ஜெஸிகா இன்னமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். மேகலாவைப் பார்த்து பழகிவிட்ட அமேலியாவிற்கு ஜெஸிகாவின் நடவடிக்கைகள் அருவருப்பை தந்தன. ஜெஸிகாவிடம் பெண்மைக்கான நாணமும் இல்லை பயமும் இல்லை. மேகலா, பொழுது விடியும் முன் தன் வேலைகளை செய்யத் தொடங்கி விடுவாள். வீட்டை சுத்தமாக பராமரிப்பாள். வீட்டில் உள்ளவர்களின் தேவைகளை அவளே பூர்த்தி செய்வாள். ஆனால், ஜெஸிகாவோ அதற்கு நேர்மாறாக வாழ்வது அமேலியாவிற்கு வியப்பைத் தந்தது.
சிறிய வயதில் தன் சிநேகிதிக்கு நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தாள் அமேலியா. எப்பொழுதும் கோபப்பட்டு, பெற்றோரை எதிர்த்து பேசும் தன் சிநேகிதிக்கு அவளது தந்தை கடுமையாக பிரம்படி கொடுப்பதை பார்த்திருக்கிறாள். ஜெஸிகாவின் பெற்றோர்கள் அப்படி செய்யவில்லை போலும் என எண்ணினாள் அமேலியா.
அமேலியாவிற்கு பசி அதிகமாகியது. சமயலறைக்கு சென்று ஏதேனும் உணவு தயாரித்து சாப்பிடலாம் என்றாலும் ஜெஸிகா திட்டுவாளோ என்ற பயமும் இருந்தது. என்ன செய்யலாம் என்று சிறிது நேரம் யோசித்தவள், ஆவது ஆகட்டும் என இருப்பதைக் கொண்டு உணவை தயாரிக்க முடிவு செய்தாள். உணவை தயாரித்துக் கொண்டே ஜெஸிகாவிற்கு காபி தயாரித்தாள்.
படுக்கையில் இருந்து சோம்பல் முறித்தபடி ஜெஸிகா எழும்பினாள். தயார் செய்து வைத்திருந்த காபியை ஜெஸிகாவிடம் நீட்டினாள் அமேலியா. அமேலியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஜெஸிகா காபியை விழுங்கினாள்.
"தேங்க்ஸ். ரொம்ப நாள் ஆச்சு, இந்த மாதிரி காபி குடிச்சு. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி என் பிரண்ட் ஒருத்தி கொஞ்ச நாள் என் கூட தங்கியிருந்தாள். அவ தான் இப்படியெல்லாம் காபி போட்டு கொடுப்பாள்"
அவள் கூறியது எதுவும் காதில் வாங்காமல் தன் வேலையை பார்க்க சென்று விட்டாள் அமேலியா. சமையலறையில் அமேலியா என்ன செய்கிறாள் என்று ஒரு பார்வை பார்த்தாள் ஜெஸிகா. "உனக்கு சமைக்க கூட தெரியுமா?" என்று வியந்தாள். பின்னர் குளியலறைக்கு சென்று குளித்து முடித்து விட்டு அலுவலகம் செல்ல ஆயத்தமானாள்.
அதற்குள் உணவை எல்லாம் தயாரித்து முடித்தாள் அமேலியா. அதை டைனிங் டேபிளில் எடுத்து வைத்தாள். அலுவலகம் செல்லும் பரபரப்பில் உணவை ருசித்த ஜெஸிகா அமேலியாவிடம் எக்காரணத்தை கொண்டும் கதவைத் திறந்து பார்க்கக்கூடாது என்று கட்டளையிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டாள்.
ஜெஸிகா சென்றவுடன் தனிமையில் தத்தளித்த அமேலியா, ஜன்னல் கதவைத் திறந்து வேடிக்கை பார்த்தாள். திடீரென அவள் முகம் கலவரமானது. ஓடி வந்து வீட்டின் கதவைத் திறக்க முற்பட்டாள். அமேலியாவின் மீது நம்பிக்கையில்லாத ஜெஸிகா.கதவை வெளிப்பக்கம் பூட்டியிருந்தாள். அமேலியா கதவு உடையும் அளவிற்கு தட்டினாள்.
தொடரும்...
{kunena_discuss:983}