பச்சைமிளகாயில் தொடங்கிய ஈர்ப்பு தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் என்று வளர்ந்து செடிகளின் மீதான காதலாகிப் போனது. பின்னர் தாத்தாவின் மரணம், பள்ளி, கல்லூரி என்று வெவ்வேறு சூழல்களால் மனதின் அடிஆழத்திற்கு சென்றுவிட்டது. அழிந்து விடவில்லை. மரத்தை வெட்டக்கூடாது என்று பாலா வீட்டில் நின்றதுகூட அந்த காதல் தான்.
‘ஜீவா நீ விவசாயம் பண்றியா?’, என்று பட்டெனக் கேட்டுவிட்டான் பாலா. ‘ம்ம்.. எனக்கும் விவசாயம் பண்ணனும்னு ஆசைதான்டா.. ஆனா அதுக்கு முதல வேலைக் கிடைக்கனும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கனும் அப்பதான் ஒரு நிலம் வாங்க முடியும்.. ப்ச் வேலைக் கிடைக்கறமாதிரியே தெரியல..’ என்றாள் ஜீவா.
‘ஏக்கர் கணக்குல பண்ணாதான் விவசாயமா என்ன? இந்த கொல்லையில சின்னதா காய்கறித் தோட்டம் போட்டாக்கூட அதுவும் விவசாயம் தான்’ என்றான் பாலா தன் தோழிக்கு புரியவைத்துவிட வேண்டும் என்ற நோக்கோடு. தன் தோழி சோர்ந்துப்போய் விரக்தியில் வாடுவதை காண சகிக்கவில்லை அந்த நண்பனால்.
‘கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிச்சிட்டு ஏன் விவசாயம் பாக்கனும்?.. மத்தவங்க என்ன சொல்லுவாங்க அப்படினு நினைக்கிறியா ஜீவா?’ என்றவனுக்கு ஒரு அனல் பார்வையே பதிலாய் கிடைக்கவும் ‘நீ அப்படி நினைக்கமாட்டனு எனக்கு தெரியும்.. ஏன்னா நமக்கு ஒவ்வொரு வேலையும் சோறு போடுற விவசாயத்தோட மகத்துவம் பத்தி உனக்கு நல்லா தெரியும். விவசாயம் பண்ணுறதுல உனக்கு விருப்பமும் இருக்கு.. அப்புறம் எது உன்ன தடுக்குது?’ என்று கேட்டவனுக்கு பதிலில்லை. ஜீவாவிடம் ஓர் ஆழ்ந்த மௌனம்.
‘சரி நீ நல்லா யோசி.. நா கிளம்புறேன்.. அப்புறம் இனிமே எதுக்காகவும் அழாதே.. சாதாரணமாவே நீ பயங்கரம்.. அழுதா ஹப்பா சாமி.. பாவம் செல்வா அந்த கொடுமைய பாத்து ரொம்ப பயந்துட்டான் வேற’ என்ற பாலாவை அடிக்க விரட்டிய ஜீவாவின் கையில் சிக்கவில்லை அவன்.
அடுத்து வந்த இரு வாரங்களும் இது சரியாக வருமா நம்மால் முடியுமா என்னும் யோசனையிலும் நம்மால் முடியும் என்று முடிவெடுத்தப்பின் அதைப்பற்றி அறிதலிலுமே சென்றது.
மூன்றாம் வாரம் தன் வீட்டுக் கொல்லையை சுத்தப்படுத்தி அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்தாள். அதில் பாத்திகள் வெட்டத்தொடங்கினாள். ஆனால் மண்வெட்டியை எடுத்து பாத்தி வெட்டிவது என்பது அவ்வளவு எளிதானது அல்லவே. இது போன்ற வேலைகளை செய்து பழக்கமில்லாததால் ஜீவாவுக்கு கடினமாகவே இருந்தது. எப்படியாவது வென்று விடவேண்டும் என்ற உத்வேகம் அவளை செய்யவைத்தது. ஆனால் கைகளில் ஏற்பட்ட வலி ஜீவாவால் அடுத்த இருதினமும் கைகளை தூக்கக்கூட விடவில்லை. அந்த இருதினமும் தோட்டம் போடுவதற்கு தேவையான தகவல்களை அலசி ஆராய்வதற்கு பயன்படுத்திக்கொண்டாள்.
மூன்றாம் நாள் ஜீவா கொல்லைப்புறம் சென்று பார்க்கையில் ஒரு பகுதி முழுவதும் பாத்திகள் வெட்டப்பட்டிருந்தன. ஜீவாவின் அப்பா கண்ணன், ‘ஜீவா இன்னைக்கு எனக்கு லீவுதான்டா.. நா இத வெட்டுறேன்.. நீ இனிமே அந்த சின்ன மம்முட்டில வெட்டு.. பெருசு வேணாம்.. சரியா?’ என்று கூறியபடியே வேலையைத் தொடர்ந்தார். என்றும் எதிலும் உனக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதை சொல்லில் அல்லாமல் செயலில் காட்டுபவர்தான் கண்ணன்.
வேலைகள் மளமளவென நடந்தது. வேளாண் கல்லூரியில் இருந்து வாங்கிவந்த மிளகாய், கத்திரி விதைகள் போடப்பட்டு செடிகளும் வளர்ந்தன.
‘ஜீவா உரம் போட்டா செடி நல்லா வளரும்டா.. உரக்கடையில இருந்து என்னென்ன வாங்கனும்னு சொல்லுமா நா வாங்கிட்டு வரேன்’ என்றார் கண்ணன்.
‘ரசாயன உரத்த போட்டு பூச்சிய கொல்லுறதா நெனச்சு மண்ணுல இருந்த உயிர கொன்னுட்டாங்கப்பா.. நம்ம இயற்கை உரமே போடலாம்.. நாளைக்கு நா போய் செல்வாவ கூட்டிட்டுப் போய் வேளாண் கல்லூரில வாங்கிட்டு வந்துடுறேன்ப்பா’ என்றாள் ஜீவா. தன் மகளின் தலையில் கைவைத்து தட்டிக்கொடுத்து விட்டு பெருமையாக உள்ளேச் சென்றார் கண்ணன்.
மாதங்கள் கடந்தன. ஜீவாவிற்கு இயற்கையின் மீது ஏற்பட்ட காதலால் உருவான காய்கறித் தோட்டம், அவளின் சீரான திட்டமிடுதல், கடின உழைப்பு, குடும்பத்தினரின் ஒத்துழைப்பு, நட்பின் உறுதுணை ஆகியவற்றினால் செழித்து வளர்ந்தது. செடிகளிலும் காய்கள் காய்த்து தொங்கின.
அடுத்து காய்கறிகளைச் சந்தைப்படுத்துதல்..
‘இதுலாம் சரிவராதுமா.. உங்கள நம்பி நா வெளியூர்ல இருந்து வர லோடு எல்லாம் வேணாமுனு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு ரெண்டு தட காய்கறிய தந்துட்டு.. இல்லங்க நா இனிமே இதுலாம் பண்ணலனு சொல்லுவீங்க.. கம்ப்யூட்டர்லாம் படிச்சுருக்கீங்க வேற நாளைக்கே நல்ல சம்பளத்துல வேலைக் கிடச்சு போயிட்டா.. இது சுத்தபடாதும்மா நீங்க கிளம்புங்க..’ என்ற ரீதியிலான பதில்களே ஜீவா தன் தோட்டத்தில் விளைந்த பொருட்களை விற்கச் சென்ற காய்கறி கடைகளில் கிடைத்தது.
அவளின் முயற்சியை மதித்த சில நல்ல உள்ளங்களின் உதவியால் ஜீவா தன் தோட்டத்தில் விளைந்தவற்றை சந்தைப்படுத்த முடிந்தது. முதல் இரண்டு அறுவடைகளிலும் பெரும் லாபத்தை ஈட்டமுடியவில்லை. ஆனால் இவற்றால் எல்லாம் அவளின் முயற்சி இம்மியளவும் சுணங்கவில்லை.
இந்நிலையில் ஒருநாள் ஜீவாவை சந்தித்த பாலா ஒரு புத்தகத்தை பரிசளித்தான்.. ‘இது உன்னுடைய அடுத்தகட்ட பயணத்துக்கு உதவும் ஜீவா’ என்று.. அது ‘முனைவர் கோ.நம்மாழ்வாரின் உழவுக்கும் உண்டு வரலாறு’..
நான்கு ஆண்டுகளுக்கு பின்னர்,
வேளாண் கல்லூரி கருத்தரங்கம், ‘அடுத்து, நம் மாவட்டத்தின் காய்கறி உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பவரும், இயற்கை விவசாயத்தில் முன்மாதிரியாகவும் விளங்கும் இளம் விவசாயி செல்வி.ஜீவாபாரதி அவர்களை மாணவர்கள்முன் உரையாற்ற வருமாறு அழைக்கிறேன்’ என்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் அறிவிப்பை ஏற்று மேடையேறிய ஜீவா பேசினாள்.. “இயற்கையை காதலியுங்கள் அது நிச்சயம் உங்களை வாழவைக்கும்……
This is entry #45 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.