ஒரு நொடி அதிர்ச்சியாகப் பார்த்தவன் “இவ்ளவு நாளும் நீ கொஞ்சம் ஆர்த்தடாக்ஸ்…ஷை டைப்னு நினச்சேன்….உனக்கு என்னைப் பிடிக்கலைனு இப்பதான் தெரியுது…இதை கொஞ்சம் முன்னாலயே சொல்லிருக்கலாம்…. சரி இப்ப சொல்லு செய்றதுக்கு எதாவது இருக்குதான்னு பார்ப்போம்…” என்றபடி பெட்டில் சென்று அமர்ந்தான். ஏமாற்றத்தை விழுங்கும் குரல் அவனிடம்.
நேத்துதான் அந்த நபார்ட் எக்ஸாம் இவள் எழுதாமலே முடிந்திருந்தது. இன்னொரு முறை எப்ப பயோடெக்கில் இந்த ஜாப் ப்ரோஃபைலில் ஓபனிங் வர????? கலைந்து போன அடுத்த கனவு லிஸ்டில் அது பெர்மனென்ட்டாக சேர்ந்திருந்தது.
இப்பொழுது என்ன சொல்லி என்ன செய்துவிட முடியுமாம்…? சந்தையில் நிற்கும் மாடு போல் தனக்கு என்ன காத்திருக்கிறது என்ற ப்ரஞ்சையே இன்றி அசைபோட வேண்டிய நிலையில் இவள்…. இதில் பேசி ஆகப் போவது என்ன? கண்ணிலிருந்து கழன்று விழும் கண்ணீரோடு அசையாது அவள்.
“உன் திங்க்ஸ் அந்த வாட்ரோப்ல இருக்குது” என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டான் அவன்.
இரண்டு நாளில் வீட்டில் இவளும் அவனும் வேலையாட்களும் என்ற லைஃப்ஸ்டைல் வந்திருந்தது. செய்வதற்கு சாப்பிடுவது என்பதை தவிர வேறு வேலை இவளுக்கு இல்லை. மௌனமாய் அந்த நிசப்த நரகத்தை அனுபவித்தாள்.
அவன் காலையில் கிளம்பிப் போனானாகில் இரவு வெகு தாமதமாக வருவான். திருமணமாகி ஒரு வாரம் கடந்திருந்தது.
அன்று இரவும் வழக்கம் போல் இரவு படுக்கையில் படுக்க தொடங்கினான் அவன். ஏற்கனவே படுத்திருந்தவளிடமிருந்து விம்மல் ஒலிகள்.
இவள் புறமாய் திரும்பி ஒரு நொடி பார்த்தவன் “நதிமா “ இவன் அழைக்கவும் வெடித்துவிட்டாள் அவள்.
“ஃபைவ் டேஸா இந்த வீட்ல நான் நிசப்தத்தை தவிர எதையும் கேட்கலை…..பயித்தியம் பிடிச்சிரும் போல இருக்கு எனக்கு….” 5 நாளா அவட்ட யாருமே ஒரு வார்த்தை பேசலைனா பாவம் அவ என்ன செய்வா?
“நான் உன்ட்ட பேசமாட்டேன்னு சொல்லவே இல்லையேமா….” அவன் சொல்ல சட்டென மதியம் இவள் பார்த்த காட்சி மனதிற்குள் விரிகிறது.
மதியம் ஏதோ சத்தம் கேட்கிறது என வீட்டின் வரவேற்பறைக்குள் வந்திருந்தாள் தேவநதி. அங்கு எப்படியோ உள்ளே வந்திருந்த ஒரு சிறு குருவி வெளியே செல்ல அலைமோதிக் கொண்டிருந்தது. சுழலும் ஃபேனுக்கு பயந்து பதறிப் பதறி ஒவ்வொரு ஜன்னலாய் தாவி மோதிப் பார்த்தபடி அது….ஜன்னாலின் கண்ணாடியை இனம் புரியாமல் ஊடுருவும் வெளிச்சத்தை மட்டும் காரணமாய் கொண்டு அதை வழி என எண்ணி அங்குமிங்குமாக பறந்து கொண்டிருந்தது…...திறந்திருந்த கதவை அது கண்டு கொள்ளவே இல்லை…
இவளும் அப்படித்தானோ திறந்திருக்கிற கதவை பார்க்காமல் மூடிய கதவையே பார்த்து கொண்டு இருக்கிறாளோ? இவளுக்கான திறந்த கதவு இவன்தானோ? உண்மையில் இவளுக்கு இவனோடு என்னதான் ப்ரச்சனை? இவளுக்கு வாழ்க்கை கொடுத்த ஏமாற்றங்களை இவனின் மேல் ஏன் திணிக்கிறாள்? அவனென்ன இவளை கடத்திக்கொண்டு வந்தா கல்யாணம் செய்தான்…?
“எனக்கு வேலைக்கு போகனும்….இப்படி வீட்லயே அடஞ்சு கிடக்கனும்னு நினச்சு நான் வளரலை….அதனால எனக்கு இதை தாங்க முடியலை…” மனதின் இருந்த ப்ரச்சனையின் சம்மரி சொன்னாள் அவனிடம்.
அவளைப் பரிவாய்ப் பார்த்தான். “உனக்கு ஓகேனா நாளைல இருந்து என் கூட ஆஃபீஸ் வர்றியா நதிமா?” அவன் கண்களில் ஒரு ஆனந்த ஒளி கீற்று.
பயோடெக் எங்கே….டெக்ஸ்டைல் ஷோரூம் எங்கே….பால் நதியும் பாலை வனமும் மாதிரி….இருந்தாலும் இந்த சத்தமில்லா ஜெயில் வாழ்க்கைக்கு அது எவ்வளவோ மேல் என்றுதான் இப்போது தோன்றுகிறது….
மறுநாள் காலை “நான் ஷோரூம் வர்றப்ப சல்வார் போடவா இல்லை சாரி கட்டவா? எது கரெக்ட்டா இருக்கும்?” அவனிடம் போய் நின்றாள். அப்படித்தான் தொடங்கியது அவனோடு பேச்சு வார்த்தை.
“உனக்கு எது பிடிக்குதோ அது….சாரி ஃபார்மலா இருக்கும்…சல்வார் கம்ஃபர்டபிளா இருக்கும்….ஆஃபீஸுக்கு சல்வார் நல்ல சாய்ஸ்….சேல்ஸ் செக்க்ஷனுக்கு சாரி…பட் நோ ஹார்ட் அண்ட் ஃபாஸ்ட் ரூல்ஸ்” என்ற அவன் பதில் பிடித்திருந்தது.
பின் ஒவ்வொன்றிற்கும் அவனிடம் பேச வேண்டிய நிலை நாள் முழுவதும். அதற்கான அவனது அத்தனை பதில்களும் பிடித்திருக்கிறது இவளுக்கு. காரணம் அதில் அவளுக்காய் காணப்பட்ட சுதந்திரம். அவன் ஒன்றும் இவளை அடைத்து ஒடுக்க வரவில்லை. ஆனால் ஏன் வீட்டுப் பொண்ணுங்க வேலைக்கு போக கூடாதுன்னு நினைக்கிறான்? அவன் அம்மா அப்படித்தானே சொன்னாங்க…
எது எப்படியோ அவனோடு ஷோரூம் செல்வது நிச்சயம் அவள் மனதுக்கு நல்லமாற்றம் தான்.
அந்த பிஸினஸ் ஒன்றும் அவளுக்கு பிடித்துவிடவில்லை என்ற போதும், லேபின் அமைதியை கனவுகண்டிருந்த மனதிற்கு இந்த கச கச கூட்டம் சங்கடம் சேர்த்த போதும்,. பேங்கில் கூட பேக் என்ட் வேலை என்றவகையில் கம்ப்யூட்டரும் அவளுமான அந்த வொர்க்கிங் என்விரோன்மென்டில் கிடைத்த அமைதி இப்போது கிடைகாத போதும்
சட்டென முடிந்து போனது போல் தோன்றிய அந்த நாளின் வேகம், மாலை இவளுக்கு பிடித்த சாட் ஐட்டம் அவனோடு சென்று சாப்பிட்டது….பீச்சில் போய் காரிலிருந்தபடி பாட்டு கேட்டது…. என எல்லாம் பிடித்திருக்கிறது. மொட்டைமாடியில் இரவில் இப்பொழுது அவனோடு பௌர்ணமி பார்த்துக் கொண்டு நிற்பது ரொம்பவும் பிடித்திருக்கிறது.