(Reading time: 13 - 25 minutes)

“அடியேய்.. அத சொல்ல வரதுக்குள்ளே ஏன் இந்த குதி குதிக்கிற? “ என்று அவளுக்கு மேல் குரல் கொடுத்தவர்,

“மலரு.. உன் கல்யாண விஷயமா உங்க தாத்தா வேற ஒரு எண்ணம் வச்சு இருந்தார்.. நான் அத தான் நிறைவேத்துவேன்”

“இது நல்லா இருக்கே.. தாத்தா எங்கிட்ட கேட்டா எதுவும் நினைப்பு வச்சு இருந்தார்.. இன்னும் சொல்லப் போனா நான் பத்து வயசா இருக்கும்போதே தாத்தா இறந்துட்டார். அப்போவே அவருக்கு அந்த எண்ணம் இருந்து இருக்குமா என்ன?”

“அவர் நீ பொறந்த போதே .. எங்கிட்ட சொல்லிட்டார்..”

“இது இன்னும் சுத்தம்.. எனக்கு விவரம் தெரியாத வயசுலே பேசின பேச்சுக்கு எல்லாம் நான் தலை ஆட்ட மாட்டேன்..”

“ஏட்டி.. உங்க தாத்தா சொத்து , சுகம் மட்டும் அனுபவிப்பீங்க.. அவர் வாக்கு கொடுத்தா மட்டும் கசக்குதோ ?”

“ஏன்.. நான் உன்கிட்டயோ, தாத்தா கிட்டயோ எனக்கு சொத்து குடுன்னு கேட்டானா என்ன?”

வேலன் “மலர்.. ஆச்சிய.. எதிர்த்து பேசிட்டு இருக்க? இதுதான் நீ படிச்ச படிப்பா? இல்லை நாங்க வளர்த்த முறை சரி இல்லையா?” என்று கடுமையாக கேட்க,

“சாரி.. பா “ என்று தணிந்தவள். “ஆச்சி பேசுறது மட்டும் சரியா? என்னை கல்யாணம் பண்ணிக்க செழியன் கேட்டார்ன்னா, அவங்க எங்கிட்ட கேக்கனும்லே உனக்கு இஷ்டமான்னு.. அவங்களே நேரா அது நடக்கதுன்னு சொன்னா என்ன அர்த்தம்..?”

“அப்படி அவங்க சொல்றாங்கன்னா.. நீ கேளு.. ஆச்சி ஏன் அப்படி சொல்றீங்கன்னு பதமா கேளு.. அத விட்டுட்டு அவங்கள குத்தம் சொல்லுத மாதிரி கேக்க கூடாது” என

“சரிப்பா.. “ என்றவள், “ஆச்சி .. மன்னிச்சுக்கோ... உன்கிட்ட நான் அப்படி பேசி இருக்கக் கூடாது.. அவர் இன்னைக்கு உன்கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் கேக்கார் அப்படினா, என் விருப்பம் இல்லாமலா கேப்பார்.. எனக்கும் அவர பிடிச்சு இருக்கு.. இப்போ சொல்லு என் சந்தோஷத்த விட உனக்கு வேற என்ன வேணும்?”

“மலரு.. ஒரு விஷயம் யோசிச்சியா? அவங்க நம்ம கயல பொண்ணு பார்க்க வந்தாங்க.. அது தெரிஞ்சு நடந்துச்சோ.. தெரியாம நடந்துச்சோ.. அவளும் நம்ம வீட்டு  பொண்ணு .. நீ இவர கல்யாணம் கட்டினா.. அவளுக்கு எப்படி இருக்கும்ன்னு பாரு?”

அதுவரை நடந்த நிகழ்வுகள் எதிலும் தலை இடாமல் இருந்த கணேசன்

“அம்மா.. முதலில் ஒரு விஷயம் புரிஞ்சிக்கோங்க.. அவங்க நம்ம வீட்டுக்கு பொண்ணு பாக்க வரல.. அத மறுக்க தான் வந்துருக்காங்க.. அதுக்கும் மொத இன்னொரு விஷயம் இத்தனை நேரம் நான் சொல்லாதது.. நான் இவங்கள வர சொன்னது நம்ம மலருக்கு பாக்கத்தான்” என,

வடிவு ஆச்சி “என்னலே சொல்லுத?” என்று திகைக்க,

வேலன், சிவஞானம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

செழியனுக்கு இப்போதுதான் மூளையில் மணி அடித்தது.. “ஆஹா.. அவர் மலருக்கு பேசினத நாமதான் உள்ளே புகுந்து குழப்பிட்டோமோ “ என, மலரின் முகத்தை பார்த்தான்..

வடிவேலு “கணேசா என்ன சொல்லுத? உன் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்கறியான்னு தானே நான் கேட்டேன்?”

“அண்ணாச்சி... உங்களுக்கு தெரியாததா .. நம்ம வீட்டுலே என்னிக்கு புள்ளைங்களோ பிரிச்சு பார்த்துருக்கோம்.. ? “

வேலன் “நீங்க மலர மனசுலே வச்சுத்தான் இந்த சம்பந்தம் பேசுனீங்களா”

“ஆமாலே.. நம்ம குடும்பத்து மூத்த பொண்ணு மலரு.. அவளுக்கு பார்க்காம எப்படி கயலுக்கு பார்ப்பேன்?”

“என்னண்ணே.. நீங்க.. பதினஞ்சு நாள் மூப்பு.. ஒரு பெரிய விஷயமா? அப்படி பார்த்தா இந்த குடும்பத்து மொத வாரிசு நீங்கதான் .. உங்க பொண்ணுதானே மொத வரும்.”

“எலேய். என்னைக்கும் நம்ம குடும்பத்துலே ரெண்டு பொண்ணுங்க.. மூத்தது மலரு, இளையது கயலு .. என்னை பொருத்தவரைக்கும் அம்புட்டுதா..”

“இருந்தாலும் நீங்க பேசிட்டு இருக்கிறது தெரிஞ்சு கயலும் மனசுக்குள்ளே ஆசைய வளர்த்துட்டு இருக்குமே”

“அவளுக்கு முன்னமே தெரியும் இன்னைக்கு வாரவங்க மலர பார்க்கத்தான் வாராங்கன்னு. என்ன நேரிலே பார்த்த பொறவு இப்படின்னு சொல்லிக்கல்லாம்ன்னு அவ கிட்டே சொல்லிட்டதால அவ வாய தொறக்கல..”

“இருந்தாலும் என் மனசு என்னவோ ஒப்பலை .. “ என்று ஆச்சி கூற,

“அம்மா.. இந்த தம்பி நம்ம மலருக்கேத்த வரன்... அவ வேலை பாக்குற இடத்திலேயே வேலை பாக்குறான்.. படிப்பு, வேலை, எல்லாம் ஒத்து போகுது.. இன்னும் சொல்ல போனால் மலர் ஜாதகமே என்கிட்டதானே இருக்கு.. அத வச்சு பொருத்தமே பார்த்துட்டேன்.. அம்சமா ரெண்டு பேர் ஜாதகமும் பொருந்தி இருக்கு.. இன்னும் என்ன வேணும் உங்களுக்கு.. ?’

இந்த இடத்தில் சிவஞானம் குடுக்கிட்டு “ஐயா.. மொத உங்களுக்குள்ளே உள்ள உறவு பத்தி சொல்லுங்க.. நான் நெருங்கின சொந்தம் மாதிரி நினைச்சுட்டு இருந்தேன்.. இப்போ பார்த்த ரெண்டு பேரும் கூட பொறந்தவங்க மாதிரி தெரியுது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.