(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 23 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

புதன் காலை தன் பண்ணை வீட்டில் மிக டென்ஷனாக நடையிட்டுக் கொண்டிருந்தான் நரேஷ்... அவனைப் பற்றிய புகாரை காவல்துறையோ, இல்லை ராணியோ வெளியில் சொல்லாததால் தன் மனைவி மற்றும் குடும்பத்தினரிடமிருந்து இந்தப் பிரச்சனையை மறைத்துவிட்டான்.... நடிப்புத் துறையில் இருப்பவரை பற்றி சாதாரணமாக வரும் கிசுகிசுக்களை அவன் மனைவி பெரிது படுத்துவதில்லை... இன்று வரை அவன் செய்த அனைத்து தவறுகளில் இருந்தும் தப்பி வந்திருக்கிறான்.... அவன் மனைவியும் தன் கணவன் உத்தம சிகாமணி என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறாள்... அவளிற்கு தன் இருண்ட பக்கம் தெரிந்தால் தன் நிலை என்னவாகும் என்பதை நினைத்து அவனுக்கு உள்ளுக்குள் வேர்த்து ஒழுகியது....

தன் மாமனாருக்கு திரை உலகிலும், அரசியல் உலகிலும் இருக்கும் செல்வாக்கை நினைத்து இன்னும் அவன் பயம் அதிகரித்தது.... அவர் தன் மகள் மீது எந்த அளவிற்கு பாசம் வைத்திருக்கிறார் என்பதை மிக நன்றாக அறிந்தவன் அவன்... கல்யாணத்திற்கு முன்னால் அவர் நரேஷிடம் போட்ட ஒரே கண்டிஷன் தன் மகளுக்கு எந்த விதத்திலும் அவன் துரோகம் செய்யக்கூடாது என்பது...

இப்பொழுது இந்த ராணி விஷயம் வெறும் கிசுகிசு என்று ஒதுக்க முடியாத அளவில் உள்ளது... ராணி இந்த அளவிற்கு ரகசியம் காக்கிறாள் என்றால் அவளிடம் இருக்கும் ஆதாரம் ஒரு வேளை உண்மையாக இருக்குமோ.... ஆனால் சமீபத்தில் அவளை நாம் பார்க்கவே இல்லையே... அவளுடன் முன்னால் தான் இருந்த தருணங்களில் எப்பொழுதேனும் தன்னை வீடியோ எடுத்து வைத்திருப்பாளோ.... அவன் மண்டைக்குள் இந்த விஷயங்கள் மாறிமாறி ஓடி அவனை பைத்தியம் கொள்ள வைத்தது....

இன்று மதியம் கோர்ட்டிற்கு தான் சென்றால் அத்தனை விஷயங்களும் அம்பலமாகிவிடும்... பத்திரிகைகள் அனைத்தும் சிறு விஷயத்தை பெரிதாக்கி வெளியிட்டு விடுவார்கள்...

இத்தனை நாள் இதை எப்படி மறைக்கலாம் என்ற கேள்விகள் தன் மனைவியிடமிருந்து எழும்.... நல்லநேரமாக முதலில் ராணி விஷயமாக போலீஸ் தன்னிடம் விசாரிக்க வந்தபொழுது அவன் மனைவி அவள் பெற்றோரை பார்க்க சென்றதால் விஷயம் அவளுக்குத் தெரியவில்லை... இன்னும் லோகேஷிடமிருந்தும் எந்தத் தகவலும் வரவில்லையே என்று அவன் யோசித்துக்கொண்டிருந்த பொது சரியாக அவன் கைபேசி அழைத்தது.

“தலைவா எங்க இருக்க.....”

“லோகேஷு தெய்வம்யா நீ... அடுத்து என்ன பண்ணன்னு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன்.... கரெக்ட் டைம்க்கு போன் பண்ணிட்ட... அந்த ராணி விஷயம் என்னைய்யா ஆச்சு.... அவக்கிட்ட பேசி மேட்டரை முடிச்சுட்டியா...”

“இல்லை தலைவா.... அது முன்னாடி நீ சொன்ன இடத்துல இப்போ இல்லை... அந்த வீடு பூட்டி இருக்குது....”

“வீடு காலி பண்ணிட்டாளா.... போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து உனக்கு  அவளோட புது அட்ரஸ் வாங்கித் தர்றேன்யா... இப்போவே நீ உடனே அங்க போய் அவக்கிட்ட பேசப்பாரு.... நமக்கு இன்னைக்கு ரெண்டு மணி வரைக்கும்தான் டைம் இருக்குது...”

“ஏன் தலைவா எனக்கு இந்த யோசனை வராதா.... அந்த ராணி போலீஸ் ஸ்டேஷன்ல அவளோட பழைய அட்ரஸ்தான் கொடுத்திருக்கா.... அந்த வீட்டுக்கும் தினம் வர்றா.... ஆனா குறிப்பா இந்த நேரம் அப்படின்னு இல்லாம எப்போ வேணா வர்றா.... நானும் ரெண்டு நாளைக்கு அவ வீட்டுக்கிட்ட வெயிட் பண்ணி பார்த்தேன்... முதல் நாள் நான் இருக்கும்போது வரவே இல்லை... அடுத்த நாள் காலைல ஒரு ஒன்பது மணிபோல வந்துட்டு உடனே கிளம்பிட்டா... கூட வாட்டசாட்டமா ரெண்டு தடியனுங்க வேற.... சரி அவ பின்னாடியே போய் அவ இப்போ இருக்கற இடத்தை தெரிஞ்சுக்கலாம்ன்னு பார்த்தா எனக்கு எப்படியோ அன்னைக்கு டேக்கா கொடுத்துட்டா....”

“என்னைய்யா லோகேஷு இப்படி சொல்லிட்ட.... உன்னைத்தான் நான் மலைபோல நம்பி இருந்தேன்... கடைசில இப்படி கழுத்தை அறுத்துட்டியே... இன்னைக்கு நான் கோர்ட்க்கு போனா அவ்வளவுதான்யா என் பொண்டாட்டி. மாமனார், அவரோட குடும்பம் எல்லாருமா சேர்ந்து மொத்தமா என்னை கும்மி எடுத்துடுவாங்க.... அந்த வக்கீல் பொம்பளைய பார்த்தியா....”

“அந்தம்மா இந்த ராணிக்கு மேல இருக்குது தலைவா... ராணியையானும் ஒரு நாளாச்சும் பின் தொடர முடிஞ்சுது... ஆனா அந்த வக்கீலை பார்க்க கூட முடியலை... இத்தனைக்கும் ரெண்டு பேரை அந்த வக்கீலை மட்டுமே கண்காணிக்க வச்சேன்... அப்படியும் எங்களால அது எங்க போகுது, வருதுன்னு பார்க்க முடியலை... இங்க உன்னை கடைசியா பார்த்துட்டு போன அன்னைக்கு அந்த வக்கீலை ஒரு ஆளோட ஹோட்டல்ல வச்சு பார்த்தேன்.... அத்தோட சரி... இதுல எங்க இருந்து பேச...”

“அந்த ஆள் யாரு என்னன்னு தெரிஞ்சுதா...”

“இல்லை தலைவா... அவன் அவளுக்கு தெரிஞ்சவனா, இல்லை அவனும் ஏதானும் கேஸ் கொடுக்க வந்தவனான்னு தெரியலை... நம்ம பசங்க அந்த ஆளை அதுக்குப் பிறகு அவக்கூட பார்க்கலைன்னு சொன்னாங்க....”

“அந்த ராணிக்கூட யாரோ வந்தாங்கன்னு சொன்னியே அவங்களைப் பத்தி எதாச்சும் தெரிஞ்சுதா...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.