(Reading time: 10 - 20 minutes)

பரத்தை பற்றிய அம்முவின் மதிப்பீடு உண்மை... ஆனால் காதல் என்று ஒன்று வந்து விட்டால் மனிதன் எப்படி மாறுவான் என்பது புரியாத புதிர் தான்... இன்றைய உலகத்தில் காதலின் பரிணாமங்கள் வித்யாசமானது.. ஒரு பெண்ணை காதலித்து அவள் அவனை ஒப்புகொள்ளவில்லை எனில், அவன் ஆசிட்டை அவள்மேல் ஊற்றுவதும் நடக்கிறது.. ஒருசிலர் அவள் நினைவோடே வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.. இன்னும் ஒருசிலர் டேக்கிட் ஈஸி என்று வேறு ஒரு பெண்ணை பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.. ஆனால் சிலபேர் அவளை எப்படியாவது வற்புறுத்தியாவது அவள் காதலை பெற நினைக்கிறார்கள்... இதில் கடைசி வகை தான் பரத்... அவனிடம் பல நல்ல குணங்கள் இருந்தாலும் காதலில் அவன் குணம் அடி பட்டு போகிறது.. மித்ராவின் மனதில் புகழ் தான் இருக்கிறான் என்பது தெரிந்தும் பரத் மித்ராவை தனக்கு சொந்தமாக வேண்டும் என நினைத்தான்... ஆனால் அப்படி வற்புறுத்தும் பெண்ணின் மனதில் அவனின் மீது வெறுப்பு மட்டுமே இருக்கும் என்பதை யோசிப்பதே இல்லை... பரத் சில நாள் முன்பே அவன் காதலை மித்ராவிடம் கூற, அவள் தன் மனதில் புகழ் இருப்பதை தெரிவித்தாள்.. ஆனால் பரத் அவளை விடவில்லை.. தினமும் அவளிடம் பேசி மனசை மாற்ற முயற்சித்தான்... ஆனால் அவளோ அவனை கண்டுகொள்ளவே இல்லை.. இதனால் அவன் மிகவும் ஆத்திரமடைந்தான்.. ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பது உண்மைதானே..

இதை எல்லாம் அறியாத அம்மு பரத்திடம்,

“நீ ஒரு பொண்ணை லவ் பண்ணியா.. என்னால நம்பவே முடியல...”

“என்ன நம்ப முடியல.. ஏன் அவன் லவ் பண்ண கூடாதா..” என கோபமாக திலக் கேட்கவும்,

“ஹேய் நான் அப்படி சொல்லல.. இவன் பொண்ணுங்க கூட பேசவே மாட்டான்.. அதான் அப்படி கேட்டேன்.. சரி யார் அந்த பொண்ணு.. என்ன department?..”

“எல்லாம் நம்ப கிளாஸ் தான்..”

“நம்ம கிளாஸா.. யாரு?..”

“எல்லாம் உன் friend மித்ரா தான்..” என திலக் சொல்லவும் அதிர்ந்தாள் அம்மு..

“என்ன? சங்குவா? நீ சங்குவையா லவ் பண்ண?..” என அம்மு பரத்திடம் கேட்க அவன் மெல்ல தலையாட்டினான்..

“ஆனா அவ புகழ் அண்ணாவை லவ் பண்றானு இந்த காலேஜுக்கே தெரியுமே.. உனக்கு தெரியாதா..”

“அதுக்காக எனக்கு மித்ரா மேல லவ் வரக்கூடாதா.. அது தானா வந்துடுச்சி.. நான் என்ன செய்ய முடியும்..” என வருத்தமாக பரத் கூறியதை கண்டு அவனை பாவமாய் பார்த்தாள் அம்மு..

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. ஆனா நீ சங்குவை மறந்துட்டு படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.. நீ இப்படி சோகமாய் இருப்பதால் ஏதும் மாறப்போவதில்லை..”

“எனக்கு புரியுது.. ஆனா அதுக்கு டைம் ஆகும்..”

“அது ஒன்னும் தப்பில்லை.. நீ டைம் எடுத்துக்கோ..”

“எனக்கு உன்கிட்ட ஒரு ஹெல்ப் வேணும்..”

“என்ன?..”

“மித்ராகிட்ட நான் லவ் சொன்னதிலுருந்து என்கிட்டே அவ பேசறதே இல்ல.. முகத்தை திருப்பிக்கிறாங்க. என்கிட்டே பேச சொல்லு.. ப்ளீஸ்.. அவ லவ் எனக்கு கிடைக்காதுன்னு தெரியும்.. ஆனா அதுக்காக என்கிட்டே பேசாம இருக்கறதை என்னால் தாங்க முடியல.. என்னை ஒரு பிரண்டா ஏத்துக்க சொல்லு.. நான் கண்டிப்பா ஒரு நல்ல பிரண்ட்டா இருப்பேன்.. ப்ளீஸ்..”

“என்னை கேட்ட நீ அவகிட்ட பேசாம இருக்கறதே உனக்கு நல்லது பரத்..”

“நீ எப்படி எனக்கு பிரண்டோ அதே மாதிரி தான் மித்ராகிட்டையும் பழகுவேன்.. என்ன நீங்க நம்பனும்..”

“நான் உனக்கு பிரண்டா?..”

“ஆமா.. நான் சோகமாய் இருக்கும்போது நீ எனக்காக என்ன பிரச்சனைனு  கேட்டே.. அப்போ நீ என் பிரண்டு தானே..”

“சரி.. சரி.. friend தான்.. நீ உண்மையான நட்போடு மித்ராகிட்ட பழகுனா அவளும் உன்கிட்ட நட்பா பழகுவா.. டோன்ட் வொர்ரி..” என்றவள் அவனிடமிருந்து விடைபெற்றாள்..

அம்மு வேகமாக மித்ராவிடம் சென்றாள்... அவளை இழுத்துக்கொண்டு தனியே சென்றவள்,

“பரத் உங்கிட்ட அவன் லவ்வை எப்போ சொன்னான்?...”

“உனக்கெப்படி தெரியும்?..”

“நீ முதலில் இதுக்கு பதில் சொல்லு..”

“உனக்கு ஆக்ஸிடன்ட் ஆனதே.. அப்போ 6 மாசம் வீட்டுல இருந்தியே.. அப்போ..”

“ஓ...”

“என்ன ஓ.. உனக்கெப்படி தெரியும்?..”

“பரத் சொன்னான்..”

“ஓ.. தூது விட்டானா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.