(Reading time: 13 - 25 minutes)

ஹாலில் அமர்ந்தபடி மகனின் முகத்தினை நினைவு கூர்ந்தார் கல்யாணி…

மகனின் காதலுக்கு தான் ஒரு முட்டுக்கட்டையாக இருப்பதாக உணர்ந்த உடனேயே அவரின் மனம் வேதனையை சுமந்தது வெகுவாகவே…

என்ன செய்து தன் மகனின் மனதிற்கு ஆறுதல் அளித்திட என அவர் யோசித்துக்கொண்டிருந்த வேளையில்,

“கௌஷிக் சார்…”

குரல் வந்த திசை நோக்கி பார்த்தவர், புருவங்களை சுருக்கிட, யோசனையை ஒதுக்கிவைத்துவிட்டு,

“வாங்க….” என்றவர் வந்தவனை அமர சொல்ல, “பரவாயில்லை…” என்றான் அவன்…

“கண்ணா வீட்டுல இல்லையே…..”

“கௌஷிக் சாரைக் கொஞ்சம் பார்க்கணும்… சார் இப்போ எங்க இருப்பாங்கன்னு சொன்னீங்கன்னா நான் போய் பார்த்துப்பேன்…”

“நீங்க?...” அவர் யோசனை விரிந்திட,

“சாருவோட தம்பி நான்…”

அவனும் சட்டென்று கூறிட, அவரின் கண்கள் விரிந்திட்டது…

“தீபன்….”

அவரின் இதழ்கள் தன்னையும் மீறி உச்சரித்திட, அவனின் கண்கள் சுருங்கியது…

“என் பேரு கூட உங்களுக்கு தெரிஞ்சிருக்கே ஆன்ட்டி…” என்றவன், அடுத்த நொடியே, “என் நம்பரே தெரிஞ்சிருக்கும்போது, என் பேரு உங்களுக்கு தெரியாதா என்ன?...” என கேள்வியோடு நிறுத்திட, கல்யாணியோ சிலையாகி போனார்…

சில மணி நேரத்திற்குப் பிறகு,

“மஞ்சுளாக்கா… ஒரு டீ தாங்களேன்…”

சோபாவில் பொத்தென்று அமர்ந்தபடி தீபன் கேட்டிட, “இதோ கொண்டு வரேன்ப்பா…” என்றார் அவரும்…

தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தவனின் கையை படக்கென்று வந்து தட்டி விட்டாள் சாரு…

திடுக்கென்று நிமிர்ந்தவன், எதிரில் சாரு நிற்பதை பார்த்துவிட்டு எழுந்தவன்,

“மஞ்சுளாக்கா… டீ என்னாச்சு?...”

அவளை ஒரு பொருட்டாகவே கருதாது, அவன் கேட்டிட, அவள் அவனை முறைத்தாள்…

அதையும் அவன் கண்டுகொள்ளாது அவளுக்கு பக்கத்தில் இருந்த டைனிங்க் டேபிளில் சென்று அமர, மஞ்சுளாக்காவும் டீயினை அவனிடத்தில் தர, அதனை வெடுக்கென்று பிடுங்கினாள் சாரு வேகத்துடன்…

“ஹேய்… டீ சுட்டுட போகுதுடி…”

அவனும் அதே வேகத்துடன் அவள் கையிலிருப்பதை பிடுங்க முயற்சிக்காமல் கூறிட,

“மனசே வெந்து போச்சு… இதுல இது சுட்டுத்தான் நோக போறேனா நான்?...”

அவளின் கோபமானது அவளின் வார்த்தைகளில் பிரதிபலித்திட, தீபன் புருவங்களை லேசாய் சுருக்கினான்…

அவளின் கோபத்தை அவன் எதிர்பார்த்து தான் வந்தான் எனினும், அவளின் இந்த அக்னி கோபத்தினை அவன் எதிர்பார்த்திராததே உண்மையும் கூட…

“இப்போ என்னாச்சு சாரு?...”

“என்ன ஆகணும் தீபா?...”

“மஞ்சுளாக்கா… நீங்க இன்னொரு டீ போடுங்க… போட்டுட்டு கூப்பிடுங்க… நானே வந்து குடிச்சிக்கிறேன்… அப்புறம் இவ அதையும் பிடுங்கிடுவா…”

அவன் புன்னகை பாதி, கேலி பாதியாய் கூறிட,

“ஸ்டாப் இட்… தீபா…” என கத்தினாள் அவள் ஆங்காரமாய்…

அவளின் அந்த ஆங்காரம் அவனை சற்றே மிடறு விழுங்க செய்திட, பயத்தில் சிலை என நின்றிருந்த மஞ்சுளாவிடம்,

“மஞ்சுளாக்கா… நீங்க போங்க… நான் பேசிக்கிறேன்…” என அவரை சமையலறைக்குள் அனுப்பி வைத்தான் தீபன்…

அவர் செல்லும் வரை அமைதியாய் இருந்தவள், “ஏன் தீபா இப்படி செஞ்ச?...” என்றாள் ஆதங்கத்துடன்…

“ஓ… விஷயம் தெரிஞ்சு போச்சா?.. செம ஸ்பீடா இருக்கு… அதுக்குள்ள போன் போட்டு ஒப்பிச்சிட்டாங்க போல எல்லாத்தையும்…”

“இப்படி பேசாதன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்குறேன் தீபா… நீ என் பேச்சை கேட்கவே மாட்டியா?...”

“நானும் உனக்கு பல தடவை சொல்லிட்டேன்… நல்லவளா எல்லாருக்கும் இருக்காதன்னு… அதை ஏன் சாரு நீ கேட்கவே மாட்டிக்குற?...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.