தொடர்கதை - என் நிலவு தேவதை – 10 - தேவிஸ்ரீ
கங்காதரனின் முன் சேகர் நின்றுகொண்டு இருந்தான்.. அவன் சொன்னதை கவனமாக கேட்டவன்..
“சரிங்க பாஸ்.. நீங்க சொன்னமாதிரியே செய்துடலாம்.. யாருக்கும் சந்தேகம் வராதபடி நீங்க சொன்ன வேலையை முடிச்சிடுறேன்.. கவலைப்பட வேண்டாம்..”
“எனக்கு தெரியும்.. நீ வேலையை சரியா முடிச்சிடுவ.. நாளைக்கே முடிச்சிடு..”
“சரி.. நான் வரேன்..”
“ம்ம்..”
கங்காதரன் நந்தினியின் புகைப்படத்தினை பார்த்தான்.. பழைய ஞாபகங்கள் கண் முன்னே நிழலாடின.. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.. ஆனால் மறுநிமிடம் கண்கள் கோபத்தில் சிவந்தன..
“அம்மு.. பார்சல் வந்துடுச்சா..”
“நான் இப்போது தான் வாட்ச்மேன்கிட்ட குடுத்துட்டு வந்தேன்..”
“பார்சல்னு சொன்ன..”
“ஆமா.. பார்சல்தான் பண்ணிருக்கேன்..”
“என்ன.. ஒன்றுமே புரியல போ.. நீ என்ன கிப்ட் தரப்போறனு இப்போ சொல்றயா.. இல்லையா?..”
“ஓகே.. ஓகே.. க்ளு தரட்டா.. லேசா லேசா படத்துல ஒரு கிப்ட் விவேக்கு வருமே.. அதான்..”
“என்ன..” என அதிர்ந்த மித்ரா, “வேண்டாம் அம்மு.. அண்ணாக்கு நாய்குட்டி எல்லாம் பிடிக்காது.. பர்த்டே அன்னைக்கு ஏன் அவரை கோபப்படுத்துற..” என கேட்க, அதைக்கேட்டு சிரித்த அமிர்தா,
“உன் அண்ணாவுக்கு நாய்குட்டிய கண்டா கோபம் வருமா!!!..? உண்மையா உன் அண்ணாவுக்கு பயம்தான வரனும்?.. ஏன் சொல்றேனா சின்ன வயசுல உன் அண்ணாவை ஒரு நாய் கடிச்சிடுச்சி, 36 ஊசிகூட போட்டாங்கனு நீதானே சொன்ன.. அதிலிருந்து உன் அண்ணாவுக்கு நாய்னா பிடிக்கிறது இல்லை.. அதாவது நாய்னா பயம்.. என்ன, சரிதானே..” என கிண்டலுடன் கேட்டாள்..
“அதெல்லாம் இல்லையே.. என் அண்ணாவுக்கு பயம்னா என்னானே தெரியாது..” என தன் அண்ணாவை விட்டுகொடுக்காமல் பதில்கூறிய மித்ராவை கண்டு புன்னகைத்தாள் அமிர்தா..
“என்ன பண்றது, எனக்கு நாய்க்குட்டினா ரொம்ப பிடிக்கும்னு உனக்கு தான் தெரியுமே.. உன் அண்ணாக்கு நாய்க்குட்டி பிடிக்காது என்பதற்காகெல்லாம் நான் என் கியூட்டியை விட்டு பிரியமுடியாதே.. சோ, உன் அண்ணாவை நாய்க்குட்டி வளர்க்குறதுக்கு இப்போது இருந்தே பழக்கனும், அதான் இந்த கிப்ட்..”
“க்யூட்டியா?..”
“ம்ம்.. நாய்க்குட்டிக்கு பேர் எப்படி இருக்கு?..”
“கடவுளே.. இது எங்கேபோய் முடியுமோ..”
“கவலையேபடாத.. உன் அண்ணாவை ஒருவழி பண்ணாம விடமாட்டேன்..” என்றவளைக்கண்டு மித்ரா அவள் தலையில் செல்லமாக கொட்டினாள்..
பின் மித்ரா அம்முவை கூட்டிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்..
அதே நேரம் விக்ரம் தன் குடும்பத்தினருடன் பேசிவிட்டு திரும்பியவன் ஒரு பெரிய கிப்ட்பாக்ஸை கண்டு யோசனையுடன் அதன் அருகே சென்று யார் அனுப்பியது என To அட்ரசை பார்க்க, அங்கே எதுவும் எழுதப்படாமல் இருப்பதை கண்டு கவரை பிரிக்க ஆரம்பித்தான்..
அதனுள்ளே நாய்க்குட்டியை கண்டவன் அதை முறைத்தான்.... பின் அதனின் கழுத்தில் கடிதத்தினை கண்டு அதை எடுத்து பிரித்து படிக்க ஆரம்பித்தான்.. ஆனால் அதற்குள் அங்கு வந்த அம்மு,
“ஹேய், என்ன பர்த்டே பாய் க்கு கிப்டடா.. அழகா இருக்கு நாய்க்குட்டி.. அதன்ன லெட்டர்.. யார் அனுப்பியது..?” என ஒன்றும் தெரியாதவள் போல் நடித்தவள், உடனே லெட்டரை பிடுங்கி படிக்க ஆரம்பித்தாள்..
ஹாய் மைடியர் லவ்.. ஹவ் ஆர் யூ?.. நான் யாருனு தெரியுதுதானே.. நான் தான் உன் ஸ்வீட் சீக்ரெட் லவ்வர்.. என படித்தவள் அவனை கேள்வியாய் நோக்கினாள்..
“உங்களுக்கு லவ்வர் இருக்காளா? சொல்லவே இல்லை.. நான் உங்ககிட்ட இருந்து இதை எதிர்பாக்கல..” என பொய்யாய் வருத்தப்பட்டாள்..
“நீ வேற உளறாத.. இது யாருனே தெரியல.. எனக்கென்னவோ இது உன் வேலையா இருக்குமோனு டவுட்டா இருக்கு..”
“என்ன?.. நீங்க வேணும்னே என் மேல பழி போடறீங்க.. உங்களுக்கு உங்க லவ்வரை பத்தி என்கிட்ட சொல்ல விருப்பம் இல்லை, அதான் இப்படி சொல்லி தப்பிக்க பார்க்கறீங்க..” என கோபமாக கூறியவளைக்கண்டு ஒருநிமிடம் யோசித்தவன்.. பின் அவளையே கூர்ந்து நோக்கினான்..
“என்ன எதுக்கு இப்படி பார்க்கறீங்க.. உங்களுக்கு நான் எதுக்கு லவ் லெட்டர் எழுதனும்? உங்களை மாதிரி சிடுமூஞ்சு மிலிட்டரிய நான் லவ் பண்ண எனக்கென்ன பைத்தியமா?..”