தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 16 - மீரா ராம்
“அமேசிங்க்… சாரு…”
கைத்தட்டல்களின் ஓசையின் நடுவே அவள் நின்றிருக்க, இசை அமைப்பாளர் வந்து வெகுவாய் அவளை பாராட்டினார்…
சிறு புன்னகையினையும் நன்றியினையும் அவரிடம் அவள் வெளிப்படுத்திட,
“என்ன ஒரு வாய்ஸ்… ஃபீல்… ரியலி அமேசிங்க் சாரு…”
மனமுவந்து கூறியவர்,
“இந்த வருடமும் பெஸ்ட் சிங்கர் நீங்க தான்… அதுல டவுட்டே இல்லை…” என புன்னகைத்திட, பதிலுக்கு அவளிடமும் சிறு புன்னகை…
அவளின் அந்த அமைதி, அவரை சற்று யோசிக்க வைக்க, அவள் இங்கே வந்த நிமிடத்தை ஆராய்ந்து பார்த்திட்டார் அவர்…
“சாரு… இதான் இப்போ நீங்க பாடப்போற பாட்டோட வரிகள…”
இசை அமைப்பாளர் அவளிடம் அக்காகிதத்தினை நீட்டிய மாத்திரத்தில், அவளும் அதனை வாங்கி படித்திட, காதல் தோல்வியில் சிக்கித் தவிக்கும் பெண்ணின் அவல நிலையை அது உணர்த்தியிருந்தது தெளிவாய்…
அதை அவள் முகம் வெளிப்படுத்தாதவாறு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவள், வழக்கத்திற்கு மாறாக சற்றே முரண்பட்டு நிற்பதை போல் தெரிந்தது அவருக்கு…
அவரும் அதனை அப்பொழுது எதுவும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனினும், இப்பொழுது அது அவருக்கு உறுத்தலாயிருந்தது…
“தீபா வந்திருக்கானா சாரு?...”
அவர் கேள்வி கேட்டிட, வெளியே கைகளை காட்டினாள் அவள்…
அந்நேரம் தீபனும், அறைக்கதவைத் தட்டியவனாய், “உள்ளே வரலாமா? சார்?...” எனக் கேட்டபடி நிற்க, அவரும் அவனை புன்னகையுடன் உள்ளே அழைத்திட்டார்…
“சரி… சார்… நீங்க பேசுங்க… நான் வெளிய வெயிட் பண்ணுறேன்…”
சொல்லியவள் நிற்காமல் வெளியே சென்றிட, தீபனிடம் வந்து நின்றது அவரது பார்வை…
“என்னாச்சு தீபா?... சாரு எதோ கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்குற மாதிரி தெரியுது… ஆனா அதை அவ வெளிய காட்டிக்கலை… பட் எனக்கு அப்படித்தான் தோணுது?... எனி ப்ராப்ளம்?...”
அவர் தயங்காமல் பட்டென்று கேட்டிட,
சற்று நேரம் யோசித்தவன், சாரு இத்துறையில் கால்பதிக்க காரணமாய் இருந்த அவரிடம் எப்படி மறைப்பது என்ற கேள்வி எழ,
“எங்களைப் பத்தி தான் உங்களுக்கு நல்லாவே தெரியுமே சார்… அவளை அப்செட் பண்ணுறதுக்கு காரணமா இல்ல?... ஆனாலும் அவ எதையுமே வெளியக்காட்டிக்க மாட்டா…”
தீபன் விரக்தியாய் கூறிட
“பட் இப்போ அதையும் மீறி அப்செட்டா இருக்குற மாதிரி நமக்கு தெரியுதுன்னா, அவ மனசுல ஏதோ பெரிய போராட்டம் ஓடுது தீபன்… அது என்னன்னு உனக்கு தெரியுமா?...”
அவரும் அவள் வருத்தத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டு கேட்டிட, அவன் அமைதியானான்…
“சொல்ல விருப்பம் இல்லன்னா விடு தீபா… சொல்ல வேண்டாம்… அவ எனக்கு பொண்ணு மாதிரி… அந்த ஆதங்கத்துல தான் கேட்டேன்…”
அவரின் உண்மையான வருத்தம் அவனுக்கு புரிய,
“நேத்து ஒரு போன் கால் சார்… அதிலிருந்து தான் அவ இப்படி இருக்குறா...”
அவனும் மெதுவாக கூற, அவர் யோசனையில் ஆழ்ந்தார்…
“போன் காலா?... அது அப்போ…..”
அவர் இழுத்திட, “நீங்க நினைக்குறது சரிதான் சார்…” அவனும் அவர் எண்ணத்தினை உறுதி செய்திட,
“இன்னமும் அவங்க மாறவே இல்லையே...” என்றார் அவர் ஆதங்கத்துடன்…
“அதெப்படி சார் மாறுவாங்க… அவங்க மாறிட்டா உலகம் அழிஞ்சிடாதா?...”
“இப்படி செய்யுறதால அவங்களுக்கு என்ன தீபா கிடைக்கப்போகுது?...”
“வேற என்ன சார்… அவளைக் காயப்படுத்தி பார்க்குற அந்த ஒரு சந்தோஷம் போதாதா அவங்க மிச்சம் இருக்குற தன்னோட காலத்தை கழிக்குறதுக்கு….”
“பந்த பாசம் கூட அவங்களுக்கு இல்லாதது தான் ரொம்ப ஆச்சரியமா இருக்கு தீபா…”
“பந்த பாசமா?... ரத்த சொந்தத்தையே அவங்க மதிக்கலை… அப்புறம் எங்க சார் பந்தமும் பாசமும் வரும்?...”
“அது தான் தீபா எனக்கு நினைக்க நினைக்க வேதனையா இருக்கு….”
“உங்களுக்கே இப்படி இருக்குன்னா எனக்கு எப்படி இருக்கும் சார்… யோசிச்சுப்பாருங்க… அவங்க பண்ணுறதை தப்புன்னு சொன்னா, இவ என்னை திட்டுறா… பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து பழகுன்னு…”
“அது தான் தீபா அவ வளர்ந்த விதம்… இத்தனை கஷ்டத்துலயும் அவ அவங்களை விட்டு கொடுக்காம இருக்குறா பாரு… அது தான் சாரு….”
தமக்கையை அவர் புரிந்து வைத்திருக்கும் விதம் கண்டு மனம் மகிழ்ந்தவன், லேசாய் புன்னகைத்திட, “நீ கவலைப்படாத தீபா… சாருவை மட்டும் பார்த்துக்கோ…” என அவனிடம் வெளிப்படையாய் கூறிவர், “நான் பேச வேண்டியவங்க கிட்ட பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்…” என மனதிற்குள் முடிவெடுத்தார் உடனடியாய்…