தொடர்கதை - காதலான நேசமோ - 08 - தேவி
தன் அம்மாவிடம் பேசிவைத்த ஷ்யாமிற்கு குழப்பமான மனநிலையே மிஞ்சியது. சற்று நேரம் யோசித்தவன், தன் அத்தைக்கு போன் செய்தான். சபரி போன் எடுக்கவும்,
“அத்தை, மித்ராவிற்கு இருக்கும் பிரச்சினை பற்றி மாப்பிள்ளை வீட்டில் சொல்லிடீங்களா?
“என்ன ஷ்யாம் கேட்கற? அது எப்படி சொல்றது? அதோட இப்போ எல்லாம் அவ நார்மலா தானே இருக்கா. ?
“இருந்தாலும், அவளை பத்தி நீங்க சொன்னாதானே அவங்க அவளை புரிஞ்சிப்பாங்க. இல்லாட்டா மித்ரா கஷ்டபடுவாளே”
“அது.. “ என்று தயங்கிய சபரி “இல்லை. நானும் யோசிச்சேன். ஆனால் இப்போ சாதாரணமா இருக்கிற அவளுக்கு ஹெல்த் ப்ரோப்லேம் இருக்குன்னு சொன்னால், அத அவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல. அதோட இது வேற மாதிரி பரவிடுச்சுன்னா, அவ லைப் பாதிக்கப்படும் இல்லையா? அதான் ஒன்னும் சொல்லல.”
“ம்ச்ச். நீங்க நினைக்கிற மாதிரி இல்லை அத்தை. அவள் இப்போ பழகின இடத்திலே இருக்கிறதால், அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் புது இடத்துக்கு போயிட்டா, அதிலும் அவள பத்தி தெரிஞ்ச யாரும் பக்கத்தில் இல்லைனா, மறுபடியும் பிரச்சினை வரும் அத்தை.”
“அதுக்காக வர எல்லோர்கிட்டேயும் நாம இத பத்தி சொல்ல முடியுமா ஷ்யாம். “
“அப்படி இல்லை. ஆனால் நிச்சயம் வரைக்கும் வந்த பின்னாடி நாம சொல்லணும். அட்லீஸ்ட் அந்த மாப்பிள்ளைக்கு மட்டுமாவது சொல்லணும்”
“சரி.. ஆனால் இப்போ யார் சொல்றது?
“ஹ்ம்ம்.. இந்த நிலைமையில் பெரியவங்க நீங்க பேசினால், அவர் அம்மாகிட்டே பேசுங்கன்னு சொல்லத்தான் வாய்ப்பு இருக்கு. “ என்று யோசித்தவன்,
“அஸ்வின் ஊர்லேதானே இருக்கான். “ என்று கேட்டான்.
“ஆமாம் பா.. அவனை பேச சொல்லலமா ?” என்று சபரி கேட்டார்.
“சரி. அஸ்வின் கிட்டே நானே பேசறேன். நீங்க ஒன்னும் சொல்லிக்க வேண்டாம்.” என்று கூறினான்.
“சரிப்பா ஷ்யாம். வேற ஒன்னும் பிரச்சினை வராது இல்ல?”
“வரக்கூடாதுன்னு தான் அத்தை இவ்ளோ யோசிக்கிறேன்” என்று கூறி வைத்தான் ஷ்யாம்.
இதற்கு மேல் ஷ்யாமினால் முடியவில்லை. சென்ற சில நாட்களாக அவனின் அதிக வேலைப்பளுவில் கிடைத்த முதல் இடைவெளியில் சற்று நேரம் ஓய்வு எடுத்து இருந்தாலும், அதற்கு பின்னான மன உளைச்சலில் இப்போது இன்னும் ஓய்வு தேவைப்படவே, படுத்து தூங்க ஆரம்பித்தான்.
மறுநாள் காலையில் வழக்கம் போலே எழுந்தது முதல் மித்ராவின் நினைவுகளே. அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்த போதும், நேர வித்தியாசம் காரணமாக விட்டுவிட்டான்.
அன்று மாலை வேலை முடித்து வந்த பின்பு, மித்ராவிற்கு அழைத்தவன், அவள் எடுக்கவும்,
“ஹலோ மித்து, எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் அத்தான்.”
“குட். அப்புறம் சொல்லுங்க மேடம். உங்க வுட்பி பத்தி.”
“அவர பத்தி என்ன கேட்கறீங்க அத்தான்.? படிப்பு, வேலை எல்லாம் தான் உங்களுக்கு தெரிஞ்சு இருக்குமே”
“நான் அத பத்தி கேட்கலையே. அவர் ஆள் எப்படி இருக்கார்?
“எப்படி இருக்கார்னா, நார்மல் உயரம், அதற்கேற்ற உயரம் , நல்ல கலர்”
“பார்ரா.. மிது இவ்ளோ எல்லாம் நோட் பண்ணிருக்கியா? என்று கேலி செய்யவும்,
“ம். போங்க அத்தான். கிண்டல் பண்றீங்க” என்றாள்.
“சரி. அவர் எப்படி பழகுறார்?
“அத பத்தி சொல்லதெரியல. இன்னும் சரியா அவர்கிட்டே நான் பேசினதே இல்லை. “
“சரி விடு. அவர் இனிமேல் பேசுவாரா இருக்கும். “ என்று கூறியவன் “உனக்கு ஜெர்மன்லேர்ந்து என்ன வாங்கிட்டு வரட்டும்?
“நீங்களே எது வேணாலும் வாங்கிட்டு வாங்க அத்தான்”
“நான் வாங்கறது இருக்கட்டும். கல்யாணம் ஆக போற பொண்ணு நீ. உனக்கு ஸ்பெஷலா ஏதாவது வேணும்னா சொல்லு வாங்கிட்டு வரேன்”
“எனக்கு அப்படில்லாம் எதுவும் தோனலையே?”
“சரி. உன் சார்பிலே உன் வுட்பிக்கு எதாவது வாங்கட்டுமா?
“எதுக்கு அத்தான்?
“நீ அவருக்கு கிபிட் கொடுக்கலாமே? சர்ப்ரைசா இருக்குமே”
“ஹ்ம்ம் .ஆனால் அவருக்கு நான் கொடுக்கிற கிபிட் பிடிக்குமான்னு எப்படி தெரியும்?
“நான் இன்னும் பதினஞ்சு நாள் இங்கே தான் இருப்பேன் மிது. நிச்சயம் முடிஞ்சாச்சு இல்ல. அதனால் அவர் உன்கிட்ட பேசுவார்ன்னு தோணுது. அப்படி பேசினார்னா அவருக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சு எனக்கு சொல்லு. நான் வாங்கிட்டு வந்து தரேன். நீ அவருக்கு கிபிட் கொடு. ஒகேவா ?