தொடர்கதை - மீள முடியாமல் உன்னுள்..! - 10 - பிரதீபா சுந்தர்
“அங்கிள்....... எவ்வளோ நேரம் அங்கிள்... அப்படி எங்கதான் போயிருக்கான் ககன்....... ஆன்ட்டி, டாலி யாரையுமே காணும்....”
“அறுபத்தி ஒன்னு...”
“அங்கிள்... நானே செம தூக்க கலக்கத்துல இருக்கேன்... இதுல நீங்க வேற தாலாட்டு பாடற மாதிரி நம்பர சொல்றீங்களே.... எங்க அங்கிள் போயிட்டான் ககன்...”
“அறுபத்தி ரெண்டு....”
“நீங்க சரி வர மாட்டீங்க... நான் அவன் ரூமுக்கு போய் தூங்கறேன்... ககன் வந்து கேட்டா... நான் வீட்டுக்கு போயிட்டேன்னு சொல்லிடுங்க...”
“அறுபத்தி நாலு....”
“கடவுளே என்னை கப்பாத்து.... இந்த ககன், அங்கிளுக்கு குடுத்த பில்ட்-அப் என்ன..?! இப்போ இவர் போடற மொக்கை என்ன...?! ஷப்பா....!!”
உதய்யின் புலம்பலில் ககனின் தந்தை வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தார்.
“டேய் ககன்...... சீக்கரம் வந்து தொலைடா... போன் வேற அட்டென்ட் பண்ணாம...“ என்றவாறு தொப் தொப் என்று படி ஏறினான்.
“அறுபத்தி ஆறு...” என்று உதய்யின் அங்கிள் எண்ணுவதற்கும்...
“இதோ வந்துட்டேன்டா... என்று கூறிக்கொண்டே ககன் வீட்டினுள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
“வா வா ககன்.. ஹா.. ஹா.. ஹா... இப்போ வரைக்கும் உதய் உன் பேர அறுபத்தி ஆறு முறை சொல்லிட்டான்.. அதுவும் அரைமணிநேரம் தான் ஆகுது அவன் வந்து.. ஹா ஹா... மருமக கிட்ட முன்னாடியே சொல்லி வெச்சிடணும்... நீங்க சண்டை போட ஒரு காரணம் இருக்குன்னு” என்று குதூகலமாக சொன்னார், ககனின் தந்தை...
மாடிப்படியின் பாதியில் நின்று... ககனின் தந்தையை செல்லமாக முறைத்துக் கொண்டிருந்த உதய்.. ‘மருமக’என்ற சொல்லின்போது ககனின் தலை பின்னாடி திரும்பியதை தொடர்ந்து, இவனும் அங்கே பார்த்தால்...
அங்கே ககனின் அம்மா, டாலியிடன் காவ்யாவும் தாராவும் நுழைந்துக்கொண்டிருந்தனர்.... இருவரின் இதயமும் துள்ளி குதிக்காத குறை தான்..!!
நம் மனம் கவர்ந்தவர் முதல் முறை நம் வீட்டிற்கு வரும்போது ஏற்படும் உணர்வே தனி... என்றைக்கும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு... அதை தான் ககன் அனுபவித்துக்கொண்டிருந்தான்.
ககனின் முகத்தில் ரசனையுடன் சந்தோஷம் போட்டி போட்டது என்றால்.. உதய்யின் முகத்தில் ஆச்சர்யத்துடன் கொஞ்சமே கொஞ்சம் பீதி தெரிந்தது... இறுதியில் அவன் பயந்தபடியே நடந்துவிட்டது.. ககனின் மைத்துனி காவ்யா என்றால், அடிக்கடி அவளை சந்திக்க நேரிடும்... சந்தித்தால் வம்பிழுக்க தோணும்... வம்பிழுத்தால் அவள் இவனுக்கு தான் பல்பு கொடுப்பாள்... அதை இவனுக்கு ரசிக்கத் தான் தோன்றும்... இன்னும் என்னென்னவோ..!! இதெல்லாம் இப்பொழுது அவசியம் தானா..?! இல்லையே... இருந்தாலும்ம்ம்........ என்று அவனின் மனது ராகம் இழுக்க... அதை இவன் அடக்க... வெளியே பெண்களை வரவேற்கும் விதமாக தலை அசைப்புடனான் புன்னகையை படரவிட்டவன்... அவர்களுடன் வந்த டாலியை, “ஹாய்.. பிசாசு...”என்று கொஞ்சம் சத்தமாகவே வரவேற்க... பதிலுக்கு டாலியும் “ஹாய்” என்று கை அசைத்தாள்.
டாலியை கவனிக்காத காவ்யாவோ, உதய் அவளைத்தான் பிசாசு என்று கூறியதாக நினைத்து, கோபமாக முறைத்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள். இருந்தாலும், எதிர்பாரா சந்திப்பால் விளைந்த சந்தோஷம்... அவன் பிசாசு என்றதில் சோகம்... என்று பல விதமாக அவளின் மனதில் தோன்றினாலும்... சம்பந்தமேயில்லாமல் “காதல் பிசாசே... காதல் பிசாசே...”என்று மேடி(maddy) வந்து பாடிவிட்டு சென்றார். நோ..நோ... முகம் மட்டுமே மேடி... குரல் உதய்யினுடையதா..?!! அட ராமா... என்ன தான் ஆகிவிட்டது காவ்யாவிற்கு..?!
காவ்யா மனதுக்குள் பட்டிமன்றம் நடத்த... அங்கே இருந்தவர்கள் அதற்குள் பல விஷயங்களை பேசி விட்டனர்...
வீட்டிற்கு வந்த பெண்களை வரவேற்ற தனது கணவரிடம்.. “என்ன... சார் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல... என்ன விஷயம்...” என்று சிரிப்புடன் வினவினார் ககனின் தாய்.
“அதுவா... என் பையன்களும் என்ன மாதிரியே காதலி............” என்று சந்தோஷமாக தொடங்கிவிட்டு.. அவரின் மனைவியின் செல்ல முறைப்பில் மனதை மாற்றிக்கொண்டு... தாராவையும் காவ்யாவையும் ஒரு குழப்பமான பார்வை பார்த்தார்.. ககன் விரும்பும் தாரா யார் என்று இன்னும் அவருக்கு சரியாக தெரியாதல்லவா...
அதை சரியாக புரிந்துக்கொண்டவர்... “ககி கண்ணா... ஒரு நிமிஷம் வரியா...? டாலி... தாராக்கும் காவ்யாவுக்கும் குடிக்க ஜூஸ் குடு டா... நீங்க உட்காருங்க மா... இதோ வந்துடறோம்... உதி... உனக்கும் தெரிஞ்சவங்...க தானே.. பேசிட்டு இரு.. இதோ வரோம்...”என்று விட்டு அவரின் காதல் கணவரிடம் பார்வையாலே ஏதோ கூறிவிட்டு சென்றார்...