இதை கேட்ட அவன் அம்மாவோ ராதிகாவின் பெற்றோர்களிடம்
“இதை ஏன் நீங்கள் எங்களிடம் சொல்லவில்லை.?” என்று வினவினார்.
ஆனால் ராதிகாவின் அம்மாவோ “என்னடி ராதிகா இது..? இதை எங்களிடம் நீ சொல்லவே இல்லை?” என்று அவர்கள் முன்னிலையிலேயே கேட்டு விட்டார்.
பாலா அம்மாவோ “இதையே உங்களிடம் மறைத்தாள் என்றால் வேறு என்னவெல்லாம் மறைத்தாளோ?” என்று வினவ , அப்போது பாலா இடையிட்டு
“அம்மா.. இது அவர்கள் பிரச்சினை.. நாம் இப்போது கிளம்புவோம் .. மற்றதை பிறகு பேசலாம் “ என்று கூறவே, அவர்கள் கிளம்பி விட்டார்கள்.
ராதிகா மிகவும் பயந்து போயிருந்தாள். அவள் இதை மறைக்க நினைக்கவில்லை. இதை சொன்னால் கோபித்துக் கொள்வார்கள் என்று எண்ணி சொல்லவில்லை.
அடுத்த வருடம் எழுதி பாஸ் பண்ணிவிடலாம் என்று எண்ணியிருந்தாள், இடையில் இந்த பிரச்சினையில் அவள் மாட்டிக் கொண்டாள்.
அவர்கள் கிளம்பிய பிறகு ராதிகாவின் அம்மா அவளை ஒரு பாட்டம் திட்ட, அவள் அப்பாவோ எதுவும் பேசவில்லை.
பிறகு கொஞ்ச நாள் கழித்து ராதிகாவின் அப்பா, அம்மா பாலாவின் அம்மாவிடம் பேச, பாலா அம்மா தன் மகனை கேட்டார்.
அவனோ “அம்மா.. எனக்கு சும்மா, சும்மா பொண்ணு பார்த்துட்டு பிடிக்கலைன்னு சொல்றது எல்லாம் பிடிக்காது. என்னை பொறுத்தவரை ஓகே. மற்றது நீங்க பார்த்துக்கோங்க..” என்றான்.
“இல்லைடா.. அன்னிக்கு அந்த பொண்ணு டிகிரி கூட முடிக்கலைன்னு நீதானே சொன்ன..?”
“அம்மா.. அது அவள் என்னிடம் சொன்னதை நான் உங்ககிட்ட சொல்லிட்டேன்.. ஆனால் அதுக்காக பிடிக்கலைன்னு இல்லை. இன்னும் சொல்ல போனா அவ மறைக்காமல் சொனனது எனக்கு பிடிச்சிருக்கு. அதனால் மேற்கொண்டு என்ன செய்யணுமோ நீங்க முடிவு செஞ்சிக்கோங்க..” என்றான்.
பாலாவின் அம்மா யோசித்தார். தன் மகனுக்கு பிடித்து இருக்கிறது என்பதால் மேலே proceed பண்ணலாம் என்று ராதிகா வீட்டிற்கு தகவல் சொன்னார்.
ஆனால் தற்போது ராதிகாவிற்கு அவ்ளோ இஷ்டமில்லை.. இதற்கு இடையில் வேறு ஒரு கூத்து ஒன்றும் நடந்தது. அது இவர்கள் குடும்ப நண்பரின் பையன் ராதிகாவை பிடித்து இருப்பதாக சொல்லி அவனே வீட்டில் வந்து கல்யாணம் செய்து கொடுக்க முடியுமா என்று கேட்டு விட்டான்.
இதை அவள் அப்பா , லவ் என எண்ணிக் கொண்டு அவனை மறுத்து அனுப்பி விட்டார். இதுவும் ராதிகா தங்களிடம் மறைத்து விட்டாள் என்று எண்ணி விட்டார்.
ராதிகா பாலாவின் வீட்டில் தன்னை பற்றிய ஒரு black மார்க் விழுந்திருக்க, இனியும் தன்னை அதே கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்று எண்ணி இந்த இடம் வேண்டாம் என்று மறுத்தாள்.
அந்த பையன் விவகாரம், இவள் படிப்பு மறைத்தது எல்லாம் சேர்ந்து அவள் பெற்றோரை இவளுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு சென்றார்கள். அதனால் அவளின் மறுப்புகளை காதில் வாங்காமல் இவள் திருமணத்தை நடத்தினர்.
பாலாவோ திருமணம் நிச்சயித்த போதும் அவளிடம் பேச எல்லாம் ஆர்வம் காட்டவில்லை. அதோ, இதோ என்று திருமணம் முடிந்து தனித்தும் விடப்பட்டு விட்டனர்.
பாலா முகத்தில் பெரிய உணர்சிகள் எதுவும் இல்லாமல் , சாதாரணமாக இருந்தான்.
அவளை பார்த்ததும் “வா.. “ என்றவன், “அந்த இரண்டு papers கிளியர் பண்ண அப்ளை பண்ணிட்டியா?” என்று வினவினான்.
ராதிகாவிற்கு இது மிக பெரிய அடியாக இருந்தது. அவளை பற்றியோ, திருமணத்தை பற்றியோ, அட்லீஸ்ட் எப்படி இருக்கிறாய் என்று ஆரம்பித்து இதை கேட்டு இருந்தால் கூட எதுவும் தோன்றி இருக்காதோ என்னவோ, அவன் எடுத்த எடுப்பில் இப்படி கேட்டது அவளுக்கு மிகவும் அவமானமாக இருந்தது.
ஆனால் அவளின் இந்த மனநிலையை வெளிக் காட்டிக் கொள்ளாமல், வெறுமனே தலையை மட்டும் ஆட்டினாள்.
அதன் பிறகு அவன் வேறு எதுவும் அவளிடம் பேசாமல், தங்கள் வாழ்க்கையை தொடங்கினான். ஆனால் ராதிகாவால் முழுதாக ஒத்துழைக்க முடியவில்லை. என்றாலும் மறுத்தும் சொல்லவில்லை. ஒரு உப்புசப்பில்லாத , கடமைக்கான தாம்பத்தியம் நடந்தேறியது.
மறுநாள் இருவர் முகத்திலும் ஒரு தெளிவு இல்லை. அதை மேலோட்டமாக கவனித்தாலும் யாரும் எதவும் கேட்டுக் கொள்ளவில்லை.
ராதிகாவின் வாழ்க்கை புகுந்த வீட்டில் தொடங்கியது. ராதிகா மாமியார் தொட்டதிற்கும் அவளை குறை கூறினார். எது ஒன்று சரி இல்லை என்றாலும், ஒழுங்காக படிக்காதவள் இப்படிதான் இருப்பாள் என்று திட்டினார். எதையாவது சொல்ல மறந்து விட்டால் , படிப்பை மறைத்தவள் என்று குற்றம் கூறினார்.
பாலாவை பொறுத்தவரை வீட்டை அம்மா பார்த்துக் கொள்கிறார். அவன் மனைவி தன் அம்மா சொல்படி கேட்டு நடக்க வேண்டும் அவ்ளோதான். இதில் ராதிகாவின் உணர்வுகளை அவன் புரிந்து கொள்ளவில்லை. அதற்கான அந்த எண்ணமும் அவனுக்கு இல்லை.