“ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியிலே மனுஷனையே கடிக்கிறாப்பிலே ஆசான்கிட்டயா மாணவன் விளையாடுறது? இதுக்கு நீங்க அனுமதி குடுப்பீங்களோ!”
“அவர்ட்ட என்ன பேச்சு. டேய் சூர்யா ’விளையாட்டா அவமானப் படுத்திட்டேன்.. மன்னிச்சுருங்க’ன்னு சொல்லிட்டு ஓடிப்போய்டு“
“இல்லை சார் நான் சீரியஸாத்தான் கேட்டேன். யாரையும் அவமானப்படுத்தறதுக்காக இல்லை. ஸ்டுடண்ட்ஸ் யாருக்குமே தெரியாம ரகசியமாத்தான் வகுப்பு நடத்த ஆசை “
“ஆசையாமே ஆசை என்னதான் புத்திச்சாலி மாணவனா இருந்தாலும் குரு சாபம் வாங்காதே.. வாங்கினா நாசமா..”
பொங்கி எழுந்தார் சண்முகசுந்தரம்.
“நிறுத்துங்க. என்னோட எந்த மாணவனையும் யாரும் சபிக்கிறதை அனுமதிக்க முடியாது. ம். சூர்யா இங்க வா. நீ இப்ப சொன்னது நிஜம்தானா? எல்லா மாணவர்கள் முன்னிலையில் இல்லாம ரகசியமாத்தான் வகுப்பு நடத்தும் திட்டமா? “
“யாருக்குமே தெரியாமதான் நடத்த விருப்பம். அதுவும்.. பத்து பன்னிரண்டு ஆசிரியர்களுக்கு மட்டுமே“
எல்லோர் முகங்களும் குழப்பத்தில் சுருங்க... அழுத்தமாக சொன்னார் தலைமை ஆசிரியர்.
“ஓ.கே சூர்யா நான் உனக்கு கொடுத்தவாக்கை காப்பாற்றுகிறேன். இந்த வாரமே நீ எங்களுக்கு வகுப்பு எடுக்கலாம்.“
“நன்றி ஐயா ! “
தலையிலடித்துக் கொண்டு ஆசிரியர் கூட்டம் வெளியேறியது.
அந்த நாளும் வந்தது. தலைமை ஆசிரியர் அறைக்கு அடுத்த அறையில் கூடினார்கள். புதிதாக சேர்ந்திருந்த ஐ.டி. டீச்சர் பத்மாவதி.. தமிழ் ஆசிரியை சரோஜினி..உட்பட சூர்யா செலக்ட் செய்திருந்த அத்தனை ஆசிரியர்களும் ஆஜர்.
“முதல்ல தலைமை ஆசிரியருக்கும் மற்ற ஆசான்களுக்கும் பணிவான வணக்கங்கள்.” -என்று சாதாரணமாக சொன்ன சூர்யா குனிந்து அரைநிஜார் பையிலிருந்து ஒரு மூக்கு கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு.. வலது கையில் பிரம்பையும் இடது கையில் புத்தகம் ஒன்றையும் வைத்துக்கொண்டு நாடக பாணியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபோது கண்ணாடி அணியும் சண்முகசுந்தரமும் ஆங்கிலவாத்தியார் ஜிப்பா ஜார்ஜும் முகம் சுளித்தனர். எதையும் கண்டு கொள்ளாமல் பிரம்பால் கரும்பலகையை சுட்டியவாறு,
“நான் எந்த ஏட்டுப் பாடத்தையும் நடத்தப்போவதில்லை. நான் வகுப்புன்னு சொல்லி இப்ப அரங்கேற்றப்போவது பாடமா? நாடகமா? மிமிக்ரியா? இல்லே...எல்லாம சேர்ந்த கலவையா?-ங்கறது எனக்கே தெரியலை. அப்பப்போ கோபம் வந்தாலும் கடைசி வரை பொறுமை காக்கவும். முதல் வகுப்பை ஆரம்பிக்கட்டுமா? “ - எனச் சொன்னதும் எல்லோர் முகத்திலும் கலவரம் பரவிற்று .
‘” ___________பன்னாடைப்பசங்களா ஒரு லென்ஸை எடுத்தா முதல்ல என்ன பார்க்கணூம் ? லே கூறு கெட்ட_____________ நீ சொல்லு . இது என்ன லென்ஸ் ? __________ மேட்டர்லாம் கேட்டா கரக்டா சொல்லுவீங்க பிஸிக்ஸ் கேள்விக்கு மட்டும் ஏன்ல _____________ பதில் சொல்லமுடியலையாக்கும்__________“
மஞ்சள் சட்டையில் வகுப்பின் இடது ஓரம் இருந்த பிசிக்ஸ் ஆசிரியர் கணேசன் முகம் இருண்டு சுருங்கியது. இப்படி வகுப்பில் ஜாதி மத குறியீடு பெயர்ளை கொச்சையாய் சொல்லி விளிப்பதும் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதும் அவரது வழமை என்பது பள்ளி முழுக்க படு பிரசித்தம்.
“என்ன புரிந்ததா? நான் எந்த நபரைப்பற்றிய பாடம் நடத்துகிறேன் என்று. இது ஒரு தவறான செயல் மட்டுமல்ல இந்திய சட்டப்படி பெரும் குற்றமும் கூட. இன்றுள்ள அபாய அரசியல் சூழல்ல ஏதேனும் ஒரு மாணவனின் தந்தை ‘இந்த ஆசிரியர் என் மகனை இப்படி ஒரு இழி மொழி கொண்டு விளித்தார்'என்று வழக்குத் தொடுத்தால் நிச்சயம் இவர் சிறைக்கு போக நேரிடலாம். அதை விட கொடுமை இவர் மாணவர் சமூகத்தில் ஒரு தவறான முன்மாதிரியை ஏற்படுத்திவிடுவது. ‘ஒருவனை கோபப்படுத்த..அவமானப்படுத்த அவனது ஜாதி மதத்தை இழிவு படுத்தினால் போதும் என்ற அருவருப்பான அதிபயங்கர விஷத்தை களங்கமற்ற பிள்ளைகள் மனத்தில் விதைப்பது மிகப்பெரும் கொடுமையல்லவா? ”
ஆசிரியர் முகத்தில் ஈயாடவில்லை.
“இனி கணித வகுப்புக்கு வருவோம். திரு சண்முகசுந்தரம் அவர்களே அடுத்தவாரம் காலாண்டு பரீட்சை ஒன்பதாம் வகுப்பு கணக்கு வினாத்தாளை தயார்படுத்திவிட்டீர்களா ? “
மூக்கு கண்ணாடியின் மேல் புறமாய் ஊடுருவி பார்த்து “ ம் ‘' என்றார் தலைமை ஆசிரியர்.
“சரி அதுல என்னென்ன பாடங்களை உட்படுத்தியிருக்கீங்கன்னு சொல்லமுடியுமா ? “
“ம் அல்ஜிப்ரால பாலிநாமியல் ..ஜியாமெட்ரியிலே லைன்ஸ் , நம்பர்கள்ல இர்ரேஷனல் அப்புறம் லீனியர் இக்வேஷன்“
“மறைக்காமல் சொன்னீர்கள் நன்றி . இதுலே லீனியர் இக்வேஷன்ஸ், லைன்ஸ் பாடங்களை வகுப்பிலே எடுத்தீங்களா ? “
“இல்லை. வர்ற வாரம் எடுத்திருவேன் “