யார் என்ன பேசினால்... என்ன...?? - சித்ரா வெ
This is entry #13 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
அது மிகப்பெரிய தொழில் நிறுவனம், அதன் இப்போதைய நிர்வாக இயக்குநர் கார்த்திக், முதலில் தாத்தா பிறகு இவன் தந்தை இப்போது இவன் என தலைமுறை தலைமுறையாக இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
முப்பதைந்து வயதே ஆன கார்த்திக் தன் தாத்தா மற்றும் தன் தந்தையை விட இப்போது சிறப்பாக இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறான், போட்டி நிறுவனங்களே இவன் நிர்வாக திறமையை பார்த்து மிரளுகிறது, ஆர்வமுடன் முன்னேற துடிக்கும் இளைஞர்களை வேலையில் அமர்த்தியும், அவன் தந்தை காலத்தில் இருந்து வேலை செய்கிறோம் என்ற பேரில் ஓபி அடித்து சுற்றிக் கொண்டிருப்பவர்களிடம் எப்படி பேசி எப்படி வேலை வாங்கலாம் என்ற திறமையையும் வைத்துக் கொண்டு இந்த நிறுவனத்தை திறம்பட நடத்தி வருகிறான்.
இன்று அலுவலகத்தில் ஒரு முக்கிய மீட்டிங், புதிதாக கிடைத்த பிராஜக்ட் பற்றி கருத்துக்களை கேட்க கார்த்திக் தான் இந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்துள்ளான், கடைசி முடிவை அவன் தான் எடுக்க வேண்டும்.
என்னக் கருத்து சொன்னாலும் சின்ன பையன் சொன்ன முடிவை தானே நாம் கேட்டாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்த அவன் தந்தை காலத்தில் இருந்து வேலைப் பார்க்கும் ஊழியர்கள் ஒரு பக்கமும்,புது புது கருத்துகளோடு நிறுவனத்திற்கு எப்படி இலாபம் சம்பாதித்து கொடுக்கலாம் என்ற யோசனையோடு நிற்கும் புதியவர்கள் ஒரு பக்கமும் இருக்க கடைசியாக வந்தான் கார்த்திக்.
மீட்டிங் ஆரம்பித்தது... எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டு விட்டு புதியவர்கள் சொன்ன யோசனைகளோடு இவன் யோசனையையும் சேர்த்து சொல்லி அதை எப்படி செயல்படுத்தலாம் என்று அவன் பேசிக் கொண்டிருந்த போது அவன் அலைபேசி அடித்தது, என் மனைவி தான் பேசிவிட்டு வருகிறேன் என்று எல்லோரிடமும் அனுமதி வாங்கிக் கொண்டு அவன் அலைபேசியை எடுத்து பேசினான்.
"சொல்லும்மா"
"....."
"ஐயயோ..மறந்து விட்டேனே... சரி சரி டென்ஷன் ஆகாத நான் மீட்டிங் முடிஞ்சதும் போகிறேன் "
"....."
"என்ன இப்பவே போகனுமா...?? சரி போகிறேன்.."
"......"
"நீ டென்ஷன் ஆகாத... நா இன்னும் அரைமணி நேரத்துல அங்க இருப்பேன்... அங்க போய் உனக்கு ஃபோன் பண்றேன்" என்று பேசிவிட்டு ஃபோனை வைத்த கார்த்திக் மீட்டிங்கை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவன் மனைவி சொன்ன வேலையை பார்க்க கிளம்பினான்.
அவன் கிளம்பும் வரை அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஊழியர்களில் அவன் மீது பொறாமை கொண்ட சில பேர் "இவங்கல்லாம் வெளியே தான் வீராப்பை காட்டுவாங்க... வீட்டுக்குள்ள பெட்டி பாம்பா அடங்கிடுவாங்க... பார்த்தியா பொண்டாட்டி ஃபோன் பண்ண உடனே ஓடறத..."
"ஆமாம்பா... என்னவோ சொல்லுவாங்களே... ஆ.. வீட்ல எலி வெளியில் புலி ன்னு.. அப்படிப்பட்டவருப்பா... நம்ம எம்.டி. " என்று பேசிக்கொண்டனர்.
அவன் மீது நல்ல மதிப்பு வைத்திருப்பவர்களோ "என்னத்தான் எம்.டி. பொண்டாட்டி பேச்சை கேட்கிறவரா... இருந்தாலும் இதை எல்லாம் பப்ளிக்கா செய்யனுமா... என்று பேசிக் கொண்டனர்.
ஆனால் தன் மனைவி சொன்ன வேலையை செய்ய காரில் சென்று கொண்டிருந்த கார்த்திக் வேறொரு சிந்தனையில் இருந்தான்.
அவனுக்குத் தெரியும் அவன் அலுவலகத்தில் இருந்து கிளம்பிய பின் அவனைப் பற்றி என்னப் பேசுவார்கள் என்று, ஆனால் அதைப் பற்றி அவன் கவலைப்பட போவதில்லை. அவன் மனைவி அவனை ஃபோனில் இப்படி உரிமையாக திட்டவேண்டும் என்று அவன் எதிர்பார்த்தது அவர்களுக்கு தெரியுமா...???:இல்லை அவன் எதிர்பார்த்தது போல் அவள் மாறிவிட்டாள் என்பதில் இவனுக்கு சந்தோஷம் என்பது அவர்களுக்கு தெரியுமா..??? என்னத் தெரியும் அவனையும் அவன் மனைவியை பற்றியும் அவர்களுக்கு,
படித்து முடித்து தந்தையுடன் தொழிலையும் கற்று இப்போது தனியாக நிறுவன பொறுப்பை ஏற்று கொண்ட சந்தோஷத்தில் இருந்த கார்த்திக் ஏனோ திருமணத்தை பற்றி யோசிக்காமல் இருந்து முப்பது வயதை நெருங்கினான்.
அந்த நேரத்தில் தான் அவன் வீட்டுக்கு அடைக்கலமாக வந்தார்கள் அவன் அத்தையும் அத்தை மகள் நித்யாவும்.
பெற்றவர்கள் செய்து வைத்த திருமணம் என்றாலும் மாப்பிள்ளை என்ற வெட்டி பந்தாவில் தன் மனைவியை தன்னால் பார்த்து கொள்ள முடியும் என்று வீராப்புடன் வேறு ஊருக்கு அவன் அத்தையை அழைத்துச் சென்ற அவன் மாமா அந்த வீராப்பை அவர் மனைவியை வாழ வைப்பதில் காட்டாமல் குடிப்பதும் கூத்தடிப்பதிலும் காட்டினார், அதன் பலனாக உடல் சுகமில்லாமல் படுக்கையிலும் விழுந்தார்.