(Reading time: 23 - 45 minutes)

கங்காவும் கனகாவும் பணிந்து வரவில்லையென்றால் அவர்களை மிரட்டி பணிய வைப்பது என்பது தான் அண்ணாமலையும் மேனேஜரும் சேர்ந்து போட்ட திட்டம். அதுப்படி கனகாவும் வழிக்கு வந்துவிட்டார். அதேபோல் கங்காவிடமும் நேரம் பார்த்து பேச வேண்டும் என்று முடிவெடுத்திருந்தனர்.

மேனேஜர் முத்து DR எஸ்டேட்டில் வேலை செய்தாலும், அண்ணாமலைக்கு வலது கை போல் இருந்தாலும், அவனுக்கு அங்கே இன்னும் சில எஸ்டேட் ஓனர்களும் பழக்கம். அதுதான் அவனின் சொந்த ஊர் என்பதால், இப்படி சில பேரோடு பழக்கம் வைத்துக் கொண்டு, அவர்களுக்கு தேவையெனும் போது எடுபடி வேலை செய்வது, அவர்கள் விடுமுறைக்கு இங்கே தங்க வரும்போது, அவர்களுக்கு மது, மாது போன்றவற்றை ஏற்பாடு செய்து தருவதென்று கேவலமான பிழைப்பை பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்படி ஒரு எஸ்டேட் ஓனர் தான் அவர்கள் எஸ்டேட்டில் விருந்தினர்கள் தங்கியிருந்த போது அவர்களுக்கு ஆடைகள் தைத்து கொடுத்த கங்கா இரண்டு முறை அங்கே வந்த போது பார்த்திருக்கிறான். அவனுக்கு வயது நாற்பதுக்கு மேல். கங்காவை பார்த்ததிலிருந்தே அவள் மேல் பித்து கொண்ட அந்த எஸ்டேட் ஓனர், அவளை தன் ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள எண்ணியிருக்கிறான். அந்த ஆசையில் அவளை பற்றி விசாரித்த போது கங்காவை பற்றிய எந்த தகவல்களும் அவனுக்கு கிடைக்கவில்லை. அந்த சமயம் கங்கா இங்கே துஷ்யந்தனின் மனைவியாக எஸ்டேட்டில் இருந்தாளே.. இது தெரியாமல் அவளை பற்றி எந்த தகவல்களும் கிடைக்காததால் அந்த எஸ்டேட் ஓனர் மேனேஜரின் உதவியை நாடியிருக்கிறான்.

அவன் தேடும் பெண் கங்கா என்பதை மேனேஜர் அறிந்துக் கொண்டதும், அவனுக்கு ஜேக்பாட் அடித்ததாக மகிழ்ந்தான். அந்த எஸ்டேட் ஓனருக்கு கங்காவை பழக்கப்படுத்திவிட்டால், பணம் கிடைக்கும், அதனால் துஷ்யந்த் வாழ்க்கையை விட்டு கங்கா நிரந்தரமாக விலகிவிடுவாள். அதனால் அண்ணாமலையும் அவனை நன்றாக கவனிப்பார். இதனால் இரண்டு லாபம் என்பதை உணர்ந்தவன், கங்காவை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்தான்.

ஏற்கனவே துஷ்யந்த் விஷயத்திற்கே கனகா வழிக்கு வரவில்லை. அதனால் கனகாவை நம்பி காரியத்தில் இறங்க முடியாது என்று யோசித்தவன், கனகாவின் மகன், மருமகளிடம் பேசினான். கனகாவின் மருமகளும் பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்படுபவள். கங்காவை சம்மதிக்க வைத்து எஸ்டேட் ஓனரிடம் அனுப்பி வைத்தால், நிறைய பணம் தருவதாக மேனேஜர் கூறியதும், அதற்கு சம்மதித்தாள்.

ஆனால் கங்காவோடு அவள் பழகியதில்லை. அதனால் அவள் தன் மாமியாரின் உதவியை  நாடினாள். “நிறைய பணம் கிடைக்கும்,  நீங்க இனி தனியா இருக்க வேண்டாம், எங்க கூடவே இருக்கலாம்.. அதுவும் மகாராணி மாதிரி உக்கார்ந்துக்கிட்டே எது வேணுமோ கேக்கலாம்” என்று ஆசை வார்த்தை காட்டினாள்.

கனகாவிற்கும் பணத்தின் மீது ஆசை தான், ஆனால் அதற்காக இப்படி கீழ்த்தரமான வேலைகளை செய்ய நினைத்ததில்லை. ஆனால் இப்போது தன் மருமகள் பேச பேச மனம் மாறினார். என்ன தான் பணம் இருந்தாலும் இந்த வயதான காலத்தில் தனிமை வாழ்க்கை கொடுமையல்லவா.. இதுவரை கங்காவிடமும் யமுனாவிடமும் உத்தரவு போட்டு பழகிவிட்டார். அவர்களும் அமைதியாக செய்துவிட்டு போய்விடுவார்கள். அவர்களை பொறுத்தவரை அத்தை தங்களுக்கு துணையாக இருந்தால் போதும் என்ற எண்ணம் தான்..

இனி அவர்களும் இல்லாமல், தனியே அனைத்து வேலைகளையும் செய்துக் கொண்டு வாழ வேண்டும். திடீரென உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டால் யார் பார்ப்பார்? அதுவே மகன், மருமகளோடு இருந்தால் அது வேறு இல்லையா? இப்படியெல்லாம் சிந்திக்க தொடங்கியவருக்கு அந்த விஷயம் தப்பாக தோன்றவில்லை.

அதிலும் முன்பானால் கங்கா கன்னிப் பெண், இப்போதோ மூன்று மாதம் ஒருவனோடு இருந்துவிட்டு வந்திருக்கிறாளே, எப்படியும் அண்ணாமலை அவளை துஷ்யந்தோடு வாழ விடப் போவதில்லை. தனியாக இருந்து அவள் அல்லல் படுவதற்கு இப்படி இருப்பதில் தவறில்லை என்று தனக்கு தானே ஒரு நியாயம் கற்பித்துக் கொண்டார். ஆனால் அதை கங்காவிடம் சொல்லி எப்படி சம்மதம் வாங்குவது என்று தான் தெரியவில்லை.

அவள் தன்னை கண்டுக் கொள்ளாமல் தங்கையிடம் மட்டும்  பேசி முடிவெடுத்ததிலேயே அங்கே இருந்து அவளை அனுப்பிவிட்டார்கள் என்பதை கனகாவால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் அவள் தளர்ந்து போய் வருவாள். அவளிடம் சமாதான வார்த்தைகள் பேசி இதற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக அவள் நிமிர்வாகவே வந்தாள். இவரை கொஞ்சம் கூட கலந்துக் கொள்ளாமல் யமுனா விஷயத்தில் அவளே முடிவெடுத்தாள். இதெல்லாம் பார்த்தபோது கங்காவை எப்படி வழிக்கு கொண்டு வர போகிறோம் என்றிருந்தது. ஆனால் மருமகள் பேசியதை நினைத்து பேசியே ஆக வேண்டும் என்று கங்கா வீட்டுக்கு வந்ததும் மெல்ல தயங்கி தயங்கி ஒருவாறு விஷயத்தை சொல்லி முடிக்கவும் கங்கா ரௌத்திரமானாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.