தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 29 - தேவி
மலரும் செழியனும் காலேஜ் வேலையில் எத்தனை பிஸியாக இருந்தார்களோ , அதே அளவு தங்கள் பிரச்சினை பற்றியும் யோசித்துக் கொண்டு இருந்தார்கள். இந்த ஆனுவல் டேவிற்கு தங்கள் குடும்பத்தை அழைத்து வந்து, ஒருவருக்கு ஒருவர் அறிமுகபடுத்தி வைத்தால் பிறகு தங்கள் நேசத்தை வீட்டினருக்கு எடுத்து சொல்லும்போது கூடுதல் பலன் கிடைக்குமோ என்ற எண்ணம் தோன்றி இருந்தது. அதனால் இந்த விழாவை மிகவும் ஆவலாக எதிர்பார்த்தார்கள்.
ஏற்கனவே முடிவு செய்தது போல் முதலில் காலேஜ் போட்டிகளை எல்லாம் நடத்தி முடித்தார்கள்.
ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டும் சிறப்பாக கலந்து கொண்டார்கள். எல்லா டிபார்ட்மென்ட்டும் பரிசுகளையும் அள்ளி சென்றார்கள். அதனால் மணாவர்கள் கொண்டாட்டத்திற்கு குறைவு இல்லாமல் இருந்தது.
விழா ஏற்பாடு செய்து இருந்த அந்த ஒரு வாரமும் காலேஜ்க்கு கட் அடிக்கும் மாணவர்கள் கூட ரெகுலாரக வந்து இருந்தனர்.
ஒருநாள் இவர்கள் வைத்த போட்டியில் முதல் மூன்று பரிசுகள் வாங்கிய எல்லா போட்டிகளும் திரும்ப நடைபெற்றது. இதற்கு அந்த ஊரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் அழைப்பு அனுப்ப பட்டதால், அன்று முழுதும் காலேஜ் கல கல என்று இருந்தது.
அதே போல் காலேஜில் பூட் கோர்ட்டும் போடப்பட்டது.. எப்போ வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளும் படியாக ஏற்பாடு செய்து இருந்தார்கள் நிர்வாகத்தினர்.
விழாவிற்கு இரண்டு நாள் முன்னதாக நடன போட்டி நடைபெற்றது. இதில் பரதநாட்டியம், வெஸ்டேர்ன், ஹிந்தி பாடல்கள் என்று போட்டு மாணவர்கள் அசத்தினர். பாடல் தேர்வு மட்டும் ஆசிரியர்கள் கொஞ்சம் கட்டுப்பாடு விதித்தனர்.. மற்றபடி மாணவர்கள் ராஜ்யம்தான்.
மாணவிகளில் சிலர் சோலோ டான்ஸ் பரதநாட்டியம், வெஸ்டேர்ன் ரெண்டுமே ஆடினார். அதற்கு முழு கோச்சிங்கும் மலர்விழி தான்.
யாரிடம் என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்ற லிஸ்ட் செழியனிடம் இருந்ததால் அதில் மலரின் ஈடுபாடு புரிந்தது. எல்லா ப்ரோக்ராமும் ஸ்டுடென்ட்ஸ் லெக்சரர் கலந்தே செய்வதால் மலர் டான்சும் ஆடினாள். வேறு சில ஆண் ப்ரொபசர்களும் ஆடினார்கள். அவர்கள் வெஸ்டேர்ன் ஆட, மலர் மாணவிகளோடு சேர்ந்து குழு நடனம் தான் ஆடினாள்.
இது செழியனுக்கு தெரியாது. அவன் டான்ஸ் கோ ஆர்டினேட் தான் மலர் செய்கிறாள் என்று எண்ணியிருந்தான். கடைசி டான்சிறகு முன் மலரின் நடனம்.
மலர் ஸ்டேஜில் வந்து நிற்கவும் செழியனுக்கு மிகுந்த ஆச்சரியம்.. மிகவும் ஆவலாக அவளின் நடனம் பார்த்தான்.
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
என்ற பாட்டிற்கு நடனம் ஆடினாள். அவள் சென்டரில் நின்று ஆட மற்றவர்கள் எல்லாம் மாணவிகள்.
அந்த பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் மலரின் அபிநயத்தை பார்த்த செழியன் கண் சிமிட்ட கூட இல்லை. டான்ஸ் முடிந்து அவர்கள் கீழே இறங்கும் வரை செழியன் அக்கம் பக்கம் திரும்ப கூட இல்லை.
அவர்கள் சென்ற பிறகு திரும்பியவன் செந்தில் அருகில் நிற்பதை பார்த்தான்..
செந்தில் அவனை பார்த்து
“மச்சான்.. வாய்க்குள்ளே .. ரெண்டு கொசு, மூணு ஈ , நாலு வண்டு தான் போச்சு.. மத்தபடி ஒன்னும் பிரச்சினை இல்லை.. “
“என்னடா உளர்றே..?”
“ஒன்னும் இல்லை மச்சான்.. .காலேஜ்க்கு பல்லவன் ட்ரான்ஸ்போர்ட்லேர்ந்து நாலு போட் சர்வீஸ் ஏற்பாடு செஞ்சுருக்காங்க..”
“ஏண்டா... ஒழுங்கா புரியற மாதிரி பேச மாட்டியா ?”
“ஒஹ்.. ப்ரொபசர் சார்க்கு புரியலையா? நீ இப்போ விட்ட ஜொள்ளுலே காலேஜ்லே செம்பரபாக்கம் ஏரிய திறந்து விட்டதா நினைச்சு மீட்பு குழுவிற்கு எல்லாம் தகவல் போயிருக்கு தெரியுமா?” எனவும்
அடப்பாவமே.. இவன்கிட்ட மாட்டிகிட்டோமே.. சரி சமாளிப்போம் என்று எண்ணிய செழியன்
“டேய்.. தப்பா பேசாதே.. ஸ்டுடென்ட்ஸ் கிட்டே அந்த மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்னு உனக்கு தெரியாதா..?”
“அட.. யாரு சொன்னா.. ஸ்டுடென்ட்ஸ் கிட்டே ஜொள்ளு விட்டேன்னு.. “
“அப்புறம்.. ஏன் இப்போ என்னை ஓட்டிகிட்டு இருக்க?”
“கண்டுபிடிச்சேன்.. கண்டுபிடிச்சேன்.. காதல் நோயை கண்டுபிடிச்சேன்..” என்று பாடவும் , செழியன் முகம் மாட்டிக் கொண்டோமே என்ற வெட்கமும், அசடும் கலந்து பார்ப்பதற்கு அழகாக இருந்தது..
“அட.. இங்கே பாருடா.. மச்சான் வெட்கபடுறார்..” என
“ச்சே.. போடா.. இங்கே இதை பேச வேண்டாம்.. யார் காதிலாவது விழுந்தால் நன்றாக இருக்காது..” என
“சரி.. பிழைச்சு போ.. இந்த காலேஜ் பங்க்ஷன் முடிஞ்சதும் உன்கிட்ட விசாரணை கமிஷன் வச்சிக்கிறேன்.. இப்போ வாட்டர் பால்ஸ க்ளோஸ் பண்ணிட்டு ஒழுங்கா வேலைய பாரு..”