என்னத்தான் ராகவனின் காதலை உணர்ந்திருந்தாலும்,என்னத்தான் அதை ஏற்றிருந்தாலும், என்னத்தான் அவன் மார்பிலேயே தஞ்சம் அடைந்திருந்தாலும், பரஸ்பர அறிமுகம் பேச்சு என எதுவுமே இருவரிடையில் நிகழிவில்லை. இன்னும் எதையும் பேசிக்கொள்ளவில்லை.. காதலை வார்த்தையால் சொல்லிக்கொள்ளவில்லை..
இப்போது பெண்மை எழுப்பும் நாணத்தை ஏற்று மௌனமாக இருக்க வேண்டுமா? அல்லது அவனுக்குள் இருக்கும் தனக்கான காதலை கண்டுவிட்ட களிப்பினை வெளிப்படுத்த வேண்டுமா? புரியவில்லை அவளுக்கு. அவன் அருகில் வரவர படபடப்பாக மட்டுமே உணர்ந்தாள் அர்ப்பணா.
அதை பார்வையாலேயே உணர்ந்து கொண்டான் ராகவேந்திரன். இதில் அழகியல் என்னவெனில் அவள் கொண்ட படபடப்பிற்கு துளியளவும்பஞ்சமின்றி காணப்பட்டான் ராகவேந்திரன். அவளின் இருப்பு, அவளின் வதனம், அவளின் அருகாமை அனைத்துமெ அவனையும் ஆட்டி படைத்தது.
தலையை அழுந்த கோதிவிட்டு சிரித்தான் ராகவேந்திரன். அவனுக்கு இந்தளவு மென்மை இருக்கிறதா? வெட்கம் இருக்கிறதா? தயக்கம் இருக்கிறதா? அவன் ஒரு ஏ சீ பி. வேலையை பொறுத்தமட்டிலும் அவனது கறார் நடவடிக்கைகளும் பேச்சும் உயரதிகாரிகளையே வாய்ப்பொத்த வைக்கும். குற்றம் புரிந்தவர்களை நடுங்கவும் வைக்கும். அப்படிப்பட்டவன், அவளின் மைவிழிகளுக்குள் சிறைப்பட்டு விழுந்து கிடந்தான்.
வாசற்கதவை திறந்துவிட்டு அப்படியே நின்றவளின் கரங்களை பற்றிக் கொண்டான் அவன்.
“அபி..நெறயா பேசணும் அபி..இன்னைக்கே பேசனும்.. இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது”என்றான் ராகவேந்திரன்.அவனது பாவத்தைக் கண்டு புன்னகைத்திருந்தாள் அர்ப்பணா.
“ஆஹான்..டைம் இல்லைகே போலிஸ்கார்ர்ர்ர்..” என்றாள் குறும்பாக. அவளை இமைக்கும் நொடியில் அலேக்காய் தூக்கிகொண்டு சோபாவில் கடத்தினான் ராகவேந்திரன்.
“நீயே இனி எனக்குத்தான்..அப்படி இருக்கும்போது உன் நேரமும் எனக்குதான் ..” என்று மிரட்டியவன் ,அப்போதுதான் சிவந்து போயிருந்த அவளின் வதனத்தை கவனித்தான்.
“ஆஹா..கோபமா இருக்காளா?இல்ல வெட்கப்படுறாளான்னு தெரியலையே!” என்று மைண்ட் வாய்சில் பேசியவன்,
“ஓகே.. நான் பேசனும். ஃப்ர்ஸ்ட்டு எல்லாத்தையும் கேளு” என்றான். முடியாது என்று சொன்னாலும் கேட்கும் நிலையில் அவன் இல்லை என்று அறிந்தவளின் முகத்தில் புன்னகை ஆயிரம் பூக்களென மலர்ந்தது.
“அபி..நான் நிச்சயமா உன் அழகை பார்த்து காதலிக்கல..”
“..”
“அதுக்காக நீ அழகில்லைனு அர்த்தம் இல்லை. உன்கிட்ட இருந்து என்னை முதல்ல பாதிச்ச விஷயம், உன்னுடைய வீரம்,நிமிர்வுதான். உன்னை டீவியில பார்க்கும்போது அழகான பொண்ணுனு நினைச்சேன்.. தியேட்டரில் பார்க்கும்போது திறமையான நடிகைனு நினைச்சேன்.. ஆனா நீ எவ்வளவு தைரியமான பொண்ணுனு உன்னை நேரில் பார்த்தப்போதுதான் தெரிஞ்சுக்கிட்டேன்..”
“..”
“இதே வீட்டு வாசலில், கேமராக்கள் மத்தியில் வெச்சு அந்த வினய் பண்ணவிஷயத்துக்காக எல்லாரும் உன்னை கேள்வி கேட்கும்போது நானும் இங்கத்தான் இருந்தேன். ஒரு கண்ணுல வலி, ஒரு கண்ணுல தைரியம்னு..நீ பேசின விதம்,உடனே எடுத்த முடிவுன்னு..எது என்னை முதல்ல பாதிச்சதுன்னு சொல்ல தோணல.”
“..”
“ஒரு போலிசாக அந்த பிரச்சனையில் நான் தலையிடனும்தான்.. ஆனால் அதையும் தாண்டி, உனக்காக நான் கேள்வி கேட்கனும்..உன்னை நான் பாதுகாக்கனும்னு உள்மனசு சொன்னிச்சு.. அந்த உணர்வுக்கு அப்போ பேரு தெரியல.. தெரிஞ்ச அடுத்த நிமிஷம் உன்னை தேடி வந்தேன்..”
“..”
“யாருக்கும் தெரியாம உன்னை அடிக்கடி பின்தொடர்ந்தேன்.. ஒரு பட்த்துல நீ சாகுற மாதிரி நடிக்கவும், அத பாத்து ஒரு நிமிஷம் செத்தே போயிட்ட மாதிரி இருந்துச்சு.. அன்னைக்கு முடிவெடுத்தேன்..நீயும் நானும் இனி ஒன்னுனு..”
“..”
“ஏதோ ஒன்னு என்னை உன்கிட்ட இருந்து தள்ளி நிக்க வைச்சது..நீ சாதிக்கனும்.. நல்லபடங்கள் நடிக்கனும்..நான் உன் லைஃப்ல வரும்போது எந்தவொரு சலசலப்பும் விமர்சனமும் சேர கூடாதுனு நினைச்சேன்.. ஆனாலும். அதுதான் நடந்தது.”
“..”
“இதுதான் என் காதல் இப்படித்தான் உன்னை காதலிச்சேன்னு சொல்லி முடிக்கிற விஷயம் இல்ல அபி இது.. தீராத காதல்.. வாழ்ந்துதான் காட்டனும்.. வாழ்வியா என்னோடு?” வெகு இயல்பான நடையில், உயிரை தேக்கி வைத்த குரலில் மனம் கவர்ந்தவன் கேட்கயில் முடியாது என சொல்லிடவும் முடியுமா?