தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ
“இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே
கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே
இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது
என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே
மலர்களை அள்ளி வந்து மகிழ்வுடன் கையில் தந்து
மனதினை பகிர்ந்திடவே ஆசை கொள்கின்றேன்
இது ஒரு கனவு நிலை
கரைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை நானும் கண்டேனே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல..”
அந்த ஏழு நாட்களும் எப்படி நகர்ந்ததென தெரியவில்லை நிர்பயவிற்கு..மனமெங்கும் சந்தோஷம் மட்டுமே நிறைந்திருக்க அதை நினைத்தவாறே படுக்கையிலிருந்து எழக்கூட தோன்றாமல் படுத்திருந்தாள்..லேசாய் திரும்பி படுத்தவன் கண்விழிக்க,கண்விழித்திருக்கும் தன்னவளை கண்டு தூக்கம் தெளிந்தான்..
“என்னாச்சு நிரு தூங்கல???”
“இல்லப்பா முழிப்பு வந்துடுச்சு..ஆனா எழுந்துக்க தோணல..”
“என்னாச்சு உடம்பு எதுவும் டயர்டா இருக்கா???”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல..இன்னைக்கு நாம ஊருக்கு கிளம்பனும்ல..அதான்..எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்..முக்கியமா அம்மாவ..”
“அடடா..இப்படி ஒரு மருமகள உலகத்துல பாக்கவே முடியாது போ..சரி உண்மையை சொல்லு இவங்கள விட்டு வர கஷ்டமா இருக்கா இல்ல இந்த போலீஸ்காரன தனியா சமாளிக்னுமேனு பயமா இருக்கா???”
“ச்சச்ச அப்படிலாம் இல்லங்க..”
“ம்ம் சரி சரி ரொம்ப யோசிக்காம போய் எனக்கு ஒரு காபி மட்டும் எடுத்துட்டு வரியா??”
ஐயோ சாரி இதோ டூ மினிட்ஸ் எடுத்துட்டு வரேன்ங்க என எழுந்து கீழே சென்றவளை பார்த்தவனுக்கு அவளின் மனநிலை நன்றாகவே புரிந்தது..இருப்பினும் என்றாவது ஒருநாள் அந்த நிலைமையை எதிர்கொள்ளத்தான் வேண்டும்..அதற்காக தான் சீக்கிரமாகவே சென்னைக்கு கிளம்புவதும்..
அவள் மகிழ்ச்சியாய் இருப்பதாய் இருந்தாலும் தாங்கள் இருவர் மட்டுமே இருக்க போகும் இடத்தில் அவள் மனது எப்படியிருக்கும் என சொல்ல முடியாது..சரோஜாவிடமும் பேசியிருந்தான்..அவரும் நிர்பயாவிடம் பேசுவதாய் கூறியிருந்தார்..எல்லாம் நல்லதாய் இருக்க கடவுளை வேண்டியவன் அன்றைய நாளை எதிர்கொள்ள தயாரானான்..
மதிய உணவிற்கு மேல் தமிழ் வேண்டியவை சில வாங்குவதற்காக கடைக்குச் செல்ல நிர்யா சரோஜாவையே சுற்றி வந்தாள்..அவள் மனவோட்டம் புரிந்தவர் அவளையும் அழைத்து டைனிங் டேபிளில் அமர்ந்தார்..
“என்ன நிர்யா ஏன் காலைலயிருந்து என்னவோ போலயிருக்க என்னாச்சு???”
“ம்மா நீங்களும் எங்ககூட சென்னை வாங்களேன்..கொஞ்ச நாள் இருந்துட்டு வரலாம்..”
“ஏன்டா என்னாச்சு??தமிழ் எதுவும் சொன்னானா??”
“ஐயோ அதெல்லாம் இல்ல அம்மா..எனக்குதான் நீங்க கூட இருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும்போல தோணுது..”
இங்க பாரும்மா..எதை நினைச்சும் மனசை குழப்பிக்காத..உன் மனசு எனக்கு புரியாம இல்ல..ஆனா உங்க ரெண்டு பேருக்கும் இந்த தனிமை கண்டிப்பா தேவை..ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க ரொம்ப உதவியா இருக்கும்..அதுமட்டுமில்லாம தமிழை நினைச்சு நீ எதுக்காகவும் பயப்பட வேணாம்..என்னை விட அவன் உன்னை நல்லாவே பாத்துப்பான்..
நீயும் அவனைப்பத்தி தெரிஞ்சுக்க நிறையவே இருக்கு..டெய்லி நா போன் பண்றேன்..ம்ம் இங்க அப்பாவையும் தனியா விட்டுட்டு வர முடியாது இல்ல..ராஜியும் வேலைக்கு போக ஆரம்பிச்சுருவா..சரியா இதெல்லாத்தையும் மீறியும் உனக்கு அங்க போனபிறகு என்னை பாக்கனும்னு தோணிணா சொல்லு கண்டிப்பா வரேன்..என்ன சரியா??கொஞ்சமா சிரிக்கலாமே..ம்ம் என தாடைப்பிடித்து கிள்ளி சிரித்தார்..
இரவு ஒன்பது மணியளவில் இருவருமாய் காரில் கிளம்ப அனைவருமாய் விடைகொடுத்து அனுப்பினர்..சிறிது தூரத்திற்கு அவள் ஒன்றுமே பேசாமல் வர தமிழே பேச்சை ஆரம்பித்தான்..
“ஏ ரசகுல்லா நா அவ்ளோ மோசம் இல்ல..இப்படி முகத்தை தொங்கப் போட்டு வரியே..நா வேணா உன்னை இங்கேயே விட்டுரவா கொஞ்ச நாள் இருந்துட்டு வரியா???”
“ம்கும்..வேண்டாம்..சும்மா ஏதோ நியாபகத்துல இருந்தேன்ப்பா..”