சிறுகதை - கணவனின் மறுபக்கம் - நிலாவதனி
ஆயிற்று..திருமணமாகி இன்றோடு ஏழு வருடங்கள் நிறைந்து விட்டது. மேகாவிற்கு எப்பொழுதும்போல் இன்றும் பெருமூச்சு தோன்றியது.
ஆகாஷ்...மேகாவின் கணவன்..தனியார் கம்பெனியில் வேலை..
இவர்களின் பெயர்ப் பொருத்தம் பார்த்து வியக்காதவர்களே இல்லை திருமணத்தின் போது...கல்லூரித் தோழிகள் எல்லாம் மேகாவைக் கலாய்த்து எடுத்து விட்டார்கள்..அதிலும் அவள் தோழி, சுகா படுத்தி எடுத்து விட்டாள்.
“ஆகாயமும் மேகமும்...அட அட அட..எப்படிடி இப்படி ஒரு பேரு உள்ள ஆளைப் புடிச்ச..அதுசரி..ரெண்டுக்கும் என்னடி வித்தியாசம்? ரெண்டுமே ஒன்னு தானே..”என்று யோசனை செய்ய, அடுத்தவள் சுதாவோ ,
“அம்மாடி என் மக்கு பிரெண்டே..ஆகாயம் னா, ஸ்கை மேகம்னா cloud.இது தெரியாதா” என,
“ம்க்கும்,.பெரிய இங்க்லிஷ்காரன் குட்டி இவ..எனக்கு விளக்கம் சொல்ல வந்திட்டா” என்று நொடித்தாள் சுகா.
இவர்கள் செய்யும் லூட்டியை புன்னகையோடு மேகா பார்த்திருக்க, “ஒய் மேகா.. என்ன லுக்கு..பதில் சொல்லு..உங்க ரெண்டு பேரைப் பத்தித் தானே பேசறோம்” என சுகா கூற, மேகாவோ ”ம்ம்..ரெண்டும் ஒண்ணு தான் ஆனா கிடையாது..ஒண்ணுக்குள்ள ஒண்ணு..பரந்து விரிஞ்சு இருக்கற ஆகாயத்தில பதிஞ்சு இருக்கிறது தான் மேகம்..அதாவது ஆகாஷ் மனசில் இருக்கற இந்த மேகா மாதிரி..வி மேட் பார் ஈச் அதர்” என்று சொல்ல ஓஹோ...என நண்பர்களின் கைதட்டல் விண்ணைப் பிளந்தது.
இப்படி கலாட்டாவும் அரட்டையுமாக நடந்தேறிய கல்யாணம் மேகாவினது.
மேகாவைப் பொறுத்தவரையில், அமைதியான, அதேசமயம் அழுத்தமானவள். திருமணத்தைக் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புக்களோடு இருந்தவள். தன் நண்பர்களிடம் எல்லாம் சொல்வாள்..” என்னைக் கட்டிக்கறவன் என்னைப் போற்றிப் பாதுகாக்கிறவனா இருக்கணும்..என்னைக் கொண்டாடனும்.. நான் அவனுக்காக என் காதலைச் சேமித்து வைத்திருக்கிற மாதிரி அவனும் எனக்காகவே காதல் செய்யணும்..இப்படி பல கனவுகள் இருக்கு” என சொல்ல, அவளின் தோழிகளோ,
“இங்க பாரு மேகா, எல்லோருக்குமே இருக்கிற கனவு தான் இது..ஆனா ரியல் லைப் எப்படி இருக்கும்னு யாருக்குமே தெரியாது. எல்லோருக்குமே அவங்க இறந்த காலத்தில ஏதாவது பப்பி லவ் இருக்கலாம்..அல்லது காதலை வெளிக்காட்டத் தெரியாதவங்களா கூட இருக்கலாம். அதெல்லாம் எதிர்பார்க்காம, இப்ப எப்படி இருக்காங்கன்னு தாண்டி பாக்கணும்..இல்லன்னு வை..நாம நினைச்ச மாதிரி வாழ்க்கை அமையலன்னு சோக கீதம் தான் வாசிக்கணும்” என்றாள் சுகா.
இந்த வாதத்தை மேகா அப்போதும் ஏற்றுக் கொள்ளவில்லை..இப்போதும் அப்படியே தான் இருந்தாள்.
இந்த நிலையில் தான் அவர்களின் திருமண நாள் வந்தது. திருமணமாகி, ஏழு வயதில் ஒரு பெண் குழந்தையோடு சந்தோஷமான குடும்பம் தான். குறை சொல்ல எதுவும் இல்லாவிட்டாலும், மேகா எதிர்பார்த்ததைப் போல ஆகாஷ் இல்லை..அதற்காக அவன் மோசம் என்றோ பாசம் இல்லாதவன் என்றோ கொள்ள முடியாது. அவளுக்கும் குழந்தைக்கும் பார்த்துப் பார்த்து செய்வான் தான்..ஆனால் காதல்..அதனை வெளிப்படுத்த அவனுக்குத் தெரியாது என்றே சொல்லலாம்.
வழக்கம் போல வேலைகளைப் பார்த்த மேகா, அன்றும் கணவனுக்கு விடுமுறை இல்லை என்ற காரணத்தால் கோபம் இழையோட தான் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். இதில் அவள் அருமை மகள் வேறு பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தாள். கொஞ்சமில்லை ரொம்பவே அடம் பிடிக்கும் ரகம்..தன்னைப் பாராட்ட மட்டுமே வேண்டும்..கலந்து கொள்ளும் போட்டிகளில் ஜெயிக்க மட்டுமே வேண்டும் என்று நினைக்கும் மனோபாவம் அவளுக்கு.. பெயர் ஸ்வீட்டி.
“அம்மா இந்தப் படம் நல்லாவே வரலைம்மா..ஏம்மா எனக்கு மட்டும் வரலை” என்று அழ ஆரம்பிக்க,
“இங்க பாரு ஸ்வீட்டி...சும்மா நைய் நை னு அழுத கொன்னுடுவேன்..இருக்கற இதுல இவ வேறே..போ போயி வேறே படம் வரை அல்லது டிவி பாரு”
மேலும் கொஞ்சம் அழுது அடம்பிடிக்க நினைத்தவள் மனதை மாற்றிக்கொண்டு, “ஏம்மா இவ்ளோ கோபமா இருக்கீங்க..” என மெல்லத் தாயின் கையைச் சுரண்டினாள்.
மகளின் கேள்வி, மேகாவை நிதானப் படுத்தியது. “ ஒண்ணுமில்லை..இன்னிக்கும் உங்க அப்பாக்கு வேலைன்னு போயிட்டாங்க..அதான் அம்மா கொஞ்சம் அப்செட்..நீ போய் வேறே படம் வரஞ்சு பாருடா..அம்மா கொஞ்சம் படுக்கறேன்” எனவும் மகளும் அதிசயமாக சரி என்று சொல்லி அகன்று விட்டாள்.
கட்டிலில் படுத்த மேகாவை நினைவுகள் புரட்டத் தொடங்கின.
திருமணத்திற்கு முன் அவளது கனவு, கணவன் தன்னைத் தாங்க வேண்டும்..தன் முகம் பார்த்து மனநிலை அறிய வேண்டும்..எப்பொழுதும் கதைகளில் வருவது போல கொஞ்ச வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பு.. அத்தோடு எப்போதுமே உற்சாக மனநிலையில் இருக்கவேண்டும்..வேலை விஷயத்தில் இருக்கும் பிரச்சனைகளை வீட்டில் காண்பிக்கக் கூடாது என்பது போன்ற எதிர்பார்ப்புகள் இருந்தன.