“அம்மா, இந்த மஞ்சள் கயிற்றை அவன் என் கழுத்தில கட்டிட்டா.. என் புருசன் ஆயிடுவானா? ச்சீ..அட்டக்கருப்பு..அவன் தொட்டாக்கரி ஒட்டும், என்னை பிளாக்மெயில் பன்னி... இந்தக் கேலி கூத்தை நடத்திட்டு.. இதுக்கு பேரு ஒரு கல்யாணம், இரவு சாந்தி முகூர்த்தம், யாரை ஏமாத்தப்பாக்குறீங்க ..? கிராமத்தில இருந்து இந்தக் கருப்புதுரை வந்தாராம், நின்னு போன கல்யாணத்தை நடத்த தியாக மனப்பான்மையோடு தாலி கட்டினாராம்! ச்சே..இன்னிக்கே என் கல்யாணம் நடக்காட்டி நான் என்ன செத்தாப்போயிடுவேன்? என்னோட எல்லாக் கனவுகளிலும் மண் அள்ளி போட்டுட்டீங்களே? என்னோட கனவெல்லாம் யூ.எஸ் ல செட்டில் ஆகனுங்கிறதுதான்... அதை வேரோட அழுச்சுட்டீங்களே..என்னால சிட்டில இருக்கிற இந்த கூட்டம், மக்கள், புகைமாசு இதையே சகிக்க முடியல, போதாதற்கு நீங்க அந்தக் கரியன் அவன்பேரு என்ன சொன்னீங்க..? தருமன்.. அவன் கூட பட்டிக்காட்டு பங்ளாவுக்கு மாட்டுவண்டில ஜாம் ஜாம்னு அனுப்புறதா சொல்றீங்க..இப்படி ஊர் பேர் தெரியாத ஒருத்தனோட என்ன அனுப்புறதுக்கு உங்களுக்கு வெட்கமாயில்லை?”
இதை உக்கிரமாக கூறிய தாக்ஷியின் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள் பூர்ணா, அதிர்ந்து நிமிர்ந்த தாக்ஷியிடம், “ச்சீ.. வாயை மூடு. யாருடி எவனோ ஒருத்தன், விட்டா, பேசிட்டே போற.. எதுடி கேலிக்கூத்து?
உனக்காக லட்ச லட்சமா கொட்டி, வெளிநாட்டுக்கு அனுப்பி உன்னை படிக்கவச்சாரே உங்க அப்பா, அவரு நெஞ்சபிடிச்சிட்டு சாய்றத பார்த்திட்டுமா, இப்படி பேசுற? தருமன் உன்னோட கணவன், இனிமே உன்னோட கண்ணே அவன் தான்.. அவன் இவன்னு அவரை பேசுறதவிட்டுட்டு மரியாதையா பேசு. அப்புறம்..என்ன சொன்ன? உங்க அப்பா பிளாக் மெயில் பண்ணி இந்தக் கல்யாணத்தை நடத்திட்டார்னா, இப்ப சொல்றேன் கேட்டுக்கோ .. நீ எந்த வீட்டுக்கு முறையா போகனுமோ அந்த வீட்டுக்கு தான் அவரு உன்னை அனுப்பிருக்காரு!”
“முறையா? அவன் என்ன எனக்கு அத்தை மகனா? இல்லை நான் அவனுக்கு மாமன் மகளா?” இளக்காரமாக வந்தது வார்த்தைகள் தாக்ஷியிடமிருந்து.
முறைதாண்டி.. தருமன் உனக்கு அத்தை மகன் தான்.. இதை சொல்லும்போது பூர்ணாவின் நா, தழுதழுத்தது. “இந்த ஊரைவிட்டு ஓடிடனும், வெளிநாட்டில் போய் சொகுசா வாழத்துடிக்கிறேயே, நல்லாக் கேட்டுக்கோ.. இப்ப அப்பா அப்பான்னு நீ கூப்பிடுகிற என் கணவர் நல்லசிவம் உனக்கு அப்பா இல்லை...!”
இதைகேட்டு கேலியாக சிரித்த தாக்ஷி, “என்ன புதுக்கதை விடுறீங்க...நீங்க என்ன சொன்னாலும் நம்பிடுவேன்னு நினைச்சீங்களா...?”
ஆமாண்டி..நம்பினா நம்பு..இந்த நாட்டை விட்டு ஓடனும்னு நினைக்கிறியே, இந்த நாட்டுக்காக எல்லையில் போராடி உயிரை விட்ட உத்தம வீரர் நரசிம்மன் தான் உன் அப்பா. எங்க கல்யாணம் முடிந்து மூனு மாசத்திலேயே இந்திய இராணுவப் படைக்கு சென்ற உன் அப்பா வீரமரணம் அடைஞ்சிட்டாரு. அத்தகைய பெரு வீரனோட விந்தில ஜனுச்சவடா நீ...அவரோட சொந்த தங்கை மகன் தான் தருமன். இதை நான் சொல்லாவிடினும் நீ அவங்க வீட்டுக்கு போனதும் தெரிஞ்சிருப்பன்னு நினைச்சேன்.... கர்ப்பினியா இருந்த என்னை என்னோட அப்பா நல்லசிவத்திற்கு திருமணம் செஞ்சு வச்சாரு. நானும் மனதால் அந்த வாழ்கையை ஏத்துக்கிட்டேன். அவர் இன்று வரை உன்னை தன் உயிரா நினைக்கிறார், என் கணவர் உன்னிடம் கேட்ட வரத்தை நீ அவமானமா நினைச்சா.. இந்தக் கல்யாணத்தை கேலி கூத்தா நினைச்சு உதறினேனா என்னை நிச்சயமா நீ உயிரோட பாக்கமாட்ட.” – சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் பூர்ணா.
தாக்ஷியின் அறை பூர்ண அலங்காரத்தோடு இருந்தது...முந்தின நாள் இரவு ஏதேதோ கனவுகளால் உறங்க முடியாது தவித்தவளுக்கு.. இன்று அடிமேல் அடி.. எந்த நாளையும் இரவையும் எண்ணி வரவேற்க காத்திருந்தாளோ, அந்த நாள் வந்தது. சூறாவளிப்போன்று அவளை சுழற்றி கனவுகளைப் பொடிபொடியாக்கியது. கதவு திறந்து உள்ளே நுழைந்த தருமனைக்கண்டு இயந்திரக்கதியாய் கட்டிலிலிருந்து இறங்கினாள் தாக்ஷி. அவளை ஒரு கணம் கண்டவனின் கண்கள் எதை உணர்ந்ததோ? மிக இயல்பாக அவளிடம் “தாக்ஷி நீ டையர்டா இருப்ப, ப்ளீஸ் ரெஸ்ட் எடுத்துக்கோ, எனக்கும் டையர்டா இருக்கு”, என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல் அருகே இருந்த சோஃபாவில் தன் உடலை விரித்தான் சில நிமிடங்களில் அயர்ந்து உறங்கிப்போனான்.
தாக்ஷி அவன் முகத்தையே ஆழ்ந்து நோக்கிக்கொண்டிருந்தவள் கட்டிலில் அமர்ந்து விம்மி அழுதாள். “வினய்” இந்த பெயரை ஒருமுறை நினைவிற்கு கொண்டுவந்தாள், “ச்சீ..இனி எண்ணத்தாலும் அந்த நம்பிக்கை துரோகியை நினைக்கக்கூடாது” என்ற எண்ணம் தோன்ற மேலும் அழுதாள்.
தாக்ஷி வெளிநாட்டில் படிக்கும்போது அறிமுகமானவன் வினய். அவர்களிடையே இருந்த நட்பு காதலாகும் போது, விசா கால அவகாசம் முடிந்து தாக்ஷி இந்தியா திரும்ப நேர்ந்தது. விரைவிலேயே வினய் அதிரடியாய் குடும்பத்துடன் வந்து தாக்ஷியை பெண் கேட்க, பூர்ணாவும், நல்லசிவமும் அதிர்ந்து போயினர். தக்ஷியோ , “அப்பா, அவரோட விசா கேன்சல் ஆகும் முன்னாடி அவர் என்னை அங்க கூட்டிட்டு போயிடனும்னு நினைக்கிறார், சீக்கிரமா நாள் பாருங்க” என்றாள்.