"அது மட்டும் இல்லை மதி. அவளை மட்டும் அவன் எதாவது செஞ்சு அவளுக்கு எதாவது ஆகட்டும் நானே அவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிருவேன்னு வேற சொல்லிட்டேன் டி"
தலையில் கை வைத்து அங்கு இருந்த சேரில் அமர்ந்தே விட்டாள் மதி.
அவள் நிலையை பார்த்த காவ்யா, டோக்கன் வாங்கி ஆர்டர் சொல்லி விட்டு மதி அருகில் சென்றாள்.
"மதி சாரி டி. எனக்கு தெரியாதுல்ல அதான்"
"எருமை எருமை. உன்னோட ஆழமான நட்பை போயும் போயும் அவங்க கிட்ட தான் காட்டணுமா? எனக்கு பயமா இருக்கு டி காவ்யா"
"லூசு. என்ன பயம்? உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க. நான் தான பேசுனேன். என்னை தான் திட்டினாலும் திட்டுவாங்க. நீ பயப்படாத மதி"
"எனக்கு பயமே அது தான் காவ்யா. என்னை திட்டினா கூட தாங்கிப்பேன். ஆனா உன்னை எதாவது சொன்னா எனக்கு கஷ்டமா இருக்கும். அதும் உன் கூட பேச கூடாதுன்னு எதாவது சொல்லிட்டா, அப்படி எல்லாம் என்னால இருக்க முடியாது டி"
அவள் பதிலில் உருகி போன காவ்யா "அவங்களை பாத்தா அப்படி எல்லாம் தெரியலை. பிரண்ட்லியா தான் பேசுனாங்க. நீ எழுந்து வா போகலாம்", என்று சொல்லி அவளை சமாதான படுத்தினாள்.
"பணம் டி"
"அதான் உன் ஆள் பர்ஸ் கொடுத்துருக்காரே. அதில் இருந்து எடு"
"ஒரு மாதிரி இருக்கு டி காவ்யா. அதான் நம்ம கிட்ட பணம் இருக்கே"
"இல்லை டி மதி. அவர் கொடுத்து விட்டுருக்காரு. அதை எடுக்கலைன்னு கோப பட போறாங்க. அதுல இருந்தே கொடு", என்றாள் காவ்யா.
காபி மற்றும் வடையை இரண்டு ட்ரேயில் வைத்து வாங்கி கொண்டு நடந்து வரும் போது, "நீ சொன்னதுக்கு அவங்க என்ன காவ்யா சொன்னாங்க?", என்று கேட்டாள் கலைமதி.
"பிரண்ட் மேல அவ்வளவு பாசமான்னு சிரிச்சிகிட்டே தான் கேட்டாங்க"
"அப்பாடி. சரி வேற என்ன கேட்டாங்க?"
"நீ வேற யாரையும் லவ் பன்றியான்னு கேட்டாங்க மதி"
"என்னது?"
"ஆமா மதி. அப்படி தான் கேட்டாங்க"
"ஐயோ. சரி இதுக்கு என்ன சொல்லி தொலைச்ச?"
"அவ ஒரு பிள்ளை பூச்சி. அப்படி எல்லாம் செய்ய மாட்ட சார்ன்னு சொன்னேன்"
"அப்பாடி காப்பாத்திட்ட. சரி கிட்ட வந்துட்டோம். எதுவும் பேசாத", என்று சொல்லி விட்டு முன்னே நடந்தாள் கலைமதி.
"அவர் கிட்ட எப்படியாவது மன்னிப்பு கேட்டுறனும்", என்று நினைத்து மதியின் பின்னே போனாள் காவ்யா.
அங்கு போய் அமர்ந்து அவரவர் சாப்பிட ஆரம்பித்தார்கள். கண்களாலே மன்னிப்பு கேக்கணும் என்று நினைத்து அவன் முகத்தையே அடிக்கடி பார்த்து கொண்டிருந்தாள் காவ்யா.
அப்போது தான் அதை உணர்ந்தாள். அவன் பார்வை முழுவதும் நொடிக்கொருதரம் மதி மேல் விழுந்ததை. அதை பார்த்து பீதி அதிகமானது காவ்யாவுக்கு. பின்னே அவன் புது பொண்டாட்டியை காதல் பார்வை பார்க்காமல் ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டிருந்தால் அவளும் என்ன நினைப்பாள்?
ஆனால் மதி, அப்பாவுடன் பேசி கொண்டிருந்தாள். அவனை திரும்பி கூட பார்க்க வில்லை.
காவ்யாவுக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை. "நான் பேசினதுனால மதிக்கு பிரச்சனை வரக்கூடாது. மன்னிப்பு கேக்கணும். கொஞ்சம் திரும்பலாம்ல இவரு. அவளையே பாத்துட்டு இருக்காரு", என்று அவள் யோசிக்கும் போதே அவன் திரும்பி பார்த்தான்.
பயந்துதான் இருந்தவளை பார்த்து இயல்பாக சிரித்தான் சூர்யா. அவன் சிரிப்பில் தைரியம் வர பெற்ற காவ்யா கண்களாலே மன்னிப்பை கேட்டாள்.
அவனும் சிரித்து அவள் பயத்தை போக்கினான்.
அப்பாடி என்று நிம்மதி பெரு மூச்சு விட்டாள் காவ்யா.
"எங்க கூடவே வா மா. சூர்யா தம்பி கார் எடுத்துட்டு தான் வந்திருக்கு", என்றார் சண்முகம்.
"அதெல்லாம் வேண்டாம் பா. நான் பஸ்ஸில் பொய்க்குவேன்"
"ஒரு கஷ்டமும் இல்லை. உங்களை உங்க வீட்டில் விட்டுட்டே நாங்க போறோம்", என்று சொன்னான் சூர்யா.
அதுக்கு மேல் மறுக்க முடியாமல் "சரி" என்றாள்.
டிரைவர் இருக்கையில் அமர்ந்தவன் காரை எடுத்தான். அவன் அருகில் சண்முகம் அமர்ந்திருந்தார்.
பின்னாடி கலைமதியும், காவ்யாவும் அமர்ந்தார்கள்.
அட்ரஸ் காவ்யா சொல்ல சூர்யா அவள் வீட்டு முன்பு காரை நிறுத்தினான்.
"இவ்வளவு தூரம் வந்துடீங்க. எல்லாரும் உள்ள வாங்களேன்", என்று சொன்னாள் காவ்யா.
"இல்லை மா. பரவால்ல. நீ போ", என்று சொன்னார் சண்முகம்.
"ப்ளீஸ் பா. வாங்க. அம்மா அப்பாவை பாத்துட்டு போலாம்"