முதல் சந்திப்பினில் காதல் என்பர் அது முற்றிலும் கேள்விக்குறியான கோட்பாடு தான்!!என்ன செய்வது,அது தான் வாழ்வியல் முழுதும் காதல் என்னும் வார்த்தைக்கு அர்த்தம் உரைக்கிறது.அன்றாடம் எண்ணற்றோரை சந்திக்கின்றன விழிகள்!!!காண்போர் அவரிடமும் அவை தன்னை தொலைப்பதில்லை.சரியாக கூற வேண்டுமெனில் அவற்றின் பணி காட்சிகளை காட்சிப்படுத்துவது அவ்வளவே!!பின்,எது காதலை தீர்மானிக்கும் கருவியாக உள்ளது??உணர்வுகள்!!!ஆம்...உணர்வுகள் தான்!!உணர்ச்சிகளுக்கும்,உணர்வுகளுக்குமே எண்ணற்ற வித்தியாசங்கள் இருக்கும் பட்சத்தில்,காதலை நிர்ணயிப்பது உணர்வுகளே அன்றி உணர்ச்சிகள் அல்ல!!!
"அவன் அன்புக்கு ஏங்குறவனா இருக்கணும்பா!"-அன்று தன் தந்தையிடத்தில் உரைத்தது அவள் விழிகள் முன் வந்து செல்ல,மனதினில் சட்டென ஒரு பூரிப்பு தொற்றியது.சட்டென புன்னகைத்துக் கொண்டவள்,தன் விரல்களின் நகத்தினை இதழ்களுக்கு நடுவே வைத்து பூரித்தாள்.சிறு வயது முதலே அவள் உயிரோடு உணர்வாய் கலந்த பொம்மை ஒன்று,அவள் எதிரே அமர்ந்து அவளை பரிதாபமாய் பார்த்தது.அதை தன் கரத்தில் ஏந்தியவள்,அதனோடு உரையாட தொடங்கினாள்.
"ஷாஷா!இப்போ எல்லாம் நான் செய்யுறது புதுசா இருக்குல்ல!எனக்கே அப்படி தான் இருக்கு!இது எல்லாத்துக்கும் அவர் தான் காரணம்!நான் என்ன பண்ணட்டும்?"-மொத்த பழியையும் அவன் மீது சுமத்தினாள் சிவன்யா.
"நாங்க ஏன் சந்திக்கணும்?இதுவரைக்கும் நான் உணராத உணர்வா இருக்கு!அவர் அம்மா இறந்துட்டாங்கன்னு சொல்லும் போது,அவர் வருத்தம் எனக்கு ஏன் வலிக்கணும்?ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார் இல்லை?ஒருவேளை,நான் தான் தேவையில்லாம கனவு காண்கிறேனா?அவர் பெரிய கலெக்டர் ஆச்சே!அவர் மனசுல என்னைப் பற்றி என்ன யோசித்திருப்பார்?"-வாயில்லா ஜீவனை வம்பிழுத்தாள் அவள்.
"தகுதிக்கு மீறி ஆசைப்படுறேனா?"-அவள் குரலில் கலக்கத்துடன்,அச்சமும் கலந்திருந்தது.
ஆனால் உண்மையில் அவன் மன எண்ணம் தான் என்ன???
உருக்கமான வேண்டுதல் வைக்க தயாகினான் போலும்!!தாயின் படத்தின் முன்னிலையில் கரம் குவித்து மண்டியிட்டிருந்தான் அசோக்.
விழிகளிலோ அவ்வளவு அச்சம்!!உயிர் பதைக்கும் அச்சம்!!
"மா!இதுவரைக்கும் உங்கக்கிட்ட சொல்லாம உங்க பையன் எந்த முடிவையும் எடுத்ததில்லை.நீங்க எப்போதும் என் கூடவே இருக்கீங்கன்னு தான் நான் நம்புறேன்மா!இன்னிக்கு உங்கக்கிட்ட முக்கியமான விஷயம் சொல்ல ஆசைப்படுறேன்மா!வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம்..!"-தயங்கினான் அவன்.
"எனக்கு சிவன்யாவை பிடித்திருக்கு!அவங்க வாழ்க்கை முழுக்க கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுதும்மா!சந்தோஷமா இருப்பேன்னு தோணுது.நான் செய்யுறது சரியா?தப்பா??ஒருவேளை உங்களுக்கு இதில்,விருப்பமில்லைன்னா நான் எதற்கும் ஆசைப்படவில்லை."-கண்களில் துளி கண்ணீர் திரண்டது.தாயிடமிருந்து பதில் இல்லை.
"ஆனா,இது என் தகுதிக்கு மீறின ஆசையான்னு யோசிக்கவும் தோணுதும்மா!"-திரண்ட கண்ணீர் உடைந்து கீழே விழுந்தது.ஒரே வாக்கியம் தான்!ஆனால்,இரு வேறுப்பட்ட எண்ணங்கள்!!என்ன அவை,விளக்கம் விரைவிலே புலப்படும்!!!
"என்னங்க!சொல்லுங்க!"-உதயகுமாரின் செவியினில் கிசுகிசுத்தார் மீனாட்சி.
"இரும்மா!"-குரலில் மெல்லிய அச்சம் கலந்திருக்க,ஜன்னலோரமாய் அமர்ந்து சாரல் மழையை இரசித்து,நினைவுகளை எவரிடமோ தொலைத்திருந்த சிவன்யாவை நோக்கி நடக்கலானார்.
"பாப்பா!"
"பா?"
"அது...உன்கிட்ட பேசணும்மா!"
"என்னப்பா?"
"வர சனிக்கிழமை கொஞ்சம் நீலகிரி காப்பி ஷாப் வரைக்கும் போயிட்டு வரீயா பாப்பா?"
"ஏன்பா?அம்மா காப்பி போர் அடித்துவிட்டதா?"
"ஐயோ...அது இல்லம்மா!அது வந்து..."
"என்ன?"
"அப்பா மேலே வருத்தப்பட மாட்டியே!"
"அட!சொல்லுங்கப்பா!"-அவர் தயங்கியப்படி ஒரு புகைப்படத்தை காட்டினார்.
"ஐ...நல்லா இருக்கானே!யாருப்பா?"
"உனக்கு பிடித்திருக்கா?"-விழிகளில் ஆர்வம் கொப்பளித்தது அவருக்கு!
"ஏன் நல்லா தான் இருக்கான்!"
"இவன் தான்மா!உனக்கு நாங்க பார்த்திருக்க பையன்!"-படபடவென கூறியவரை இமைக்க மறந்து பார்த்தாள் அக்கன்னிகை.
"பெயர் சூர்யா!"
"நிறுத்துங்கப்பா!"-இடையிலே தடை செய்தாள் அவள்.
"நான் கல்யாணம் வேணும்னு கேட்டேனா?"-அக்கேள்வியை அவள் முன் வைத்ததும்,சட்டென கொதித்துவிட்டார் மீனாட்சி.