(Reading time: 18 - 35 minutes)

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊஞ்சலில் கிருஷ்ணனுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்  அவள் .. கல்லூரி வாழ்க்கை முடிந்து ஒரு வருடம் யார் கண்ணிலும் படாமல் இருந்தவள் தான் சமீரா .. அவளால் அனைவரையும் விட்டு ஒதுங்கி வாழ முடிந்தது  கிருஷ்ணனை தவிர ! அதற்கு காரணம் அவனது பிடிவாதமான அன்பு .. எத்தனை முறை கோபமான வார்த்தைகளை கொட்டி இருந்தாலும் , அவனை வெறுப்பது போல நடித்தாலும் , அவள் மீது அன்பு காட்ட தவறவில்லை அவன் ..தினமும் போனில் ஒருமுறையேனும் அவளிடம் பேசி அவளை சிரிக்க வைத்து விடுவான் .. கல்லூரி வாழ்க்கையையே வெறுத்த அவளுக்கு  கேட்காமலே கிடைத்த ஆறுதல் அவளது கல்லூரி நண்பன்  இவன்தான் ..

கிருஷ்ணனின் நட்பிற்கு கட்டுபட்டு  முதன்முறை அன்று  அவன் வீட்டிற்கு வந்திருந்தாள் . வந்ததுமே சிறுபிள்ளை போல துள்ளி அந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள்  ..

" அப்பா அம்மா எங்க டா ?"

" வந்துருவாங்க டீ .. பக்கத்துல கோவிலுக்கு போயிருக்காங்க "

" ஹ்ம்ம்   ..இந்த ஊஞ்சல் நல்லா இருக்கு கிஷன் "

" கிஷன் இல்ல கிரீஸ் "

" ஐயோ போதுமே .. ஒரு டைலாக் சொல்லி கொள்ளாதே "

" நானும் காலேஜ் படிக்க ஆரம்பிச்சதுல இருந்து இப்படி சொல்லுறேன் ..என்னை எங்க கவனிக்கிற நீ ?"

" காலேஜ் பத்தி பேசாதே கிஷன் .. நான் இப்போதான் அதையெல்லாம் மறந்து சந்தோசமா இருக்கேன் "

" மறந்துட்டேன்னு சொல்லு ..சந்தோஷமா இருக்கேன்னு டைலாக் விடாதே "

" உனக்கென்ன வேணும் கிஷன் "

" ஐ லவ் யூ "

" வாட் ?"

" நான் உன்னை நேசிக்கிறேன்னு சொல்றேன் .. இங்கிலீஷ் தெரியாதா டீ மக்கு ?"

" விளையாடாதே ..என்னை பத்தி உனக்கு தெரியும்ல "

" தெரியுமே .. நீ ஒரு மக்கு .. ஆனா நல்ல பொண்ணு .. என்னை கண் கலங்காம பார்துப்பன்னு தெரியும் "

" ப்ச்ச்ச் .. சரி நேரடியாகவே கேட்குறேன் .. காலேஜ் படிக்கும்போது பைனல் யெர்ல நானும்… .. கோகுலும் காதலிச்சோம்ன்னு உனக்கு தெரியும்ல ?"

" ஏன் அதுக்கென்ன இப்போ ? அதான் இப்போ பிரிஞ்சுட்டிங்களே?"

" எப்படி உன்னால இதை ஈசியா சொல்ல முடியுது  கிஷன் ? நான் அவனை காதலிச்சேன் .. அவன்தான் என் வாழ்க்கைன்னு நினைச்சு இருந்திருக்கேன் .. இப்போ என்னால முடியாது கிஷன் .. இன்னொரு காதல் சத்தியமா என்னால முடியாது "

" நான் கூடத்தான் ஒருத்திய காதலிச்சேன் "

" ஆனா உன்னுடையது ஒருதலை காதல் .. "

" உனக்கெப்படி தெரியும் ?"

" தெரியும் எப்படியோ "

" சோ ஒருதலை காதல்ன்னா அவ்வளவு சீப்பா ?"

" ச்ச , நான் அப்படி சொல்லல கிஷன் ... ஆனா, ஏற்கனவே ஒருத்தன்  இருந்த இடத்துல இன்னொருத்தன் ...பச்ச் ... இந்த பேச்சே வேணாமே ..எனக்கு அசிங்கமா இருக்கு "

" என்ன நீ அசிங்கம் அது இதுன்னு பெரிய வார்த்தையா பேசுற ? எனக்கு உன்னை நல்லா தெரியும் ! என்னதான் காலேஜ்ல லவ் பண்ணாலும் , அவன் கூட ஒரு தடவை கூட நீ தனியா வெளில போயி இருப்பியா ? அப்பறம் என்ன ... யூ நோ வாட் ? நீயே உன்னை ரொம்ப தப்பா நினைக்கிற "

" அவன் கூட வெளில போகல தான் .. அதுக்காக என் மனசுல அவன் இருந்தது இல்லைன்னு ஆகிடுமா ? ஒரு பொண்ணு கற்பழிக்கபட்டா , கற்பு என்பது உடலுக்கு அல்ல மனசுக்குனு பேசுறவ நான் .. அப்படி இருக்கும்போது என் மனசுல இன்னொருத்தான் இருந்தான் என்பதை எப்படி ஈசியா எடுத்துக்க முடியும் ?"

" நீ ரொம்ப அதிகமா யோசிக்கிற மீரா .. உன்ன மாதிரி யோசிச்சா முதல் காதலோடு வாழ்க்கையே முடிஞ்சதுன்னு எல்லாரும் இருப்பாங்க "

" மத்தவங்கள பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல .. நான் இப்படிதான் " சட்டென வார்த்தையை கத்தரித்தாள்  மீரா .. எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்து விட்டான் அவனும் .. அவன் முகத்தில் இருந்த வலி அவளை என்னவோ செய்தது ..

" யாரிவன் ? இந்த ஒரு வருடத்தில் கூனி குறுகி போன என்னை மீட்டு எடுத்தவன் .. நிழல் போல தொடர்பவன் .. போயும் போயும் என்மீதா இவனுக்கு காதல் வர வேண்டும் " ஆற்றாமையில் அழுதாள்  அவள் ..

" இப்போ எதுக்கு அழற நீ ?"

" .. "

" கேட்குறேன் ல ??"

" உனக்கு புரியாது கிஷன் .. என் வலியும்  பயமும் உனக்கு புரியாது .. "

" புரியவேணாம் விடு "

" என்னை பேச விடு ப்ளீஸ் "

" உன் கடந்த கால கதையை தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன் ? எனக்கு வேண்டியது உன்னுடைய எதிர்காலத்தில் எனக்குன்னு ஒரு இடம் .. அதை தான் தர முடியாதுன்னு சொல்லிட்டியே "என்றான் அவனும் வலியுடன் ..

" என்னால முடியாது கிஷன் .. என்னால காதலிக்க முடியாது .. என்மனசுல காதல் வராது " என்று அழுதவள் முதல் முறையாய் தனது முதல் காதலில் நடந்தவற்றை கிஷன் மறுத்தும் அவனுக்கு கூறினாள் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.