உனக்காக நான் உண்டு - புவனேஸ்வரி
This is entry #11 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
அதிகாலை குளிர்தென்றல் தேகத்தை தீண்ட , அனிச்சையாய் அவனது கரம் அவளது இடையை தேடி பற்றி கொண்டது. அந்த ஆழ்ந்த தூக்கத்தில் கூட தனது மனைவி அருகில் இருக்கிறாள் என்ற திருப்தியில் லேசாய் புன்னகைத்தான் அவன் .. அவன் கரம் தொட்டவுடனேயே விழித்து கொண்டவளோ நெருங்கி படுத்தவாறே, புன்னகைக்கும் அவன் முகத்தை ஆசையாய் பார்த்தாள் ..
காதலே அழகான உணர்வுதான் என்றாலும் காதலிக்கப்படுவதும் இத்தனை இனிமையான உணர்வா ? புரியவில்லை அவளுக்கு.. அவனது நெற்றியில் உரிமையை விளையாடிய கேசத்தை ஊதி , அவன் பெயருக்கு வலிக்குமோ என்பது போல மிக மென்மையாய்
" சஞ்சய் கிஷன் " என்றாள். "ம்ம்ம்ம் " என்று முனகியவன் தனது பிடியை இறுக்கி " கிஷன் சொல்லாதன்னு சொல்றேன்ல ? கிருஷ்ணன் டீ .. இந்த மீராவின் கிருஷ்ணன் " என்றான் .. அந்த நேரத்தில் கூட அதே வசனத்தை கொஞ்சமும் பிசராமல் அவன் சொல்லியதை கேட்டு களுக்கென சிரித்து வைத்தாள் சமீரா. பின்ன, ஏழு வருடமாய் ஒரே வசனத்தை கொஞ்சமும் மாற்றாமல் சொன்னால் என்னதான் அர்த்தமாம் ..
" நான் சமீரா இல்லையாம் ..மீராவாம் .. இவனும் கிஷன் இல்லையாம் கிருஷ்ணனாம் .. சரியான பிடிவாதம் " என்று சலித்து கொண்டவள் அவனோடு ஒன்றி உறங்க முயன்றாள் .. அவனோ தூக்கத்தை மறந்து அவளை சீண்ட தொடங்கினான் ..
" மீரூ "
" ம்ம்ம் "
" என்னமோ சரி இல்லை "
" என்ன ?"
" நேத்து பார்த்ததை விட இன்னைக்கு இன்னும் அழகா இருக்கியே " என்றான்
" டேய் ..வாய மூடு ..எனக்கு தூக்கம் வருது "
" இல்ல , என்னமோ நடந்துருக்கு .. நேத்து என்ன ஆச்சு சொல்லு ? எனக்கு தெரியனும் " என்று அவன் சரசமாய் கேட்கவும் மொத்தமாய் தூக்கம் கலைந்தது அவளுக்கு .. அவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்கள் கடந்து, நேற்றுதான் தங்களது தாம்பத்ய வாழ்வை தொடங்கினர் இருவரும் .. முகத்தில் நாணம் குடியேற , இதற்கு மேல் தூக்கம் வரபோவதில்லை என்று முடிவெடுத்தவள் அவனிடம் இருந்து தப்பித்து எழுந்தாள் ..
" ஹே பொண்டாட்டி .. "
" என்னடா ?"
" சொல்லிட்டு போ "
" ச்சி போ .. இனிமே ஒன்னும் கிடையாது " என்றபடி குளியலறையில் புகுந்து கொண்டாள் மீரா .. கிருஷ்ணனின் சிரிப்பு சத்தம் தன்னை தொடர்வதை கேட்டு " டேய் திருட்டு பையா, ஒழுங்க உன் வேலைய பாரு " என்று மிரட்டவும் செய்தாள் .. இதற்கெல்லாம் அடங்குபவனா அவன் ? அவளுக்காக புதிய புடவையை தயாராய் எடுத்து வைத்துவிட்டு காலை உணவு சமைப்பதற்காக சமையலறைக்குள் நுழைந்து கொண்டான் ..
குளித்துமுடித்து விட்டு வந்தவள் , அவன் தேர்ந்தெடுத்த புடவையையே கட்டிகொண்டாள் .. என்னை கொஞ்சம் கவனி என்று கேசட் வானொலி அவளது கவனத்தை ஈர்க்க, அதை உயிர்பிக்க போனாள் .. பழைய பொருட்களை பாதுகாத்து உபயோகிப்பது மீராவின் சின்ன சின்ன ஆசைகளில் ஒன்று .. அவளுக்காக அந்த பழைய கேசட் வானொலியை வாங்கி தந்திருந்தான் கிருஷ்ணன் .. எப்போதும் கேட்கும் சுப்ரபாதம் கேசட் வானொலியில் இருக்கும் என்ற நம்பிக்கையில் அதை உயிர்பித்துவிட்டு இரண்டடி நடக்க , கிருஷ்ணனின் லீலையால் வேறொரு பாடல் ஒலித்தது..
" கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா ?
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா ? " என்று பாடல் கேட்கவும் , ஒரு கணம் விழித்தவள் கிருஷ்ணனின் செயல் என்று புரிந்துகொண்டு பாடலை நிறுத்த பார்க்க
" மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா ?" என்று பாடகருடன் கிருஷ்ணனும் இணைந்தே பாடி அவளை பின்னால் இருந்து அணைத்தான் ..
" கிருஷ்ணா "
" ம்ம்ம் "
" உன் சேட்டைக்கு அளவே இல்லையா ?"
" அதை நான் கேட்கணும் .. காலையில சுப்ரபாதம் கேட்கணும் டீ பட்டு .. இப்படி கிளுகிளுப்பா பாட்டு கேட்க கூடாது " என்று அவன் கொஞ்சவும்
" பண்ணுறதையும் பண்ணிட்டு என்னை கை காட்டுறியா ? போடா " என்று செல்ல கோபத்துடன் தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள் சமீரா ..
அந்த ஊஞ்சல் ..! அவளுக்கு மிகவும் பிடித்தமான இடம் .. அவள் வாழ்க்கையில் பல முக்கியமான நிகழ்வுகளை தாங்கிய ஊஞ்சல் அது .. அங்கு அமர்ந்ததுமே தனது கடந்த கால வாழ்க்கை எல்லாமே கண்முன்னே நின்றது .. அவளுக்கு தனிமையை கொடுக்க விரும்பி கிருஷ்ணனும் தூரத்திலேயே நின்றுவிட மூன்று வருடங்களை கடந்து முன்னோக்கி போயிருந்தாள் சமீரா ..