தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 22 - தேவி
செழியன் செந்திலை சமாளித்து கிளம்பி விட்டாலும், செந்தில் அதை நம்பாமல் தனக்குள் பேசிக் கொண்டான்.
“டேய்.. நானே அல்வா பாக்டரி .. ரெண்டு அப்பரன்டிஸ்களும் சேர்ந்து எனக்கே அல்வா கொடுக்கறீங்கள..... கூடிய சீக்கிரம் கண்டு பிடிக்கிறேன் “ என்றபடி செந்திலும் கிளம்பினான்..
காலேஜில் ஒரே கொண்டாட்டமாக இருந்தது என்றால் செழியனுக்கு வீட்டில் திண்டாட்டமாக இருந்தது.
அன்று மாலை வீட்டிற்குள் நுழையும் போதே செழியனின் அப்பா சிவஞானம் ஹாலில் அமர்ந்து இருந்தார். அவரை பார்த்தவுடன் “ஐயோ.. இந்நேரத்துக்கு வீட்டில் இருக்கிறாரே.. என்ன வம்பு வர போகுதோ..” என்று எண்ணிக் கொண்டான்.
அவன் தன் அறைக்கு போய் ரெப்ரெஷ் செய்து வருவதற்குள் தன் அப்பா கிளம்பிவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.
ஆனால் கடவுள் பிஸியாக இருந்ததால் , அவனுடைய கோரிக்கையை பார்க்காமலே இன்பாக்சில் இருந்து ட்ராஷ் போல்டேரில் போட்டு விட்டார்.
செழியன் ரெப்ரெஷ் செய்து ஹாலிற்கு வரவும், அவன் அம்மா காபியோடு முறுக்கு எடுத்து வந்தார். அவனுக்கு விருப்பமான சிற்றுண்டி அது.
அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்து இருந்தவர்.
“காலேஜ்லே லீவுக்கு சொல்லிட்டியா தம்பி..?” என்று வினவினார்.
அவன் அதை கவனிக்கதவன் போல் “என்னப்பா.. இந்த நேரத்துலே கடையிலே உட்காரமா இங்கே இருக்கீங்க..? மேலுக்கு நல்லா தானே இருக்கு ?” என்று அவரை பற்றி விசாரித்தான்.
“நான் சுவமாத்தேன் இருக்கேன்.. நீ பேச்சை மாத்தாதேடே..”
“என்ன மாத்தினேன்..?”
“லீவ் பத்தி சொல்லிடியான்னு கேட்டேன் ?”
“நான் ஏற்கனவே சொன்னேனே.. இந்த வருஷம் நினைச்ச மாதிரி லீவ் கிடைக்காதுன்னு.. ஏற்கனவே என்னோட படிப்புக்காக நிறைய லீவ் போட வேண்டி இருக்கு.. இப்படி எல்லாம் போட்டா பசங்களுக்கு எப்போ பாடம் நடத்தி முடிக்கிறது..?”
“நீ ஒவ்வொரு வாட்டியும் வாரவந்தானே.. இப்போ வாரதிலே என்ன பிரச்சினை உனக்கு..?”
மனசுக்குள் “இப்போ தானே கல்யாணம் பேச போறதா சொல்றீங்க.. “ என்று எண்ணிக் கொண்டவன்,
“வேலை இருக்குப்பா”
“எப்படியும் பொங்கல் அன்னிலேர்ந்து மூணு நாள் லீவ் தானே..? அப்போ என்ன பண்ண போற?”
“இந்த வருஷம் காலேஜ்லே நூறாவது வருஷம் கொண்டாட போறாங்கபா.. ஏற்பாடு எல்லாம் என் பொறுப்புலே தான் விட்டுருக்காங்க.. வேலை நிறைய இருக்கு. “
“ஒரு வாரம் வரைக்கும் ஊருக்கு வந்துட்டு வார பையன் நீ.. இந்த வாட்டி ரெண்டு நாளாவது வாலே.. “ என கேட்க,
இதற்கு மேல் அவரிடம் வாதாட முடியாமல்,
“சரிப்பா... ரெண்டு இல்ல மூணு நாள் இருக்க மாதிரி வரேன்.. “ என்று இறங்கி வந்தான் செழியன்.
“அப்பா.. உங்களுக்கும் , அம்மைக்கும் டிக்கெட் போட்டுடீங்களா?”
“இல்லை பா.. “
“சரி .. உங்களுக்கு பன்னிரெண்டாம் தேதி பொதிகை எக்ஸ்பிரஸ்க்கு தட்கலில் டிக்கெட் போட்டு விடறேன்..”
“உனக்கு .. எப்போ போடற...”
“போகி அன்னிக்கு நைட் ட்ரைனிற்கு பாக்கறேன்.. அப்படி இல்லைனால்.. அன்னைக்கு நைட் பஸ் பிடிச்சு வந்து சேருதேன்..”
சிவஞானம் “சரி .. “ என்றார்.
“நீங்க கடைக்கு இப்போ போறீங்களா?”
“போகணும்” என
“வந்தது வந்திக.. ஏன் திருப்பி அலையறீங்க.. நான் போய் கடைலே உட்காந்துருக்கேன்.. நீங்க நாளைக்கு போய்க்கோங்க..”
“ஏம்பா.. நீயே இப்போ தான் களைச்சு வந்துருக்க.. ஏன் அலட்டிகிடுத... எப்போவும் போலே நானே போறேன்..”
“இருங்க.. இருங்க.. நான் போய் வரவு செலவு எல்லாம் பார்த்துட்டு .. அப்படியே கடை வேலையும் பார்துகிடுதேன்.. நீங்க இன்னிக்கு ஓய்வு எடுங்க.. இல்லியா.. அம்மாவை கூட்டிகிட்டு எங்கியாவது வெளிலே போய் வாங்க.. அவங்களும் வீட்டுக்குள்ளே தானே அடைஞ்சு கிடக்காங்க..”
இது நேரம் வரை அவர்கள் பேச்சில் நடுவில் போகாமல் இருந்த செழியனின் அம்மா
“ஏங்க.. அவம் சொல்லுறதும் சரிதான்... நீங்களும் நானும் கோயிலுக்கு போயிட்டு வரலாம்..” என
இருவரும் சொல்லவும் அவரும் சரி என்றார்..
செழியன் கிளம்பி கடைக்கு போக, இவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்றனர்.