(Reading time: 10 - 20 minutes)

சிறுகதை - தெளிவு - K.சௌந்தர்

Cooking

"வாம்மா கல்பனா, உனக்காக எவ்வளோ நேரமா காத்திருக்கேன் தெரியுமா? கொஞ்சம் முன்னாடியே வரக்கூடாதா? " அக்கறையாக வரவேற்றாள் நீரஜா மாமி.  

"என்ன மாமி செய்யறது? வீட்டு வேலைகளை முடிக்கவே பத்து மணியாயிடுது.  அதுக்குமேலதானே இந்தப்பக்கம் வர முடியுது, என்ன செய்யறது?” என்று பெருமூச்சுடன் கூறினாள் கல்பனா.

நீரஜா வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி கல்பனாவின் வீடு இருந்தது. நீராஜாவின் மகனும் மருமகளும் வேலைக்குச் சென்று விடுவதால் பகலில் பேச்சுத் துணைக்கு கல்பனாவை அவள் எதிர்பார்ப்பது வழக்கம்.

கல்பனாவுக்குத் திருமணமாகி  ஆறு மாதங்கள் ஆகின்றன. போன மாதம் தான் இந்தத் தெருவுக்குக் குடி வந்தனர். அவள் கணவனுக்கு சாஃப்ட்வேர் கம்பனியில் வேலை. எனவே அவன் வருவதற்கு ராத்திரி எட்டு மணி ஆகிவிடும்.

அதுவரை அவளுக்கும் நேரம் போகவேண்டுமே, பக்கத்‌து வீட்டு நீரஜா மாமி அவளுக்கு நல்ல கம்பானியன். நல்லது கெட்டது எதுவானாலும் நீரஜா மாமியின் கருத்தை கேட்ட பிறகே முடிவெடுப்பாள் கல்பனா.

"இப்பிடி உக்காரு கல்பனா . அப்புறம் நேத்து நா சொன்ன விஷயம் என்னாச்சு. உன் புருஷன் கிட்ட பேசனியா...?"  

" இல்லை மாமி  அதெல்லாம் அவரு கிட்ட கேக்க முடியாது. சமையலுக்கெல்லாமா ஆள் வைப்பாங்கன்னு அசால்டா சொல்லிடுவார்.,"

"அதுக்காக நீ வீட்டுக் குடுத்துப் போகணுமா? இதுவே அவன் ஒரு பணக்கார பெண்ணை கட்டியிருந்தா ஆள் வச்சிருக்க மாட்டானா? என்ன இருந்தாலும் நீ ஏழைப் பொண்ணுதானே , அதான் அவனுக்கு இளப்பமா போச்சு.  நீ இப்பிடியே அடுப்படியில் காஞ்சா உன் பொன்னிறமான சருமம் கறுப்படிச்சுடாதா? சமையலுக்கு  ஒரு ஆள் வச்சாத்தான் என்ன? இப்போ எல்லாரு வீட்டுலயும்தான் ஆள் வச்சிருக்காங்க. எங்க வீட்டையே எடுத்துக்க, என் மருமகளுக்கு வீட்டு வேலைக்கு ஒரு ஆளு , சமையலுக்கு ஒரு ஆளுன்னு வச்சு கொடுத்திருக்கான் என் மகன். ஹீம் எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும். ரதியாட்டம் இருக்கிற உனக்கு  சமையல் கட்டுல  வெந்து சாகனும்னு விதி இருக்கே? என்ன செய்யறது” என்று ஏகமாய் பரிதாபப்பட்டாள் நீரஜா.

ல்பனா சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். அவள் வீட்டில் சமையல் வேலையை அம்மாதான் செய்வார்.அதேபோல தானும் சமையல் குடும்ப நிர்வாகம் என்று இருக்கத்தான் கல்பனா இத்தனை நாள் விரும்பினாள். நீரஜாவை பார்த்த பிறகுதான் தானும் பணக்கார வீட்டுப் பெண்களைப்போல சமையலுக்கு ஆள் வைத்து நிர்வாகம் செய்ய ஆசைப்பட்டாள். நீரஜா பணக்கார குடும்பத்தை சேர்ந்தவள் என்பதோ அவள் மருமகள் சுமலதா வேலைக்குச் செல்பவள் என்பதோ அவள் கருத்தை எட்டவேஇல்லை.

"எப்பிடியும் இன்னிக்கு அவரை சம்மதிக்க வைக்காம விடமாட்டேன்  மாமி" என்றாள் கல்பனா நம்பிக்கையுடன்.

நீராஜாவுக்கு உள்ளூர கல்பனாவின் மேல் பொறாமை. நீரஜாவின் மகள் கல்யாணம் ஆன அடுத்த மாதமே கணவனுடன் பிரச்சனை ஆனதில்  பிறந்த வீடு வந்துவிட்டாள். நான்கு வருடமாகியும் திரும்பி செல்லவில்லை. கூடிய சீக்கிரமே அது நிரந்தர பிரிவாக ஆகிவிடும்போல் தோன்றியது. அந்த விரக்தியில் இருக்கும் நீரஜாவுக்கு கல்பனா கணவனுடன் ஒற்றுமையாக வாழுவது பிடிக்கவில்லை.. எப்படியாவது அந்த குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ண கங்கணம் கட்டிக் கொண்டாள். அதன் முதல் படிதான் இப்படி  சமையலுக்கு ஆள் வைக்கச் சொல்லி ஊதிவிட்டாள்.

வள் ஊதிவிட்டது நன்றாகவே பற்றி எரியத் தொடங்கி விட்டது.

சமையலுக்கு ஆள் வைக்கச் சொல்லி கணவன் சுனிலை நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள் கல்பனா.

சுனிலுக்கு ஆச்சரியமாக இருந்தது. இருப்பதே இரண்டு பேர்தான். இரண்டு பேருக்கு சமைப்பது ஒரு பெரிய வேலையா? வெறுமனே வெட்டி பந்தா காட்டுவதற்காக மனைவி சமையலுக்கு ஆள் கேட்பது அவனுக்கு புரிந்தது. எனவே அவன் ஆள் வைக்க சம்மதிக்கவே இல்லை.

"மாதம் நாலாயிரம்  சமையலுக்கு வெட்டியாய் அழுவதை  விட அந்த வேலையெல்லாம் நீயே செஞ்சுட்டு அந்த பணத்துல  உனக்கு ஒரு நல்ல சேலை எடுத்துக்கோ, நா ரொம்ப சந்தோஷப்படுவேன்" என்றான்.

"அப்போ என்னையும் ஒரு வேலைக்காரி மாதிரிதான் நீங்க நினைக்கறீங்க இல்லையா... இதுவே நான் ஒரு பணக்காரப் பெண்ணாக இருந்திருந்தா நீங்க இப்பிடி பேசுவீங்களா? இந்நேரம் ஏழெட்டு ஆட்கள் வச்சிருக்க மாட்டீங்களா?" பொரிந்தாள் கல்பனா.

இத்தனைநாள் தன்னை மிகவும் கொடுத்துவைத்தவனாக உணரச் செய்த அவள் இப்போது ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் ? யார் கண் பட்டதோ தெரியவில்லையே என்று நொந்தபடி “நீ பணக்காரப் பெண்ணா இருந்திருந்தா நா உன்னைக் கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன், புரிஞ்சுதா?” என்றான்.

அவன் சொன்ன எதுவும் அவள் காதுகளில்  ஏறவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.