அவன் கல்லூரி சென்றதிலிருந்தே அந்த பழக்கத்தை விட்டுவிட்டான்... இப்பொழுது என்னவோ அதுவே தானாக வாயிலிருந்துவந்துவிட்டது.
இவன் சிந்தனையில் இருக்க... அவனை பெற்றவர்கள் ஒரு சிறிய சிரிப்புடன் பார்வை பரிமாற்றம் செய்துக்கொண்டு, இவன் அடுத்து பேசுவதற்காக காத்திருந்தனர்.. அவனின் அமைதியை அதிசயமாக பார்த்தபடி.
“அதுவந்து அப்ப்பா.... அம்ம்மா..... தாரா....”என்று இவன் திணற...
அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பை இருவரும் உதிர்த்துவிட்டனர்....
பின், “என்ன ககி கண்ணா.. இப்படி ஜவ்வு மாதிரி இழுக்கறியே... ஹா.. ஹா... உனக்கு எங்ககிட்ட என்ன தயக்கம்... நீ கேட்டு நாங்க எப்போவாது ரிஜெக்ட் பண்ணி இருக்கோமா...!! தயங்காம பேசு டா கண்ணா...”என்றார் அவனின் அன்னை, ஜாலியான மூடில் அழகாக ‘ரிஜெக்ட் செய்ய மாட்டோம்’ என்று குறிப்பாக கூறினார். அதையெல்லாம் ககன் கவனத்தில் கொள்ளாமல்.. சீரியஸாக பேசத்தொடங்கினான்...
“அப்பா.. எனக்கு தாராவ ரொம்ப பிடிச்சு இருக்கு.... அவகூட வாழ்க்கை முழுக்க இருக்கணும் ப்பா... ஐ வான்ட் டு கெட் மரீட் டு ஹர்...”என்று படபடவென்று கொட்டிவிட்டு, சற்று பெரிய மூச்சுக்களுடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவர் பதில் எதுவும் பேசாமல் அவனின் கையில், நேற்று தாரா தந்த அட்ரஸ் கார்டை தந்தார். அதை பார்த்தவன் முகம் பிரகாசமாகியது...
“அப்பா.. இந்த பர்னிச்சர்(furniture) கம்பெனி கூட தான் ப்பா இப்போ நம்ப ஹோட்டல்-ல ரேனோவேட் பண்ற இன்டீரியர் கம்பெனி காண்டிராக்ட் போட்டு இருக்காங்க... அவங்க பர்னிச்சர் குவாலிட்டி நல்லா இருக்குனு நீங்களும் சொன்னீங்களே....” என்று குஷியாக தொடங்கியவன் யோசனையுடன் முடிக்க...
அவனின் அப்பாவோ, “ஹ்ம்ம்... ஆமாம் ககி.. அவங்க தான்... அவங்க யாருன்னு தெரியுமா...” என்றார்..
“தாராவோட பாமிலி ப்பா....”
அவனின் அம்மா, எவ்வளவு முயன்றும் முடியாமல் சட்டென்று நெத்தியில் அடித்துக்கொண்டார்..
அப்பொழுதுதான் அவன் சொன்னது புரிய.... அவனும் சிரிப்புடன் அதையே செய்தான்.
“சரி சரி.. போதும்... அவங்க நமக்கு ஒரு வகையில சொந்தம் கூட.... டாலியோட அப்பா வழில...” என்றார்.
‘அய்யய்யோ.....’என்று இப்பொழுது மானசீகமாக மறுபடி ககன் தலையில் அடித்துக்கொண்டான்.
“ககி... தாராவ எங்களுக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு... அவங்க குடும்பம் கூட ரொம்ப நல்லா மாதிரி தான்.. பேசி பழக்கம் இல்லைனாலும் கேள்வி பட்டு இருக்கேன்... அவங்க கூட சம்பந்தம் பண்ணா நல்லா தான் இருக்கும்... ஆனா இப்போ பிரச்சனையே டாலியோட அப்பா தான்.. அவருக்கும் தாராவோட குடும்பத்துக்கும் ஆகாது....” என்றார்.
ககன் புரிந்துக்கொள்ள சிறிது நேரம் கொடுத்தவர்... பின்
“அவருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்காத ககி... டாலி-மேகி ஜோடிய மனசுல யோசிச்சு பாரு... இவங்க கூட சம்பந்தம் பண்ணா அவரு டாலிய மேகிக்கு தரமாட்டேன்னு சொன்னாலும் சொல்லுவாரு.... ஒருவேளை, அப்படி பண்ணா நான் அவர்கிட்ட பேசவேண்டியபடி பேசிக்கறேன்... நீ அதுக்கு வொர்ரி பண்ணிக்காத... ஆனா இப்போ ரெண்டு விஷயம் யோசிக்க வேண்டியது இருக்கு... ஒன்னு... உங்க ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல கல்யாணம் பண்ண முடியாது.. நான் அதுக்கு ஒத்துக்கவும் மாட்டேன்.. என்னோட சம்பந்தி குடும்பம் கல்யாண மேடையில ஒத்துமையா இருக்கணும்.. அது இப்போ இன்னிமே நடக்கவே நடக்காது.. அதுக்காக நான் யாரையும் விட்டுகுடுக்கவும் முடியாது.. அதுனால வேற வேற நாள் கல்யாணம் தான் பெஸ்ட். சரியா... அடுத்த விஷயம்... டாலி அப்பா எல்லா விஷயமும் தெரிஞ்சிகிட்டே... எல்லாம் புரிஞ்சும் ஏதாவது பிரச்சனை பண்ணுவாரு... அவரால தாராக்கு எந்த மன கஷ்டமும் வரக்கூடாது.. அவ நம்ப வீட்டுக்கு வந்தபிறகு இத நினைச்சு பீல் பண்ண கூடாது... அதுக்கு தாராவ மனசளவுல தயார் பண்ண வேண்டியது நீ தான். அப்படி ஏதாவது பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்க உன்னால முடியனும்... இதெல்லாம் யோசிச்சு முடிவு எடு... நீ என்ன சொன்னாலும் எங்களுக்கு ஓகே தான்.. இப்போ டைம் ஆச்சு.. நான் கிளம்பறேன்...” என்றபடி அவர், உள்ள பிரச்சனையை விளக்கமாக கூறிவிட்டு.. ஆறுதலாய் புன்னகைத்த மனைவியிடமும்... யோசனையாய் அமர்ந்திருந்த மகனிடமும் விடை பெற்றார்.
ககனின் அன்னை அவனின் கையை பிடித்தபடி... “ககி கண்ணா... அப்பா சொன்னது உனக்கு புரிஞ்சிதா.. தாராக்கிட்ட எல்லாம் விளக்கமா சொல்லி.. அவளுக்கு ஓகேன்னா சொல்லு.. நாம அவங்க வீட்ல போய் பேசலாம்.. அதுக்கு முன்னாடி நீ நல்லா யோசி... டாலி அப்பா பத்தி உனக்கு நல்லா தெரியும் ககி... எப்போ பிரச்சனை கிளப்பலாம்ன்னு காத்துட்டு இருப்பாரு.. இப்போ அவருக்கு லட்டு மாதிரி விஷயம் கைல கிடக்கபோகுது... அந்த வீட்டு பெரியவங்க மேல இருக்கற கோபத்துல தாராவ அவரு காயப்படுத்த கண்டிப்பா ட்ரை பண்ணுவாரு..