2017 போட்டி சிறுகதை 140 - மனம் தேடும் பொற்காலம் – ஜெனிற்றா
This is entry #140 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - பள்ளி/கல்லூரி நாட்கள்
எழுத்தாளர் - ஜெனிற்றா
"இந்த பூரிக்கும் கிழங்கு குர்மாவுக்கும் ரொம்பவெ நல்ல டேஸ்டா இருக்கு" என்று கூறியபடியே நான் எண்ணையில் சுடச் சுட நான்காவது பூரியை வாயினுள் தள்ளிக்கொண்டிருந்தாள் லிஜி.
லிஜி என் கணவனுடைய மாமன் மகள். பி.காம் இரண்டாம் வருடம் படிக்கின்றாள். 19 வயதுதான் ஆகிறது.என் கணவனுடைய மாமன் குடும்பம் பெந்தெகோஸ்தே சபையை சேர்ந்தவர்கள். நகை ஒன்றும் அணிய மாட்டார்கள். அவள் படிக்கும் கல்லூரி எங்கள் வீட்டிற்கு கொஞ்சம் பக்கத்தில் இருப்பதால் இப்படி திடீரென்று விஜயம் தருவாள். லிஜியின் தந்தை கொத்தனார் வேலை தான் செய்கிறார். அவர்களுக்கு கொஞ்சம் நிலமும் இருப்பதால் வீட்டிலிருக்கும் போது விவசாயமும் செய்கிறார். லிஜியின் அம்மா ஒரு மருத்துவமனையின் உணவகத்தில் சமையல் வேலை செய்கிறார்கள். மகள் படித்து எதாவது வேலைக்கு போகவேண்டும் என்பதுதான் பெற்றோரின் ஆசை.
“இன்னொரு பூரி எடுத்துக்கோ" என்று நான் சொல்ல "வேண்டாம் அக்கா போதும். இனி காலேஜ்க்கு போகணும்" என்று சொல்லிக் கொண்டே கை கழுவ சென்றாள். ஏதோ இவளிடம் வித்தியாசம் தெரிகின்றதே என்று இன்று லிஜி வந்ததிலிருந்தே எனக்கு தென்படுகிறது..ஆனால் புரியவில்லை. அவள் கை துடைத்துக்கொண்டு வரும்போது தான் கவனித்தேன் அந்த நீலக்கல் வெள்ளி மோதிரம் அவள் விரலில் அணிந்திருப்பதை...
“இதென்ன புதுசா மோதிரம் எல்லாம் போட்டிருக்க.ரொம்ப அழகா இருக்கு. உன் பிரெண்ட்ஸ் யாராவது தந்தாங்களா"
அவள் முகத்தின் மாற்றம் நான் கவனிக்கத் தவறவில்லை. இப்போது என் கணவனும் அதை நோக்கியவாறே கேட்க.. என் கணவனை அவள் அண்ணா என்று தான் அழைப்பாள். சாதாரணமாக என் கணவன் யாரிடமும் கடினமாக பேச மாட்டாங்க. எப்பவும் ஒரு நேசத்துடன் பழகுவதுதான் அவர்கள் குணம். அதனால லிஜி ரொம்பவும் மறைக்க தேவையில்லாமல் எல்லா விவரத்தையும் சொன்னாள்.
அவள் தினமும் கல்லூரிக்கு வருகிற மினி பஸ் ஓட்டுநரை காதலிப்பதாகவும், அவர் தந்ததுதான் இந்த மோதிரம் என்றும் சொல்லிவிட்டு " அண்ணா நீங்க தான் அம்மா அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கித்தர வேண்டும் என்றும் சொன்னாள். என் கணவனும் "சரி நீ அந்த பையனோட செல் நம்பரைத்தா நான் முதலில் அவங்கிட்ட பேசிட்டு அப்புறம் முடிவெடுக்கலாம். இப்பொ காலேஜ்க்கு போ" என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அந்த அலை பேசி எண் கேட்டதே எப்படியாவது லிஜியை இந்த வயது கோளாரிலிருந்து வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான்.
அந்த அலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசி விசாரித்த பிறகு தான் தெரிந்தது அந்த ஓட்டுனருக்கு 34 வயது என்று. எனக்கு கேட்டதும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
“மாமா , அத்தை ரெண்டு பேரும் ஒவ்வொரு திசையா வேலைக்கு போய்யிட்டு இரவு தான் வீட்டிற்கு வர்றாங்க. பொண்ணு காலேஜ் போயிட்டு எத்தனை மணிக்கு வர்றா, அவ செல் போன்ல யார் கூட எல்லாம் பேசுறானு அவங்களுக்கு ஒண்ணும் தெரியல. நான் ஆபீஸ் போயிட்டு வர்றேன். ஈவ்னிங்க் அவங்க வீட்டுக்கு போகலாம்"
என் கணவன் போய் சில நேரம் ஆகிவிட்டது.. என் நினைவுகள் தான் எங்கெல்லாமோ சுற்றிக் கொண்டே இருக்கிறது. பள்ளி கல்லூரி நாட்களில் காதலென்னும் மாய வலையில் சிக்கி சீரழிந்த பிள்ளைகளை நானும் பார்த்திருக்கிறேன்.
மழை வந்து தினங்கள் கழிந்தாலும் நிலத்தின் மேனியதில் மழையின் சுவடாக ஈரத்தன்மை இருப்பதுபோல, ஆண்டுகள் பல கழிந்திடினும் சரித்திர சுவடாக வரலாற்றுத் தடங்கள் இருப்பதுபோல என்னுள்ளிலிருந்த சில சுவடுகள் இப்போது வெளியெட்டிப்பார்க்கிறது.
நான் படித்த கல்லூரி பெண்கள் கல்லூரி. சிறு வயதிலிருந்தே அம்மா பைபிளிலிருந்து கதைகள் சொல்லித்தருவதால் எனக்கு சிறு வயதிலிருந்தே பைபிள் படிப்பதில் ஆர்வம். பாட புத்தகம் எடுத்து படிக்கும் முன் பைபிள் வாசித்து சின்ன ஜெபம் செய்து விட்டு படிப்பதுதான் என் அன்றாட வழக்கம். நான் படித்த கல்லூரி ஒரு கிறிஸ்தவக் கல்லூரி. அதனால் கல்லூரி விடுதியில் எல்லா நாட்களும் மாலை 5;30 க்கு ஜெப நேரம். விருப்பம் உள்ளவர்கள் ஆலயத்தில் போய் கலந்து கொள்ளலாம். எனக்கு கீழே விழுந்து காலில் அடி பட்டிருந்ததால் மூன்று நாட்களாக நான் கல்லூரிக்கு போகாமல் விடுதி அறையில் தான் தங்கியிருந்தேன். அன்றும் நான் மாலையில் பைபிள் வாசித்துக் கொண்டிருக்கும் போது நான் தங்கி இருக்கும் அறைக்குள் வந்தாள் இரண்டாம் ஆண்டு பி.ஏ படிக்கும் கெப்சி. அவள் அந்த விடுதிக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகிறது என்பதை நான் அறிவேன்.
“பைபிள் வாசிக்கிரியா...டெய்லி பைபிள் வாசிப்பியா... ரூம் மெட்ஸ் எல்லாரும் எங்க" என்று என்னை பார்த்து கேட்டாள்.
நானும் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு "நீ ஏன் இப்பொ ஹாஸ்டல் வந்திருக்க..உங்க வீடு பக்கத்தில தானே என்று கேட்டதற்கு அவங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் ஆசிரியர்கள் என்றும் அவள் அண்ணன் திருமணம் ஆகி சென்னையில் இருப்பதாகவும் இப்போது அவர்களுக்கு குழந்தை பிறந்திருப்பதால் பெற்றோர்கள் சென்னை போயிருப்பதால் இரண்டு வாரத்திற்கு மட்டும் விடுதியில் தங்க அனுமதி கேட்டு இவள் பெற்றோர் இவளை விட்டு சென்றதாகவும் கூறினாள்.