உயிருள்ளவரை உன்னை தொடர்வேனடீ - புவனேஸ்வரி
This is entry #63 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே… அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை…ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர் தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்…பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள்…
இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே…இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்.
ச்சேச்சே…அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது…
அவன் நினைத்து முடிக்கும் முன்,பைக்கில் இருந்தவள் திரும்பினாள்… அது அவளே தான்..!
“தீபிகா” அதிர்ச்சியுடன் மனதிற்குள் அவளின் பெயரை உச்சரித்தான் ஷ்யாம். அவன் அழைத்தது அவளது உள்மனதை அடைந்திருக்க வேண்டும்.. அடுத்த நொடி இயல்பாகவே அவள் அவன் பக்கமாய் திரும்ப, இருவரின் விழிகளும் சங்கமிக்க வேண்டிய கடைசி நொடியில் அதை தடுத்திருந்தான் பைக்கில் அமர்ந்திருந்த அந்த புதியவன்.. பைக்கில் அவள் முன்னே அமர்ந்திருக்க அந்த புதியவன் பின்னால் அமர்ந்து எதையோ கூறி அவள் தலையில் தட்டினான்..
“யாருடா இவன் ?” என்று ஷ்யாமின் மனதிற்குள் கோபம் கனன்றது..அதே நேரம் அவள் மீது வைத்திருக்கும் நேசம் அவனது கோபத்தைக் கட்டுப்படுத்தியது.
“ அவசரப்படாதே ஷ்யாம்.. அவள் தீபியாய் இருக்க முடியாது.. அப்படியே தீபியாய் இருந்தாலும், காரணம் அறிந்து கொள்ளாமல் அவளை சந்தேகிக்காதே” என்று கட்டளையிட்டது அவன் மனம்.. சட்டென்று ஒரு யோசனை உதயம் ஆகிட, அவளுக்கு ஃபோன் போட்டான் ஷ்யாம்.. அவளது செல்ஃபோன் சிணுங்குவதற்குள் இருந்த சில நொடிகளிலேயே அத்தனை தெய்வங்களையும் துணைக்கு அழைத்திருந்தான் அவன்..
“கடவுளே இது தீபிகாவாக இருக்க கூடாது.. இவ ஃபோனை எடுக்க கூடாது !” என்று அவன் கடவுளுக்கே மனு எழுதி கொடுக்க, அந்த மனு அனுப்பிய வேகத்தில் திருப்பி அனுப்பப்பட்டு, இதோ அவளது செல்ஃபோன் அழகாய் சிணுங்கியது..
“தள்ளி போகாதே எனையும்
தள்ளி போக சொல்லாதே” ஃபோனின் திரையில் அவனது முகத்தை பார்த்ததுமே மலர்ந்து புன்னகைத்தாள் தீபிகா.. அவள் கண்களில் நிறைந்திருந்த காதலை கண்டவனுக்கு மனதில் எழுந்த சலனம் பனிபோல மறைய ஃபோனை கட் பண்ண நினைத்தான்..ஆனால் அதற்குள் ஃபோனை எடுத்திருந்தாள் தீபிகா..
“அஹெம் அஹெம் வணக்கம் வருங்கால கணவரே…என்ன இந்த நேரத்துல மனைவியின் நியாபகம் வந்திருக்கே” என்றாள் துள்ளலுடன்.. அவளது குரலும்,முகத்தில் பூத்த புன்னகையும் அவனை திக்குமுக்காட வைத்தது ..
“ வணக்கம் வருங்கால மனைவி..அதென்ன இந்த நேரம் ? எந்த நேரமும்நின் மையல் ஏறுதடி குறவள்ளின்னு பாரதியார் ரேஞ்சுக்கு கனவு கண்டு கொண்டிருக்கும் கணவனை பார்த்து கேட்க வேண்டிய கேள்வியா இது ?-
“ ஹலோ வள்ளின்னு என் அத்தையின் பெயரை சொல்லுறிங்களா ? நான் மாமியாரின் மனம் மெச்சும் மருமகளாக்கும்..இனிமே இப்படி என் முன்னாடி அவங்க பெயரை சொல்லாதிங்க” என்றாள் மிரட்டும் தொனியில்..
“ம்ம்ம்கும்ம்ம் எல்லாம் என் நேரம்..சரிமேடம் என்ன பண்ணுறிங்க ?”என்று அவன் கேட்கவும் தனக்கு பின்னால் அமர்ந்து இருந்த புதியவனை மௌனமாய் இருக்கும்படி செய்கை காட்டிவிட்டு
“ இந்த நேரத்துல நான் எங்கே இருக்க போறேன் ?வீட்டுலதான்” என்றாள்.. புருவம் உயர்த்தி அவளை பார்த்தான் ஷ்யாம்.. அதற்குள் பச்சை விளக்கு எரிய,
“ஓகே அம்மா கூப்பிடுறாங்க…அப்பறமா பேசுறேன்”என்றுவிட்டு அவனது பதிலுக்கு காத்திருக்காமல் ஃபோனை வைத்தாள் தீபிகா.. தனக்கு பின்னால் இருந்த கார் ஹாரன் ஓசை எழுப்பவும் வேறு வழி இல்லாமல் பைக்கை நகர்த்தியவன் தஞ்சம் அடைந்தது அவனின் அன்னை மடியில் தான்..
தனது மடியில் சிறுபிள்ளைபோல படுத்திருந்த மகனின் கேசத்தை பாசமாய் கோதிவிட்டு பேசினார் வள்ளி.
“ வந்ததுல இருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தா என்ன அர்த்தம் கண்ணா? என்ன ஆச்சு ?அம்மாகிட்ட சொல்லகூடாதா ?”
“…”
“வேலையில ஏதும் பிரச்சனையா ?”
“..”
“ப்ரண்ட்ஸ் ஏதாவது சொன்னாங்களா ?”
“….”
“ உன் செல்ல தங்கச்சி, நம்ம அம்மு ஏதும் பண்ணாளா?”
“..”