தொடர்கதை - என் நிலவு தேவதை – 18 - தேவிஸ்ரீ
அமிர்தா பரத்தின் மிரட்டலை கண்டு பயப்படவில்லை.. ஆனால் அடுத்து அவன் என்ன செய்வான் என்று தான் அவளுக்கு கவலையாக இருந்தது.. அவன் திட்டம் என்னவாக இருக்கும் என அவள் யோசித்து யோசித்து மூளை குழம்பியது தான் மிச்சம்.. இங்கு அமிர்தா செய்த முதல் தவறு, இதை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் விட்டது தான்.. ஒன்று அவள் இதைப்பற்றி விக்ரமிடம் கூறியிருக்க வேண்டும்.. அல்லது தன் தோழி மித்ராவிடமாவது அம்மு கூறியிருக்கலாம்.. அதன் மூலம் மித்ரா புகழின் உதவியை நாடியிருக்கலாம்.. அதனால் இந்த பிரச்சனையே வேறு விதமாய் மாறியிருக்கும்..
அம்மு விக்ரமிடம் சொல்லாமல் இருந்ததற்கு காரணம் இருந்தது.. ஆரம்பத்தில் இருந்தே பரத்தை பற்றி விக்ரமிடம் கூறி இருந்திருந்தால் இப்போது அவனை அணுகுவதற்கு சுலபமாய் இருந்திருக்கும்.. அதோடு தன் காதலிக்கு பிரச்சனை என்பதை விட, தன் தங்கைக்கு பிரச்சனை அதுவும் தன் காதலியின் முட்டாள்தனத்தால் என்பது மட்டும் அவனுக்கு தெரிய வந்தது எனில் அவ்வளவு தான்.. ஏற்கனவே விக்ரம் மும்பை போவதற்கு முன் அவளிடம் எச்சரித்திருந்தான். நான் இல்லாத நேரத்தில் நீ செய்யும் குறும்புகளை குறைத்து கொள்.. எதிலும் மாட்டி கொல்லாதே.. நீ மாட்டுவது மட்டுமில்லாமல் மித்ராவையும் அதில் இழுத்து விடாதே என்று, அப்போது சிரித்தவள் இப்போது?????...
ஏற்கனவே இவள்மீது அவனுக்கு நல்ல்லல அபிப்ராயம்... இதில் இப்பிரச்சனை பற்றி அவனுக்கு தெரிந்தால் சாமியாடிவிடுவான்.. இதற்காக பயந்தவள் பாவம் இதைப்பற்றி மறைத்ததற்காக தன் காதலையே இழக்கப்போகிறாள் என்று அவளுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்
பரத்தின் பிரச்சனை உருவாக தெரிந்தோ தெரியாமலோ அமிர்தா காரணமாகி விட்டாள்.. அந்த பிரச்சனையை தானே சரி செய்ய வேண்டும் என முடிவெடுத்தாள்... கடைசி வருட படிப்பு முடிய ஒரு வாரமே இருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்குமோ என பதைபதைப்புடன் அம்மு இருக்க மித்ரா அவளின் நிலையை பார்த்து கேள்விகளால் துளைத்தெடுத்து விட்டாள்.. ஆனால் அம்முவோ பரத் அமைதியாக இருப்பதை கண்டதால் அவளை வீணாக கவலைப்பட வைக்க வேண்டாமென நினைத்து ஏதேதோ கூறி சமாளித்து விட்டாள்..
இன்று கல்லூரியின் கடைசிநாள்.. fairwell பார்ட்டி ஏற்பாடு செய்யபட்டிருந்தது.. அனைவரும் மேடை ஏறி ஆடி பாடி சிரிக்க வைத்தனர், சிலர் கண்ணீருடன் பேசினர், இன்னும் சிலரோ இதுவரை செய்த குறும்புகளை நினைவு படுத்தினர்.. ஆனால் அதை எல்லாம் உணரும் நிலையில் அம்மு இல்லை.. அவள் பரத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து கொண்டே இருந்தாள்.. அவனை பார்க்கும் போது எப்போதும் போல் அமைதியாக காணப்பட்டாலும் அம்முவுக்கு உள்ளூர சந்தேகம் தான்.. அதனால் மித்ராவை பாதுகாத்து கொண்டே இருந்தாள்.. அவள் எதிர்பார்த்ததும் நடந்தது.. பரத் கடத்தி விட்டான்.. மித்ராவை அல்ல, அமிர்தாவை...
பரத் தெளிவாக இருந்தான்.. மித்ராவை கடத்துவதால் ஒன்றும் நடக்க போவதில்லை.. இதுவே அம்முவை கடத்தினால் மித்ரா தானாகவே தன்னைத் தேடி வருவாள்..மித்ரா சகஆசிரியையுடன் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் பரத் வெளியே சென்றதைக் கண்ட அம்மு அவனைக் கண்காணிக்க பின் தொடர்ந்து சென்ற போது சமயம் பார்த்து அம்முவை கடத்தி விட்டான்...
ஒரு பாழடைந்த அறையில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மயங்கிய நிலையில் இருந்த அம்முவை வீடியோ எடுத்து அதை மித்ராவின் போனுக்கு அனுப்பிய பரத் அதனுடன் ஒரு அட்ரசை அனுப்பி அவ்விடத்திற்கு தனியே வரும்படியும், போலீஸ் வந்தால் விளைவு மோசமாக இருக்கும் எனவும் செய்தி அனுப்பினான்...
அம்முவுக்கு மெல்ல மயக்கம் தெளிந்தது.. கண்விழித்து பார்க்கும் போது பரத்தை கண்டாள்.. அவனும் அவள் கண் விழிப்பதை கண்டு அருகில் வந்தவன்..
“என்ன அம்மு.. மித்ராகிட்ட அவளுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்க சம்மதம் வாங்கிட்ட போல..” என நக்கலாக கேட்டான்..
“என்ன பண்ணி வெச்சிருக்க பரத்.. என் கட்டை விடுவி..”
“எதுக்கு?.. உன்னை வெச்சு தான் பல காரியங்கள் பண்ணியாகணும்..”
“என்ன பண்ண போற..” என்றவள் யோசிக்க, “மித்ரா.. மித்ரா எங்கே?...”
என பதறினாள்...
“ஓ.. உயிர்தோழி ஞாபகம் வந்துடுச்சா... கவலையே படாத.. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளே உன்னை தேடி வருவாள்... உனக்காக பதறி அடிச்சிட்டு வருவா..”
“ஏன் பரத்.. எதுக்காக இப்படி பண்ற... நீ வற்புறுத்தி பெரும் எந்த ஒரு விசயமும் உனக்கு மகிழ்ச்சியை தராது.. நீ காதலிக்கும் பொண்ணு வேற ஒருத்தரை விரும்புறா.. அதுவும் சின்ன வயசில இருந்து.. அவள் உன்னையே கல்யாணம் பண்ணாலும் அது முழுமை பெறாது.. அவ இரட்டை வாழ்க்கை வாழனும்.. அவ கடைசி வரை உன்னோடு மகிழ்ச்சியா வாழ முடியாது..”
“பேசி முடிச்சிட்டயா.. எனக்கு அதெல்லாம் தெரியாது.. கல்யாணம் ஆனதும் அவ என் மனைவி.. கல்யாணத்துக்கு முன்னாடி அவ யாரை வேணாலும் லவ் பண்ணி இருக்கலாம்.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் நான் அவளோட கணவன், என்னை தான் அவ லவ் பண்ணி ஆகணும்.. அதுவும் உன் தோழி மித்ராவை பத்தி சொல்லவே வேணாம்.. காதலை விட கல்யாணத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பா..