'உலகத்தில் அழகு ஒன்றுதான் பிரதானமா??? ஏன் கதைகளிலும், திரைப்படங்களிலும் நாயகிகள் மீன் விழிகளும், வெண்ணை கன்னங்களும் மாதுளை இதழ்களுமாகவே இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா??? அவள் மனதில் இருக்கும் இந்த கேள்விக்கு இன்னமும் விடை கிடைத்த பாடில்லை.
'லுகிங் குட் யார்!!!' இன்று அவள் அருகில் வந்து மனோஜ் சொன்ன போது பழைய சம்பவங்ளில் ஒரு முறை பயணித்து திரும்பியது அவள் மனம்.
அவனுக்கு பதில் மொழி கூறாமல், அந்த வகுப்பறையின் பெஞ்சில் வந்து அமர்ந்துக்கொண்டாள் லாவண்யா.
சம்பிரதாயமான நலம் விசாரிப்புகள், வியப்புடன் கலந்த புன்னகைகள் கை, குலுக்கல்கள் இவை எல்லாவற்றுடனும் கடகடவென அவளை சூழ்ந்துக்கொண்டனர் அனைவரும். எல்லாரிடமும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு தனது கையில் இருந்த கார் சாவியையும், கைப்பேசியையும் டெஸ்கின் மீது வைக்க விரிந்தன அங்கே அமர்ந்திருந்த சுப்ரஜாவின் கண்கள்.
'கார்லேயா வந்தே???"
'ம்..' புன்னகைத்தாள் லாவண்யா.
'உன் சொந்த காரா???'
'ம்.. ஆமாம்...'
'நீயே வா ஓட்டிட்டு வந்தே???
'ஏன் நான் கார் ஓட்டக்கூடாதா??? லாவண்யா பட்டென கேட்க
'இல்லை சும்மா கேட்டேன் முடித்துக்கொண்டாள் சுப்ரஜா. இன்னமும் லாவண்யாவின் இதழ்களில் இருந்த புன்னகை மாறவில்லை.
'என்னை இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்க நீ என் கூட இருக்கியா???' பத்து வருடங்களுக்கு முன்னால் இவள் கல்லூரி படிப்பின் கடைசி ஆண்டில் இருந்த போது சுப்ரஜா கேட்ட தினம் இன்னமும் அவள் நினைவை விட்டு அகலவில்லை தான்.
இவளும் அவள் வீட்டுக்கு சென்று பெண் பார்க்கும் படலம் முடிந்து மாப்பிள்ளை வீட்டில் எல்லாருக்கும் சுப்ரஜாவை பிடித்து போய் அனைவரும் கிளம்பி சென்ற பிறகு இவள் அருகில் வந்து இவள் கையை பிடித்துக்கொண்டாள் சுப்ரஜா.
'ரொம்ப தேங்க்ஸ் லாவண்யா...'
'தேங்க்ஸா??? எனக்கெதுக்கு தேங்க்ஸ்???"
'இல்லை... நானும் கொஞ்சம் நிறம் கம்மிதான். இந்த மாப்பிளையை போட்டோலேயே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. எங்கே என்னை பிடிக்கலைன்னு சொல்லிடுவாங்களோன்னுதான் உன்னை வர சொன்னேன். நீ என் பக்கத்திலே இருந்தா என் நிறம் கொஞ்சம் எடுப்பா தெரியும் அதான்....' உள்ளுக்குள் நொறுங்கி துண்டு துண்டாகி போனாள் லாவண்யா.
படிப்பிலும் பெரிய முன்னணி மாணவி இல்லைதான் லாவண்யா. இது போன்ற பேச்சுக்களே அவளை படிப்பில் கவனம் செலுத்த விடாமல் துவள செய்தன என்றாலும் கல்வியில் பின் தங்கி விடவில்லை அவள். அவள் கற்றுக்கொண்ட அந்த கல்வி தான் இன்று வரை அவளுக்கு துணை நின்று அவளை உயர்த்திக்கொண்டிருக்கிறது.
'இப்போ என்ன பண்ணிட்டு இருக்கே லாவண்யா..' இன்னொரு தோழி கேட்க
ஒரு ஸ்கூல்லே பிரின்சிபல் ..'அவள் சொல்ல அங்கே பல கண்கள் விரிந்ததை நிமிராமலே உணர முடிந்தது அவளால்.
இப்போது அவசரமாக அவனை தேடின அவள் கண்கள். அவன் அஸ்வின்!!! அவள் கல்லூரியில் படித்த காலத்தில் அவளது வகுப்பின் ஹீரோ என அறியப்பட்டவன் அஸ்வின். அவனுடன் பழகுவதற்கு தவித்த பெண்கள் சிலர் உண்டு. ஆனால் இவளுக்கு அவன் மீது ஈர்ப்பு என எதுவும் வந்ததில்லைதான்.
ஒரு முறை எல்லாரும் சுற்றுலா சென்ற இடத்தில் கால் இடறி அவன் மீது இவள் விழுந்த நாளை மறக்கவே முடியாது இவளால். அந்த நேரத்தில் அத்தனை பேரின் கேலிப்பேச்சுக்கும் ஆளானாள் இவள்.
'என்னடா லவ்வா லாவண்யாவோட...' நண்பர்கள் அவனை சீண்ட, சுள்ளென பாய்ந்தான் இவன்.
'ச்சே... வாயை மூடு...'
'ஏன்டா... கல்யாணம் பண்ணிக்கோ அவளை. ஜோடி பொருத்தம் பிரமாதமா இருக்கும்...' விடவில்லை நண்பர்கள்.
'ஆமாம் இவளை கல்யாணம் பண்ணிக்கணும். அடுத்து பிறக்கறதும் இவளை மாதிரியே பிறக்கும். அப்புறம் என் வாழ்க்கை என்னாகிறது???..' அவன் சொல்ல அத்தனை பேரும் சிரிக்க. வீட்டுக்கு வந்ததும் அவள் செய்த முதல் வேலை தற்கொலைக்கு முயன்றது தான்!!!
எப்படியோ பெற்றவர்களால் காப்பாற்றப்பட்டாள் அன்று!! தற்கொலைக்கு முயன்றது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று புரிகிறது இன்று!!!
இன்று ஒரு பள்ளியை அழகாக நிர்வகித்துக்கொண்டிருக்கிறாள். பல குழந்தைகளுக்கு நல்ல வழி எதுவென கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறாள். இங்கே இருக்கும் பலரை விட அவளது வாழ்க்கை இப்போது நன்றாகவே இருக்கிறது.
'ஆமாம்... அஸ்வின் வரலையா என்ன??? ' கேட்டாள் லாவண்யா நண்பர்களுடன் இரவு உணவை சாப்பிட்டபடியே!!