(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 44 - தேவி

vizhikalile kadhal vizha

செழியன் அப்பா சிவஞானம் மட்டும் அல்ல, அவர் உறவினரான வடிவேலும் வேலன் அங்கே இருப்பதை எதிர்பார்க்கவில்லை..

வடிவேல் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார்.

“அட.. சுந்தரி பெரியம்மா .. நீங்க வந்துருக்கிறதா தம்பி சொல்லவே இல்லையே ? எப்படி இருக்கீங்க? மேலுக்கு நல்லா இருக்கா?”

முதலில் ஆச்சியும் வடிவேலை மட்டுமே பார்த்து இருக்க ,

“வாய்யா .. வடிவேலு.. ... நாங்க வாறது கணேசனுக்கே தெரியாதுயா ? அதான் அவன் சொல்லிருக்க மாட்டான்.. நான் நல்ல சொகந்தான்... நீ , உன் வீட்லே எல்லோரும் சுகமா?”

“நல்லாருக்கோம் பெரியம்மா.. தீடிர்ன்னு வந்துருக்கீங்க..?”

“முருகனுக்கு பங்குனி உத்திரத்த அப்போ பால் குடம் எடுக்கறதா நேர்ந்துகிட்டேன்.. அதான் நேர்த்திகடனை செலுத்திட்டு போகலாம்ன்னு வந்தேன்.. இந்த வாட்டி வேலனும் வீட்டிலே எல்லாரையும் கூட்டிகிட்டு வந்து இருக்கான்..”

“அட.. அப்போ தங்கச்சி, மவ எல்லோரும் வந்துருக்காளா... ரொம்ப சந்தோஷம்.. “

அப்போதுதான் செழியன் அம்மா பார்வதியை பார்த்த ஆச்சி,

“அட.. பார்வதி .. வாத்தா... உன் வீட்டுக்காரர், மவன் எல்லோரும் வந்துருக்காப்புலே இருக்கே.. வாங்க.. எல்லோரும் இருங்க..” என,

“உங்க உறவு முறை எல்லாம் பார்த்ததுக்கு பொறவு தான் நான் இருக்கறது தெரிஞ்சதா பெரியம்மா..? நான் வந்தவுடனே உங்கள பார்த்துட்டேன்.. நீங்க அவங்ககிட்டே பேசிட்டு இருந்தீங்களேன்னு நின்னுட்டு இருந்தேன்..”

“ரொம்ப நாள் கழிச்சு பார்கோம் லே .. அதான் “ என்றவர், “நீ எங்கன இங்கே வந்துருக்க?” என்று விசாரிக்கும்போது தான், கணேசன் சொன்ன சம்பந்தம் இவர்களோ என்று தோன்றியது..

இப்போது ஆச்சிக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை.. அவருக்கு மலருக்கு செழியன் மேல் அன்பு இருப்பதாக சந்தேகம் இருந்தது.. அது கைகூட அவரேதான் தடையாகவும் இருக்கப் போகிறார்.. ஆனால் இப்போது செழியன் குடும்பத்துக்குள் வந்து விட்டால் மலரால் செழியனை எப்படி எதிர் கொள்ள முடியும் என்ற சந்தேகம் ஏற்பட்டது.. இதன் பின் மலருக்கு ஏற்படபோகும் வேதனையும் அவரின் கண் முன்னே தோன்றியது..

இப்போது கணேசனிடமும் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று சொல்ல முடியாது. அதிலும் உப்பு தாம்பூலம் மாற்றுமளவிற்கு அவன் தயாராக இருக்கிறான் என்றால் இந்த சம்பந்தத்தின் மீது உள்ள பிடிப்பு விளங்குகிறது..

அவர் வேலனை பார்க்க, அவரும் தன் அம்மாவையே பார்த்து இருந்தார். அவருக்கும் மலரின் மனம் தெரிந்து இருந்ததே.. என்ன செய்ய என்று புரியவில்லை..

செழியன் அப்பா சிவஞானமும் இப்போது முழித்தார். கணேசனிடம் தன் மகன் வேறு பெண்ணை விரும்புவதை சொல்ல வந்தவர், அவர் உறவு பெண்தான் அவள் என்பதை எப்படி சொல்ல ? என்று திகைத்தார்.

ஆளுக்கு ஒருபுறம் திகைத்து நிற்க, பார்வதி தான் சமயோசிதமாக பேச்சை ஆரம்பித்தார்.

“பெரியம்மா .. உங்களுக்கும் இது தான் சொந்த ஊரா?”

“ஆமா தாயி..”

இப்போது வடிவேல் தான் வந்த வேலையை பார்க்கலாம் என்று எண்ணியவர்,

“கணேசா.. நான் உன்கிட்ட சொன்ன எங்க மச்சான் குடும்பம் இவங்கதான்.. ஆனாக்க அதில் ஒரு சிக்கல்” என்று இழுக்க,

செழியன் அப்பா அதை பிடித்தவராக,

“ஆமாங்க.. உங்ககிட்டே பேசின மாதிரி நமக்குள்ளே சம்பந்தம் வச்சுக்க அந்த முருகன் மனசு வைக்கலை.. என் புள்ள வேற பொண்ண விரும்புறதா சொல்லிட்டான்.. என்னாலே அவம் மனச மாத்த முடியல.. உங்களுக்கு மனசு கஷ்ட்டத்த கொடுத்ததுக்கு என்னை மன்னிசிகிடுங்க..”

இப்போது வேலன் “அது எப்படிங்க.. ? நீங்க முதலிலே உங்க பையன விசாரிச்சு இருக்க வேண்டாமா? இப்போ எங்க வீட்டு பொண்ணு மனசு இத எப்படி எடுத்துக்க போகுதோ தெரியலையே?”

அதற்குள் கணேசன் “சரி விடு வேலா.. நல்ல காலம்.. ஏதோ நாம பொருத்தம் பார்த்தோம் .. ஒத்து வரலைன்னு நினைச்சிகிடலாம்.. நாங்க இன்னும் புள்ள கிட்டே நேரா சொல்லல.. விருந்தாளிங்க வாறதா தான் சொல்லிருக்கோம்.. இது அப்படியே இருக்கட்டும்.. “

அதுவரை பேசாமல் இருந்த செழியன் கணேசனை பார்த்து

“ஐயா.. தப்பு என் பேர்லதான்.. அப்பா எனக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்காங்கன்னு தெரியும்.. ஆனாக்க இப்படி பேசி முடிக்கிற அளவுக்கு போவாங்கன்னு நினைக்கல.. அதான் அவங்க கிட்டே முதலில் சொல்லல.. எங்களாலே உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்கு மன்னிச்சிடுங்க.. “ என்று கை கூப்ப,

கணேசனோ “ஐயோ இதிலே என்ன தம்பி இருக்கு? ஆண்டவன் முடிச்சு என்னவோ அதான் நடக்கும்.. சம்பந்தக்கராங்களா இல்லாட்டி என்ன .. சிநேகிதமா இருந்துட்டு போவோம்.. “ என

இப்போது வடிவேல் “ஆமாம்.. கணேசா.. நானும் அதான் சொன்னேன்.. நானே உன்கிட்ட பேசிக்கிடுதென்னு சொன்னேன்.. இல்லை நாங்க நேர்லே வந்து அவங்ககிட்டே பேசுறோம்ன்னு சொன்னாங்க.. அதான் அழைச்சுட்டு வந்தோம்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.