாணம் இது.
டை ஃபாக்டரி கழிவுநீரை சுத்தகரிக்கும் ஜெனிடிக் இஞ்சினியர்ட் மைக்ரோ ஆர்கனிசத்தை டிசைன் செய்ய வேண்டும் என்பது 14 வயதிலிருந்து அவள் கனவு.
இந்த ஒரே நோக்குடன் +2 க்குப் பின் பி இ பயோடெக்கில் சேர்ந்தாள். யூஜி சென்னையில் முடித்துவிட்டு பின்பு பி எச் டி வரை யூஎஸ்ஸில் படித்துவிட்டு அப்படியே ரிசர்ச்சில் நுழையப் போகிறேன் என தெள்ளத் தெளிவாக சொல்லி தன் தந்தையிடம் சம்மதம் வாங்கிவிட்டே கல்லூரிக்குள் நுழைந்தாள் தேவநதி.
ஆனால் எல்லாம் நாம் நினைத்தது போலவா நடக்கிறது? பி இ மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது அப்பாவிற்கு பிஸினஸில் ஹெவி லாஸ்…. கவர்மென்ட் கட்டிடம் ஒன்றை கான்ட்ராக்ட் எடுத்து பல கோடி முதலீடு செய்து கட்டிக் கொண்டு இருந்தார் அப்பா. திடீரென சி எம் இறந்து போக…ஆட்சி மாற்றம் வர….முந்தைய கட்சியின் திட்டங்கள் கைவிடப் பட…இவள் அப்பா செலவு செய்திருந்த இவர்கள் பணம் கூட திரும்பி வராமல் போனது.
ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருக்கும்போது சட்டென சரிய தொடங்கிய ஷேர் மார்கெட் இவளது அப்பாவின் மிச்ச மீதி இருந்த முதலீடுகளை இழப்பென்று மாற்ற….
ஜி ஆர் இ எழுதிவிட்டு வீடு வந்த இவளிடம் அப்பா கையெடுத்து கும்பிட்டுவிட்டார்.
“கண்ணுபிள்ள அப்பா நீ கேட்டு இது வரைக்கும் எதுக்கும் இல்லைனு சொன்னதில்ல….இப்ப அப்பா ஒன்னு கேட்பேன் செய்வியாடா….? என்னை மன்னிச்சுடுடா…..மத்தவங்க மாதிரி வயசு வரவும் பொண்ணை அடுத்த வீட்டுக்கு அனுப்பிவிட்டு கடமை முடிஞ்சிதுன்னு இருக்ககூடாது, நீ ஆசைப் படுற அளவுக்கும் படிக்க வைக்கனும்னுதான் நினச்சிருந்தேன்…..இப்ப உன்னை படிக்க வைக்க இதுக்கு மேல என்ட்ட வசதி இல்லைடா…..அப்பா என்ன செய்யனே தெரியலையே தேவிமா ….”
அதோடு முடிந்து போனது தேவநதியின் பயோடெக் ட்ரீம். டிகிரி முடியவும் கிடைத்த வேலையில் சேர்ந்தாள். ப்ரைவேட் பேங்கில் வேலை. 3 வருடம் கடந்திருந்தது. இப்பொழுது தேவ நதி கவர்மென்ட் பேங்க் எக்ஸாமிற்காக தயாராகிக் கொண்டிருந்தாள். அதுவும் நபார்டின் குறிப்பிட்ட அந்த வேலை மேல் ஆசை. அந்த பயோடெக் பிரிவு ஸ்பெஷல் ஆஃபீஸருக்கான ஜாப் ஃப்ரொஃபைல் பிடித்திருந்ததே காரணம்.
இந்த நேரத்தில் அப்பா “என் பிஸினஸை நம்பி இதுக்கு மேலும் காத்துகிட்டு இருக்க முடியாதுடா கண்ணுபிள்ள…. என் உடம்பு போற போக்குக்கு உன்னை பத்ரமான இடத்துல தூக்கி வச்சாதான் எனக்கு நிம்மதியா இருக்கும்” என்றார். அவருக்கு மகள் வாழ்க்கை செட்டிலாக வேண்டுமே என்ற கவலை. அவர் தவிப்பு புரிய “உங்க இஷ்டம்…..யாரை காமிச்சாலும் கழுத்த நீட்றேன் “ என முடித்துவிட்டாள். இதோ கல்யாணப் பத்திரிக்கை ரெடி.
மாப்பிள்ளை ப்ரபல்யன் ஏதோ ப்ரபலமான டெக்ஸ்டைல் ஷோரூம் நடந்திக் கொண்டிருந்தான். நிச்சயத்தின் போது “பொண்ணுங்களை வேலைக்கு அனுப்பித்தான் ஆகனும்கிற நிலை எங்க குடும்பத்துல கிடையாது… “ என்றார் அந்த ப்ரபல்யனின் அம்மா. நிச்சயம் அதில் அலட்டல் குத்தல் எல்லாம் இருந்தது. மெல்ல அந்த ப்ரபல்யனை முதல் முறையாக நிமிர்ந்து பார்த்தாள் தேவநதி. அவன் மௌனமாய் இருந்தான்.
அந்த மௌனமே அவன் எத்தகைய மனைவியை எதிர்பார்க்கிறான் என இவளுக்கு புரிவிக்க….அவ்வப்போது அவன் மொபைலில் அழைக்கும் போதும் சரி…. நிச்சயத்திற்குப் பின்னான இந்த இரண்டு மாதத்தில் நான்கு முறை போல் இவள் வீட்டிற்கு வந்த போதும் சரி..எப்பொழுதும் அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதோடு சரி….இவளாக எதுவும் பேசியதே இல்லை.
“எங்க வீட்டு பொண்ணுங்க இப்டில்லாம் கல்யாணத்துக்கு முன்னால பேசுனதே இல்லை” னு சர்டிஃபிகேட் எப்ப யார்ட்ட இருந்து வருமோ? எதுக்கு வம்பு?
இன்று திருமணம்.
அவன் அம்மா அண்ட் ரெண்டு சிஸ்டர்ஸ் என எல்லோரும் இவளுக்கு பிடிக்காத மாதிரி மட்டுமே பேச அதன் மத்தியில் நடந்தேறியது இவர்கள் திருமணம்.
இந்த நொடி வரை அவனை தவிர்ப்பது எளிதான விஷயமாக இருந்திருக்கிறது என இவளோடு அந்த அறைக்குள் நுழைந்து அவன் தாழிடும் போதுதான் அப்பட்டமாக புரிகிறது தேவநதிக்கு. இனி இவனை இவள் எப்படி தவிர்க்க?
அருகில் வந்தவன் அவள் கையை மென்மையாக பற்றினான். தன் தலையை சற்று குனிந்து கண்களை தரை தாழ்த்தி இருந்தாலும், இவள் முகத்தில் பரவி இருக்கிறது அவனது பார்வை என புரிகிறது இவளுக்கு.
“ந…” அவன் ஏதோ சொல்ல தொடங்கவும்
“ப்ளீஸ் எனக்கு சாரில தூங்கி பழக்கம் இல்லை….ட்ரெஸ் மாத்திகிறனே….ப்ளீஸ்” என்றபடி மெல்ல கையை உருவினாள்.
“சரிமா…ஆனா ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணேன் “என்றபடி இவளுக்கு நேர் எதிரில் சற்று விலகி சென்று நின்றவன் “இன்னைக்கு உன்னை முழுசா பார்க்க கூட முடியலை….இந்த சாரில ரொம்ப அழகா இருக்க நீ…” என்றபடி தன் மொபைலில் இவளை போட்டோ எடுக்க முயன்றான்.
“இப்பவாச்சும் நிமிர்ந்து பாரேன்…ஃபோட்டோல எனக்கு உன் ஃபேஸ் வேணும்….இப்டி எடுத்தா உச்சந்தலைதான் தெரியும்…” சொல்லியபடி இன்னும் குனிந்தபடி நின்றிருந்தவள் தலையை நாடியில் கை வைத்து உயர்த்தியவன், காமிராவில் அவள் முகத்தைப் பார்க்கும் போது நேருக்கு நேராக பார்த்திருந்த அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.