2017 போட்டி சிறுகதை 132 - டிஜிட்டல் காதல் - சித்திக்
This is entry #132 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல்
எழுத்தாளர் - சித்திக்
மித்ரா எவ்வளவு அழகானவளோ அவ்வளவு வித்யாசமானவள். ஒவ்வொரு நாளை மட்டுமல்ல ஓரோர் நொடியையுமே ஆணுக்கு சமமான சுதந்திரத்துடன் வாழ்ந்தாக வேண்டும் என பிடிவாதம் பிடிப்பவள்.. அவளைப் பொறுத்தவரை இளமை என்பதே புதுமையும் கலகலப்புமாக கொண்டாட வேண்டிய பருவம்! அதில் ஒன்றுதான் இந்த டிஜிடல் விரதம்!
"என்னது டிஜிடல் விரதமா? " – தோழியர் குழப்பமாய் கேட்க மித்ரா கூலாகச் சொன்னாள்.
"ஆமா வாரத்துல ஒருநாள் மவுனவிரதம் இருக்கிறதா எங்கம்மா ரொம்பத்தான் அலட்டிக்கிறாங்க. அதனால அவங்களுக்கு போட்டியா இந்த விரதம். செவ்வாய்கிழமை சகல டிஜிட்டல் மேட்டர்களுக்கும் தடா.. ஸ்மார்ட் ஃபோன், எம்பி த்ரீ, நெட்புக், ஈ மெயில், வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர்னு எதையுமே டச் பண்ணப் போறதில்லை "
"இத்தனையும் இல்லாம விஸ்காம் ஸ்டுடண்ட் உன்னால தாக்குப் பிடிக்க முடியுமா? ''
''...'முடியுமா?' ங்கிற கேள்வியே மித்ரா அகராதியில கிடையாது.. முடியும்"
அவளுக்கு முடிந்தது! ஆனால் உடன் படிக்கும் சக மாணவர்களுக்குத்தான் அதை ஜீரணிக்க முடியவில்லை. பல பாய் ஃப்ரண்டுகளுக்கு அதிர்ச்சியும் கூட! அதிலும் இந்த வருடம் பிப்ரவரி 14 காதலர் தினம் செவ்வாய்கிழமை வந்து தொலைக்க... எல்லா டிஜிட்டல் உபகரணங்களையும் மித்ரா ஆஃப் பண்ணிவிடவே.. மித்ராவுக்கு 'ஐ லவ் யூ' சொல்ல நினைத்த நிறைய இளைஞர்கள் மனம் உடைந்து போனார்கள். ஆனால் இன்னும் முழுசாக அல்ட்ரா மாடர்ன் சென்னைக்குள் பிரவேசிக்காத கிராமத்து இளைஞன் கார்த்திகேயன் தனது 'ஐ லவ் யூ'வை பெரிய சைஸ் வாழ்த்து அட்டை மூலம் சொன்னதில் மித்ரா ஆச்சர்யப்பட்டுப் போனாள்.
"நம்ம கிளாஸ்லேயே ஜொள்ளு விடாத ஒரே ஆம்பளை நீதான்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்ப நீயே லவ்லெட்டர் குடுத்துட்டியே? ''
"இதுல என்ன தப்பு? எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. உன்னை காதலிக்கணும் கல்யாணம் பண்ணனும்னு ஆசை. கோர்ஸ் முடிஞ்சதுமே ஜாப் வேற ரெடியா இருக்கு. அதான் கிரீட்டிங் கார்டு குடுத்து டீசண்டா ப்ரபோஸ் பண்றேன்''
"ஆனா எனக்குப் பிடிக்கலையே? உனக்கும் எனக்கும்தான் செட் ஆகாதே.. போன ஜெனரேஷன் பையனாட்டம் 'காலேஜுக்கு வர்றதே படிக்கத்தான்'கிற மாதிரி நீ சின்சியர் பையன்.. நானோ படிப்பை விட ஜாலிக்காகவே காலேஜ் வர்றவ. நீ குனிஞ்ச தலை நிமிராதவன்.. ஆனா நான் யாரையாவது அடிக்கணும்னா கூட குனியாமலே செருப்பை எடுக்கிற ஆள். மொத்தத்திலே நீ அனலாக் பையன்.. நான் டிஜிடல் பொண்ணு''
''அப்போ இன்னும் நல்லதா போச்சு. ரெண்டு எதிர்மறை கேரக்டர்ஸ் ஒண்ணு சேர்ந்தாதான் லைஃபே சுவாரஸ்யமா இருக்கும். நீ என்னதான் கலாட்டாவா திரிஞ்சாலும் பேசிக்கா, 'ரொம்ப நல்ல பொண்ணு'னு என் மனசு சொல்லுது. அதுதான் நான் 'ஐ லவ் யூ' சொன்னேன். ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உன் விருப்பம்''
'ஹேய் பார்க்கிறதுக்கு தயிர்சாதமா இருந்தாலும் பேச்சு பிட்ஸா லெவலுக்கு ஹை டெக்கா இருக்கே. அதெல்லாம் சரி, நியூ இயர் அன்னைக்கு ராகேஷ் என்னை ப்ரொபோஸ் பண்ணி, நானும் அவனுமா ஒண்ணரைமாசமா ஊர் சுத்திகிட்டிருக்கிறது காலேஜ் பூரா தெரியுமே”
"அதுனால என்ன? ராகேஷ் உன்னை லவ் பண்றதா ஊர் பூரா சொல்லி திரிஞ்சாலும் நீ இன்னும் அவனை லவ் பண்ணலையே? இப்பவும் 'ஐ லைக் யூ' மட்டும்தானே சொல்லி இருக்கே.? "
"அடப்பாவி என் டேட்டாவெல்லாம் விரல் நுனியில வச்சிருக்கேன்னு சொல்லு. ஆமா, நான் ஏன் இன்னும் ராகேஷ்கிட்டே 'ஐ லவ் யூ' சொல்லலைங்கிற ரகசியம் உனக்கு தெரியுமா?"
"தெரியாது. தெரியவும் வேண்டாம். எனக்கெதுக்கு அடுத்தவங்க விஷயம்?''
வாழ்த்து அட்டையை ஸ்கூட்டி மேலே வைத்துவிட்டு எதுவுமே நடக்காதது போல இயல்பாக நடையைக் கட்டிய கார்த்திகேயனை பிரமிப்புடன் பார்த்து நிற்கையில் அவன் கேட்காமல் போன அந்த ராகேஷ் ரகசியம் மனதுள் நிழலாடியது.
புதுவருடம் அன்று சரியாக நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு கதவு தட்டப்பட்டபோது அப்பாதான் போய் கதவு திறந்தார். வாசலில் யாரும் இல்லை. ஆனால் ஓர் ஒற்றை ரோஜா.. கூடவே ஒரு பென் டிரைவ்! தோழர் தோழியருக்கு புத்தாண்டு எஸ் எம் எஸ்களை தட்டி விட்டவாறே மித்ரா மாடி இறங்கி வருகையில் டிவி திரையில் அந்த பென்டிரைவ் வீடியோ!
கையில் ஒற்றை ரோஜா போஸ் கொடுத்தவாறே, ஓர் அல்ட்ரா மாடர்ன் இளைஞன் ஏகத்துக்கு ஜொள்ளும் லொள்ளுமாக மித்ரா மீதுள்ள காதலை மைக் போட்டு பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தான்.
''ஹாய் மித்ரா டார்லிங்.. திஸ் இஸ் ராகேஷ். யுவர் சின்சியர் ஃபேன்.. கலீக்.. ஃப்ரண்ட்.. எக்செட்ரா எக்செட்ரா...'என அவன் பேசப் பேச மித்ராவின் பலவகை போஸ் புகைப்படங்கள் பலப்பல வர்ண ஜால பின்னணிகளில் வந்து போயின.
"அப்பா இங்கே என்ன நடக்குது? "
"வாடி வா. நாங்க கேட்கறதுக்கு முன்னால நீ முந்திக்கிறியா? என்னடி இது கர்மம்?" - அம்மாதான் முதலில் பாய்ந்தாள்.
"என்கிட்டே கேட்டா? காலிங்க் பெல் அடிச்சுதேன்னு இப்பதான் இறங்கி வர்றேன். அப்பா என்னப்பா இதெல்லாம்? ராகேஷ் இங்கே வந்தானா?''