தொடர்ந்து நேரம் இனிமையாக சென்றாலும், பிரீத்தாவின் மனதினுள் இந்த குழப்பமுமே மேலோங்கி இருந்தது...
யோசிக்க யோசிக்க பூர்ணி சொல்வதும் சரி தான் என்றே தோன்றியது...!
அஜய்யே குடும்பத்தின் முழு பொறுப்பையும் சுமப்பது போலல்லவா இருக்கிறது?
குடும்பத்தில் அவளின் பங்கு என்ன??? ஒரு மனைவியாக தன் பொறுப்பை அவள் சரியாக செய்யவில்லையோ???
திங்கள் காலை அலார சத்தத்தில் கண் விழித்த அஜய், அருகே மனைவியை காணாமல் ஆச்சர்யப்பட்டான்...
கிச்சனில் இருந்து வந்த குக்கரின் விசில் சத்தம் கேட்க, ஆச்சர்யத்தை அடக்க முடியாமல் கட்டிலில் இருந்து எழுந்து கிட்சன் வந்தவன், அங்கே பிரீத்தா மும்முரமாக சமையலில் ஈடுப் பட்டிருப்பதைக் பார்த்து வாயை பிளந்தான்.
“ஹேய் பிரீத்ஸ் என்ன அதிசயம்??? சீக்கிரம் எழுந்திருக்க? சமையல் வேற செய்துட்டு இருக்க??? ஒரு நிமிஷம் மறந்து வேற வீட்டுக்கு வந்துட்டேனோன்னு நினைச்சேன்....”
அவனின் கேலியை கண்டுக் கொள்ளாதவளை போல,
“இதெல்லாம் நான் செய்ய வேண்டிய வேலை தானே... அஜய், இனிமேல் இதை எல்லாம் நானே செய்றேன்... நீங்க செய்ய வேண்டாம்...” என்றாள் அவள்.
“அந்த கொடுமை வேறயா?” என்று விளையாட்டாக சொன்னவன், அவள் முகத்தில் இருந்த தீவிர பாவம் புரிந்து,
“ஹேய், நான் என்ன தப்பு செய்தேன்??? இப்படி உன் சமையலை சாப்பிட்டே ஆகனும்னு பெரிய பனிஷ்மென்ட் கொடுக்குற???” என்றான்.
“ப்ச்.. இதுக்கு எல்லாம் எனக்கு டைம் இல்லை அஜய்... நீங்க ஆபிஸ் கிளம்புற வேலையை பாருங்க...”
இவளுக்கு என்னவாகி விட்டது என்று யோசித்தாலும், சரி மாலையில் பேசிக் கொள்ளலாம் என்று அப்படியே விட்டான் அஜய்.
ஆனால் அன்று மாலையில் மட்டுமல்லாமல், தொடர்ந்த வந்த நாட்களிலும் பிரீத்தா அஜயை வீட்டு வேலை எதையும் செய்ய விடவில்லை... அதிக நேரம் கண் விழிக்க தேவை இருந்தாலும் அவளே எல்லாவற்றையும் செய்தாள்...
அஜய் உதவுவதாக சொன்னாலும் கூட அதை அவள் ஏற்கவில்லை...
அஜய்யின் பொறுமை மெல்ல கரைந்து போனது...
பத்திரிக்கை ஆபிசில் இருந்து வேக நடையுடன் வெளியே வந்த பிரீத்தா, தன் அருகே உரசிக் கொண்டு வந்து நின்ற காரை திகைத்து பார்த்தாள்.
காரினுள் இருந்து கை அசைத்தான் அஜய்.
அவளை காரினுள் ஏறுமாறு அவன் சைகை செய்ய, ஒரு வினாடி யோசித்து விட்டு, கார் கதவை திறந்து முன் சீட்டில் அமர்ந்தாள்.
அஜய் உடனே எதுவும் சொல்லாமல், அமைதியாக காரை ஒட்டிக் கொண்டிருந்தான்...
அவனே ஏதாவது சொல்வான் என்று காத்திருந்த பிரீத்தா அவன் வாயை திறக்காமல் இருக்கவும்,
“எங்கே போறீங்க அஜய்? இது வீட்டுக்கு போற வழி இல்லையே...” என்றாள்...
அஜய் பதில் எதுவும் சொல்லவில்லை.
மேலும் ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்த பிரீத்தா,
“அஜய், பசங்க ஸ்கூல்ல இருந்து வந்திருவாங்க... நான் வீட்டுல இல்லைனா பயப்படுவாங்க... வீட்டுக்கு போங்க...” என்றாள்...
அஜய் அப்போதும் அமைதியாக இருந்தான்...
“அஜய்...”
கிட்டத்தட்ட அலறிய அவளின் குரலை கேட்டு சின்ன புன்னகையுடன் அவளை பார்த்தான் அஜய்.
காரை அருகே இருந்த பூங்காவின் மர நிழலில் நிறுத்தியவன்,
“ஹ்ம்ம்ம்... ஒரு பத்து நிமிஷம் நான் பேசலை அதுக்கு இவ்வளவு கோபம் வருது உனக்கு....” என்றான் அதே புனனகையுடன்.
அவனை நேராக பார்க்காமல் விரல்களில் பார்வையை வைத்து,
“நான் எப்போ உங்க கிட்ட பேசாமல் இருந்தேன்...?” என்றாள் அவள்.
“நான் ஒரு கேள்வியை கொஞ்ச நாளா கேட்குறேன், பதில் சொன்னீயா நீ?”
“ப்ச்...”
“பிரீத்ஸ்...”
அவனின் பேச்சை பாதியில் நிறுத்துவது போல, “சார் பூ வாங்குங்க சார்..” என்ற பூக்காரியின் குரல் ஒலித்தது.
அவளின் கூடையில் இருந்த பூவை கவனித்து விட்டு,
“இரண்டு முழம் மல்லிப்பூ தாங்க... “ என்றான் அவன்.
வேண்டுமா, என்று கேட்காமல் அவனே பூ வாங்கிய அந்த செயல் பிரீத்தாவின் மனதில் மெல்லிய தென்றலை வீச செய்தது.
திருமணமான புதிதில் அவளுக்கு மல்லிகை பிடிக்கும் என்று சொல்லி இருந்தாள். அன்று முதல் இன்றுவரை எப்போதுமே வேண்டுமா என்று கேட்டு நிற்காமல் அவளுக்கு அவனாகவே வாங்கி தருவான்...!